துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள்

துணைவியின் இறுதிப் பயண
நினைவு நாள்

[9/11]
[நவம்பர் 9, 2018]
 
சென்ற ஆண்டு இந்நேரம்
சிரித்துக் கொண்டி ருந்தாள் என்னோடு.
நடமாடிய தீபம்
இன்று தொங்கும்
படமாகிப் போனாள் !
விதி வகுத்த வழி
இழுத்துச் செல்லும் எம்மை !
பூம்புகார் நகரிலிருந்து விதி
தம்பதிகளைத்
தள்ளிச் சென்றது போல்
என் துணைவிக்கு
இறுதி முடிவு !

++++++++++

அன்னிய மாதர் அனைவரும்,
ஒட்டுமில்லை எனக்கு
உறவுமில்லை !
மருத்துவ மனையில்
மனமுடைந்து
நான் அழும் போது
ஒடிவந்து அணைத்துக் கொண்டு
ஆறுதல் அளித்த அந்த
மருத்துவ மாது !
“மனைவி பிழைக்க மாட்டாள்
போவென,” என்னை
டாக்சியில் அனுப்பிய கனிவு
டாக்டர் மாது !

 

++++++++++++
 

மனைவி மரித்து விட்டாள்
எனத் தகவல் கேட்ட
உடனே
இரங்கல் மடலோடு
ஏந்திய
மலர்க் கொத்தோடு
இருகண்களில்
தாரை தாரையாய்க்
கண்ணீர் சிந்த
ஓடிவந்து அணைத்துக் கொண்டு
ஆறுதல் அளித்த
ஜெவோஹா விட்னஸ்
மாது !
அடுத்த நாள் ஆவி பறக்க
சுடச்சுட சூடாக
சூப்பு தயாரித்து எனது
கரங்களில் கொடுத்த அதே
கனடா மாது !
 ++++++++

 

மாதமிரு முறை
வீட்டைத் துடைக்க வரும்
பணி மாது !
வேலை செய்யப் போன
வீட்டில்
மனைவி மரித்து விட்டாள் எனக்
கேட்ட போதே
தேம்பித் தேம்பி அழுத மாது !
அடுத்த நாள்
பூக்கும்பா கொண்டு வந்த
வீட்டுப் பணி மாது !

துணைவி மரித்து விட்டாள் எனக்
பக்கத்து வீட்டுக்
காவல்துறை நண்பரிடம் நான்
சொல்லிச் சென்ற பின்,
நோயுடன் படுத்துக் கிடந்த
அவரது மனைவி,
கதவைப் பட்டெனத் திறந்து
போர்வை எதுவு மின்றித்
துள்ளி ஓடி வந்து
என்னை நிறுத்தி
தெருவிலே அழத மாது !

 

+++++++++++++++

 

மனைவி மரித்த தற்குக்
கண்ணீர் விட்ட
அன்னிய வனிதையர்.
மனப் பாறையில் செதுக்கி நான்
மறக்க முடியாத அந்த
மாதரெல்லாம்
பூதலத்தில் பிறந்த
புனித மகளிர் !

 

+++++++++++++++++

 

 

துணைவியின் இறுதிப் பயண
நினைவு நாள்
[9/11]
[நவம்பர் 9, 2018]
 
 

 

வெள்ளிக் கிழமை !
துணைவியின்
இறுதிப் பயண நாள் அது
தலைவலி
உள்ளதெனக் கூறி மாலை
ஐந்து மணிக்கு,
ஆரஞ்சுவில் ஓட்டலில்
காபி தயாரித்து
என்னுடன் காபி அருந்தி
உரையாடியது,
அதன் பின்
இளைய புதல்வியுடன் இனிதாய்ப்
பேசியது !
ஹார்வி, சுவிஸ் சாலே
ஓட்டலுக்குப் போவீர் என்று
எங்கள் திசையை மாற்றியது
இளைய மகள் !

 

 

இரவு உணவு உண்ணப்
போவது
ஆறு மணிக்குத் தான் என்று
மீண்டும் மீண்டும்
அழுத்திக் கூறியது
மனைவி !
ஆறு மணி தாண்டி
நாங்கள்
கார் போகும் போதுதான்
நேர்ந்தது 9/11 விபத்து !
இரத்தக் குழல் குமிழ் விரிந்து
உள்வெடிப்பு
உரத்த குரலில் வலியில்
கத்தினாள் !
 
