சி. ஜெயபாரதன், கனடா
அமர கீதங்கள்
என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
[Miss me, But let me go]
++++++++++++++
என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்
தோற்றம் : அக்டோபர் 24, 1934
மறைவு : நவம்பர் 18, 2018 [9/11]
++++++++++++++++++
துணைவியின் இறுதிப் பயணம் – 6
சி. ஜெயபாரதன், கனடா
அமர கீதங்கள்
என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
[Miss me, But let me go]
++++++++++++++
[6]
நேற்று
நேற்று
ஒளி வீசி
நடமாடிய தீபம்,
புயல்
காற்றில்
அணைந்து போய்,
வீட்டுச் சுவரில்
படமாகித் தொங்கும்
இன்று,
மாலை போட்டு !
+++++++++++++
[7]
மெய்க்காட்சி
கண்முன் உலவும்
உண்மைத் திரைக் காட்சி
உன