என் நெஞ்சைப் பிளந்தது
அக்குரல் !
911 எண்களைத் தட்டினேன் !
மணியடித்து
அவசரக் காப்பு வாகனம்
வந்தது உடனே !
மருத்துவரிடம்
வலியோடு தன் பெயரை
வயதைச்
சொல்லி இருக்கிறாள்

ஒருமுறை.

 

மருத்துவ மனையில்
தாங்கா வலியுடன் தவித்துக்
கண்திறந்து பார்த்து
என் இடது கையைப் பற்றியது
இறுதியில் !
கண்மூடி, வாய்மூடிய சமயம்,
புதல்வியர் பேசிய போது
கால், கைவிரல் மட்டும் அசைந்தன,
இடது கண்ணில்
வடிந்தது ஒரு சொட்டுக் கண்ணீர்
துணைவியின்
இறுதிக் கண்ணீர் !
 

++++++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன், கனடா

போர்ப் படைஞர்  நினைவு  நாள் (நவம்பர் 11, 2019)

போர்ப் படைஞர்  நினைவு  நாள்

(நவம்பர் 11, 2019)

 

மூலம் ஆங்கிலம் :  ஜான் மெக்ரே
(கனடா  போர்த் தளபதி)
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

போர்த் தளங்களில் அணி அணியாய்
பூத்துக் கிடக்கும்,
எண்ணிலா
செந்நிறப் பாப்பி மலர்கள்
சிலுவை களுக்கு இடையே !
நெஞ்சை உலுக்கும் காட்சி !
மேலே பாடி பறக்கும் குயில்கள்
பயம் ஏதுவு மின்றி,
கீழே  பீரங்கிச் சத்தம் மெதுவாய்க்
கேட்டு குறையும் !

செத்துப் போனது நாங்கள் !
சில நாட்க ளுக்கு முன்பு பூமியில்
சீராய் வசித்தவர் நாங்கள் !
காலைப் பொழுதை உணர்ந்தோம் !
மாலைப் பொழுதில் மங்கிச்
செங்கதிர்
மறைவதைக் கண்டோம்.
நேசித்தோம்,
நேசிக்கப் பட்டோம் நாங்கள் !
இப்போது
போர்த்தளப் புழுதியில்
வீழ்ந்து கிடக்கிறோம் !

பகைவ ரோடெம் போரைத்
தொடர்வீர் !
தளரும் எமது கைகள்
தருவது
உமது கைக்கு
எரியும் தீப்பந் தங்கள் !
ஏந்திக் கொண்டு தாக்குவீர்.
இறந்தவர் நம்பிக்கை
நிறைவே றாது போனால் ,
உறக்கம் வாரா தெமக்கு ,
போர்த் தளம் யாவும்
எண்ணிலா
செந்நிறப் பாப்பி மலர்கள்
செழித்துக் குலுங்கினும் !

+++++++++++++++++++++++++++

Image result for in flanders fields poem

துணைவியின் இறுதிப் பயணம்

அமர கீதங்கள்

துணைவியின் இறுதிப் பயணம்

சி. ஜெயபாரதன், கனடா

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

[Miss me, But let me go]

++++++++++++++

என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன்

தோற்றம் :  அக்டோபர்  24, 1934

மறைவு : நவம்பர் 18, 2018

++++++++++++++++++

 

தமிழ்வலை உலக நண்பர்களே,

எண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன்,  ஆழ்ந்து, கனிவோடு எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன.

உங்கள் அனைவருக்கும் என் கனிவான நன்றிகள்.

என் அருமை மனைவியின் இறுதிப் பயணத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

+++++++++++++

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்,வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

மனைக்கு விளக்கு மடவாள்.

நெருநல் உள ஒருத்தி இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு.

[வள்ளுவப் பெருமான் என்னை மன்னிப்பாராக]

+++++++++++

[1]

படமாகிப் போனாள்\!

நடமாடும் தீபம் புயலில்
அணைந்து போய்,
சுவரில்
படமாகித் தொங்கும் !
வசிப்பு
இடம் மாறிப் போகும்
பூமியின்
தடம் மாறி நோகும் !\
விட்டு
விடுதலை யாய் ஏகும் !

+++++++++++

[2]

சொல்லாமல் போனாள்

பூவோடு போனாள் !
நெற்றிப்
பொட்டோடு போனாள் !
மங்கலத்
தாலியுடன் போனாள் !
என்னைத்
தவிக்க விட்டுப் போனாள்.
தங்க ரதத்தின்
பயணம் நிறுத்தம்
ஆனது !
செல்லும் போது
சொல்லாமல் போனாள்.

+++++++++++

[3]

தனிப்பறவை

துணைப் பறவை போனது
துடிப்போடு !
தனிப் பறவை நான்
தனியாய்க் குமுறி
தவிக்க விட்டுப் போனது !
இனி வீட்டில்
காத்திருக்க எனக்கு
எனது இல்லத்தரசி ஏது ?
உணவு ஊட்டும்
வளைக் கரங்கள் ஏது ?
கண்ணோடு
கண் இணை நோக்கிக்
கனிவு கொடுக்கும்
பெண் ஏது ?

+++++++++++

 [4] 

நொடிப் பொழுதில்

துடி துடித்துப் போனதே என்
துணைப் புறா !
என் நெஞ்சில்
அடி அடித்துப் போனதே என்
ஆசைப் புறா !
இடி இடித்துப் போனதே என்
இல்வாழ்வில் !
நொடிப் பொழுதில்
முடிந்து போகும் அவள்
தொடர் கதை !
கண் திறந்து நோக்கி
கடைசியில்
கை பிடித்துப் பிரிந்ததே என்
கவின் புறா !

+++++++++++

[5]

முடிந்த கதை

இதய வீணை கை தவறி
உடைந்த பிறகு
இணைக்க முடியுமா ?
புதிய கீதம் இனி அதிலே
பொங்கியே எழுமா ?
உதய சூரியன் எனக்கினி மேல்
ஒளியும் வீசுமா ?
விதி எழுதி முடித்த கதை
இனியும் தொடருமா ?

+++++++

[6]

நேற்று,

நேற்று
ஒளிகாட்டி, வழிகாட்டி
நடமாடிய தீபம்,
புயல்
காற்றிலே
அணைந்து போய்,
வீட்டுச் சுவரில்
படமாகித் தொங்கும்
இன்று,
மாலை போட்டு !

++++++++

[7]

மெய்க்காட்சி

கண்முன் உலவும்
உண்மைத் திரைக் காட்சி
உன் கண்ணுக்கு
தெரியாது !
உடனுள்ள உயிர்ப் பிறவி
ஒன்று நிலவி
உன்னருகில் உதவி வருவது
உனக்குத் தெரியாது !
அதன்
உன்னதம் புரியாது !
உயிர் பிரிந்து
போன பிறகு தான்
அதன் இழப்பு,
உனது
ஊனை உருக்குது !
உடலை முடக்குது
உயிரைக் கசக்குது !

+++++++++++++

[8]

புனிதவதி

எனக்காகப் பிறந்தாள்,
எனக்காக வளர்ந்தாள்,
எனக்காகப் பூத்தாள்,                                                                                          ஒருமுறை நான் பார்த்து                                                                         ஒப்பிய திருமணம்.
என்னையே மணந்தாள்,
என் இல்லத் தீபத்தை
ஏற்றினாள்,
ஐம்பத் தாறு ஆண்டுகள்,                                                                            ஆதவன் உதித்தது ! அத்தமித்தது !
ஆனால் இன்று
நின்றதவள்
கைக் கடிகாரம்.

+++++++++++++++

[9]

ஒருவரி

ஒருவரி எழுதினால்
எழுதென
ஒன்பது வரிகள்
வாசலில்
வரிசையாய் காத்திருக்கும்,
கண்ணீரோடு !
புண்பட்ட வரிகள் !
வரிசை கலைந்து
முதலில்
என்னை எழுது,
என்னை எழுது என்று
கெஞ்சும் !
என் டைரியில்
உன் கையெழுத்தை இடுவென
முந்தும் !
எழுதி, எழுதி, எழுதி
என் மனம் தினம் இப்படி
அழுதால்,
ஆறுதல் கிடைக்கும்
எனக்கு
நூறாண்டுக்குப்
பிறகு !

+++++++++++++

[10]

கால வெடி
[Time Bomb]

காத்திருந்தான் காலன் !
வேர்த்து நின்றான்
கதவருகில் !
கயிறை மாட்ட வந்தான்
எமதர்மன் !
பற்ற வைத்துப் புகையும்
கால வெடி
பட்டென வெடித்தது !
காலவெளியில்
நேர்ந்த
பெரு வெடிப்பு அது !
இரத்தக் குழல்
குமிழ் உப்பிக் கிழிந்து                                                                                குருதி கொட்டும் !                                                                                    நில்லாது
குருதி கொட்டும் !
கொட்டி
ஆறாய் ஓடும் !
மருத்துவர்
இரத்தம் கொடுத்தார்
பை, பையாக
கை கடுக்க, கால் கடுக்க
மெய் கடுக்க !
தெய்வீக மருத்துவப் பெருமக்கள்
செய்யும் விடா முயற்சி                                                                     கண்டேன் !                                                                                                                 வாழ்க ! வாழ்க !
நீடு வாழ்க அவரினம் !
அபாய அறுவை முறை
வெற்றியே !
ஆனால்                                                                                                              இறுதியிலே
அவள் கைக் கடிகார
முள் அசைவு
நின்றது !

+++++++++++++

[11]

எழுதப் பட்டிருக்கிறது !

எப்படித் துவங்கும் அவள்                                                                     இறுதிப் பயணம் ?
எப்போது
எச்சரிக்கை மணி
அடிக்கும் ?
எப்படி அவள் கதை முடியும்
என்றெனக்குத்
தெரியாது !
ஆனால்
அது முன்பே
எழுதப் பட்டுள்ளது !  முன்பே                                                                                 திட்டமிடப் பட்டது !
காலன் விடும்
ஓலம் வரும் முன்னே !
எமன் சவுக்கடி
மின்னல் வரும் பின்னே !
அவள் ஆத்மா
இப்படித் தான் பிரியும்,
தனித்து நான்
இப்படித் தான் குமுறிக் குமுறித்
தவிப்பேன் என்று,
எழுதப் பட்டுள்ளது !

++++++++++++++++

[12]

கண்ணீர்த் துளிகள்

எனது கண்ணீர்
உமது கண்ணீர் ஆனது !
உங்கள் கண்கள்
சிந்தும்
வெந்நீர்த் துளிகள்
என் கண்ணீர்
ஆனது !
எங்கள் வீட்டுக் குழாயும்
கசிந்து
கண்ணீர் சொட்டும்
எனக்கு !
ஓருயிரின் இழப்பு பெரும்
பாரமாய்க் கனத்து,                                                                                            பாரெங்கும் பரவி
காலவெளி,
மதம், இனம், தேசம்
கடக்கிறது !

+++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்.

ஒளியின் நர்த்தனம்!

sunlight-beams.jpg

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

மின்னொளியே!
என்னரும் ஒளியே!
உள்ளத்துக் கினிய ஒளியே!
விழிகள் முத்தமிடும் ஒளியே!
உலகை மூழ்க்கிடும் ஒளியே!
என் கண்மணியே!
நர்த்தனம் ஆடும் ஒளிக்கதிர்கள்,
வாழ்வின்
வாலிபக் காலத்தில்!
மோதி மீட்டும் ஒளிச் சிதறல்,
காதல் வீணையின்
நாண்களை!
மின்னலிடி திறக்கும் விண்ணை!
மீறிக் கொண்டு
ஏறி அடிக்கும் காற்று!
என் கண்மணியே!
வானத்தின் மின்னல் வெடிச்சிரிப்பு
ஞாலத்துக்கும் அப்பால்
தாவிச் செல்லும்!
தமது
பாய்மரத்தை விரித்துப்
பட்டுப் பூச்சிகள்
படகாய் மிதந்தேகும் ஒளிக்
கடல் மீது!

அல்லி மலர்களும்,
மல்லிகைப் பூக்களும்
ஒளியலைகளின்
சிகரத்தில்
ஊர்திபோல் எழுகின்றன!
ஒவ்வொரு முகிலின்மேல்
முட்டிச் சிதறி
ஒளிக் கதிர்கள்
பொன்னிறம் பூசுகின்றன,
என் கண்மணியே!
விலை மதிப்பில்லா
பளிங்குக் கற்களை மென்மேலும்
பன்னிற ஒளிச் சிதறல்
பண்ணிடும் மேகம்!
பூவிதழ் விட்டுப் பூவிதழ் மேவி
தாவிப் பரவும் எனது
பூரிப்பு!
அளக்க வழி யில்லை உள்ளக்
களிப்பை!
விரைவாக மழை பெய்து
கரைகளை
மூழ்க்கி விட்டது,
ஆகாயக் கங்கை!
வெள்ளமாய்ப் பெருகி,
வெளியேறும்,
எந்தன் உள்ளக்
களிப்பு!

*****************

இறைவன் எங்குள்ளான் ?

cover-image-tagore-r-1.jpg

கீதாஞ்சலி (11)

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து,
துதி பாடி, தோத்திரம் பாடி,
கையால்
ஜெபமாலை உருட்டி
உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை
நிறுத்தி விடு!
கோயில் தனி மூலையில்,
கதவுகளை மூடி,
கண்களை மூடிக் கொண்டு
காரிருளில் நீ
யாரைப் பூஜிக்கின்றாய்?
கண்களைத் திறந்துபார்,
உன் இறைவன்
முன்னில்லை என்பதை!
மெய்வருந்தி
இறுகிப் போன வயலை
உழவன் எங்கே
உழுது கொண்டு இருக்கிறானோ,
வேர்வை சிந்தி
நடைபாதை போடுபவன்
எங்கே கல்லுடைத்து வருகிறானோ
அங்கே உள்ளான் இறைவன்!
வெட்ட வெயிலிலும்
கொட்டும் மழையிலும்
தூசி படிந்த ஆடையுடன்,
உழைப்பாளி
உடன் குடியுள்ளான் இறைவன்!
புனிதமான
உன் காவி மேலங்கி
உடையை எறிந்து விட்டு
புழுதி நிரம்பிய
பூமிக்கு இறங்கி
உழவரைப் போல்
உன் தடங்களைப் பதித்திடு!

குடும்பப் பந்தங்களி லிருந்து உனக்கு
விடுதலையா?
எங்கே காணப் போகிறாய்
அந்த விடுவிப்பை?
படைக்கும் போதே
நமை ஆளும் அதிபன்,
பந்த பாசப் பிணைப்புகளைச்
சொந்தமாய் மேற்கொண்டு
களிப்புடன்
அளித்து வந்திருக்கிறான்,
உயிர்களுக்கு!
நிரந்தரமாய் நம் எல்லோரையும்
தன்னுடன்
இரண்டறப் பிணைத்துள்ளான்
இறைவன்!
தியானத்தை நிறுத்தி விட்டு
வெளியே வா!
தீபாராதனை, மலர்கள், சாம்பிராணி,
அகர் பத்திகளின்
நறுமணப் புகை அனைத்தையும்
புறக்கணித்து விடு!
உன் ஆடைகள்
கறைபட்டுக் கந்தலானால் என்ன?
தீங்கென்ன நேரும் உனக்கு?
மெய்வருந்திப் பணிசெய்யும்
உழைப்பாளியைச்
சந்தித்து
நில் அவனருகே,
நெற்றி வேர்வை
நிலத்தில் சிந்தி!

*****************

ஆத்மாவின் விழிப்பு!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

cover-bangla-desh1

காத்திருந்து இராப் பொழுதும்
வீணாக  அவனைக்
காணாமல் கழிந்து போனது!
களைத்து போய்
தூங்கி விழுந்த பின்பு
திடுமென
விடியும் வேளையில்
வெளியே நிற்பான் கதவருகில் என
அஞ்சும் என் நெஞ்சு!
நண்பர்களே!
நடந்து வரும் பாதையில் நிற்காமல்,
வருகை புரிய அவனுக்கு
வரவேற் பளிப்பீர்!
நடந்துவரும் அவன்
தட அரவத்தில் நான்
எழும்பா விட்டால் எனை விட்டுக்
கடந்து செல்வீர்!
எழுப்பாமல்
விட்டுச் செல்ல உம்மை
வேண்டிக் கொள்வேன்
பணிவாக!

பறவைக் கூட்டம் ஒருங்கே கூடி
உறக்கம்
கலைக்க வேண்டாம்,
அரவம் எழுப்பி!
வானம் வெளுத்து
பளிச்சிடும் விளக்கொளி விழாவில்
கலக்கிடும் காற்று
எழுப்பிட வேண்டாம் என்னை!
திடுமென
வாசல் அருகே என் கோமான்
வந்து நின்றாலும்,
கலையக் கூடாதென்
தூக்கம்!
அவன் கரம் தொட்டதும்
ஆழ்ந்த தூக்கம்,
என்னரும் தூக்கம்
கலைந்திடு மென்றுதான்,
கண்மூடி யுள்ளேன்!
உன் புன்னகை மின்னொளி
பட்டால் மட்டும்
திறக்குமென்
உறக்க விழிகள்,
காரிருள் தூக்கத்தில்
கண்முன் தோன்றும் கனவுக்
காட்சி போல்!
கண் விழித்ததும் முதற் காட்சியாய்க்
காண வேண்டும்,
என் கோமானை!
அனைத்துக்கும் முன்னுதித்த
ஆதி ஒளிச்சக்தி போல்,
அனைத்து வடிவங் கட்கும்
மூலமான உருவில்
முதலாகக் காண வேண்டும் அவனை!
விழித்தி ருக்குமென்
ஆத்மா வுக்கு
அவன் ஓரக்கண் பார்வை
அள்ளிக் கொடுத்திடும்,
மெய் சிலிர்த்த
பூரிப்பை!
என்னை நான் அறிந்திடும்
தன்னுணர்வு,
என்னை விட்டு நீங்கி
மீண்டும் அவனைச்
சேர்ந்து கொள்ளட்டும்,
சீக்கிரம்!

*****************

எனது இறுதிக் கானம்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

 

எப்படிப் படைக்கலாம்
எனது இறுதிக் கானத்தை?
மெய்வருந்திப் பெற்ற
மனதின்
மகிழ்ச்சிகள் அனைத்தும்
எனது கானத்தில்
பின்னிக் கொள்ளட்டும்!
புல்லினம் காடாய் அடர்ந்து
புதர்கள் பெருகிப்
புவித்தளம் நீட்சி யாகும்
மகத்துவம் எடுத்துச் சொல்லட்டும்!
அகண்ட உலக னைத்தும்
ஆனந்த நடனமிடும்,
பிறப்பு, இறப்பெனும் இரட்டைச்
சகோதரர்
பிணைத்துக் கொண்ட
பிறவி
உறவினை எடுத்துக் கூறட்டும்!
மொட்டிதழ் விரிந்த செந்தாமரை போல்
மட்டிலாத் துயர்கள்
நிலைத்துக்
கண்ணீர் குவிக்க வைக்கும்
சூறாவளி அடிப்புகள்,
கோர தாண்டவம் ஆடி
ஆரவார மூட்டிப்
பெருகும்
வேதனை சிரிப்பு
எனது
கீதத்தில் மலரட்டும்!
தம்மிட முள்ள
பொருள் அனைத்தையும்
தெருப் புழுதியில் வாரி யிறைத்து,
ஒரு வார்த்தை உதிராத
உவகைப் பண்பு
என்னிறுதிப் பாடலில்
ஒலிக்கட்டும்!

*****************

நெஞ்சில் மின்னிய கீதம்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சில் பளிச்சிட்டு நான் பாட
நினைத்த கீதம்
இன்றுவரை
வெளியில் வராமலே
ஒளிந்து கொண்டுள்ளது!
எனது இசைக் கருவியின்
நாண் கம்பிகளை
நான் முறுக்கியும், தளர்த்தியும்
நாட்கள்தான் கழிந்தன!
அந்த கீதம்
வெளிவரும் வேளை
மெய்யாக 
வரவில்லை இன்னும்!
சொற்களை
செம்மையாகக் கோர்க்க முடியவில்லை!
வேட்கை மீறிக் கீதம்
வெளிவரத் துடிக்கும்
வேதனையே வாட்டும் என் நெஞ்சை!
பூரண மாகக் கீதம்
பூத்து விரிய வில்லைச்
சீராக இன்னும்!
அருகில்
பெருமூச்சு விடுகிறது
காற்று மட்டும்!

அவனது முகத்தை நான்
பார்த்திலேன்!
அவனது குரலை நான்
கேட்டிலேன்!
என்வாசல்
முன்னுள்ள முற்றப் பாதையில்
மெதுவாகப் படும்
அவனது
பாத  ஓசைகள் மட்டும் எனது 
காதில் பட்டுள்ளது!
தரைமீது அமர்ந்திட அவனுக்கு
ஆசனம் விரிப்பதற்கே
நாள் முழுதும் கழிந்து
இருட்டி விட்டது
இப்போது!
விளக்கேற்ற வில்லை
இன்னும்!
வாராய் வீட்டின் உள்ளே என
வரவேற்க முடியாத
அவதியில் உள்ளேன்!
ஒருநாள் அவனைச்
சந்திப்போம் என்னும்
நம்பிக்கையில் வாழ்கிறேன்!
ஆனால்
சந்திப்பு ஏற்பட வில்லை
இதுவரை!

  
***************** 

உடையும் பாண்டம்

கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.

அந்திமக் காலமே இன்றி என்னை
ஆக்கியுள்ளாய் நீ!
உவகை அளிப்ப தல்லவா அது உனக்கு?
உடையும் இப்பாண்டத்தை
மீண்டும், மீண்டும்
வெறுமை ஆக்குவாய் நீ!
புத்துயிர் அளித்து,
மறுபடியும் அதை நிரப்புவாய் நீ!
குன்றின் மீதும், பள்ளம் மீதும் நீ 
ஏந்தி வந்த
புல்லின் இலையான
இச்சிறு
புல்லாங்குழல் விடும் மூச்சுக் காற்றில்
கால மெல்லாம்
புதிய கீதங்கள் பொழிய வைப்பாய் நீ!
உந்தன் தெய்வீகக் கரங்கள் என்மேல் படும்போது,
எந்தன் நெஞ்சம்
உவகையின்
எல்லை மீறிச் செல்லும்!
மேலும் அதில்
ஊகிக்க முடியா உரைமொழிகள் உதிக்கும்!
அளவின்றி
அள்ளி அள்ளிப் பெய்த உந்தன்
கொடைப் பரிசுகள் 
எனது இச்சிறு கைகளில் மட்டுமே
கிடைத்துள்ளன!
கடந்து
போயின யுகங்கள்!
ஆயினும்
இன்னும் நீ இப்பாண்டத்தில்
பொழிந்து பொழிந்து கொட்டுகிறாய்!
அங்கே
காலியிடம் உள்ளது இன்னும்,
மேலும் நீ நிரப்பிட!
 
**************

கீதாஞ்சலி (84) – பிரிவுத் துயர்..!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

மரணத் துயர் போல ஏனையப்
பிரிவுத் துன்பந்தான்
பரவி வருகிற திப்போது,
தரணி எங்கணும்!
வரம்பு வேலியற்ற வான்வெளியில்
உருவங்கள்
எண்ணற்ற முறையில் வேறுபட்டு
துன்பப் பிரிவுகள்
கண்திறந்து வெளிவரும்!
இம்மாதிரித்
துக்கப் பிரிவால்தான்,
இரவு முழுவதும்
விண்மீண்கள் தம்மை,
உற்று நோக்கு கின்றன,
ஊமைத் தனமாய்
ஒன்றை ஒன்று!
சலசலக்கும்
இலைகளின் வழியே,
இப்பிரிவுத் துயர்தான்
ஒப்பிலாச் சோகக் கீதமாய்,
வேனிற் காலக் கருவானில்
ஆடி மாதம்
மழைத்துளி களிடையே,
பாடி நுழைகிறது!
அடங்காமல் அத்துமீறிக் கொண்டு
தொடரு மிந்த
துயர்ப் பிரிவுகள்தான்,
காதலாகவும், வேட்கையாகவும்,
பாதாளத்தில் ஊற்றாகிறது,
வேதனை மிஞ்சி!
துக்கங்கள், நகைப்பிடச் சம்ப வங்களாய்
மக்களின்
இல்லங்களில் நிகழும்!
அதுவே தான்
என் கவித்துவ நெஞ்சில்
பாகாய் உருகி ஓடும்
பாடல்களாய்!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 30, 2006)]

திண்ணையில் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா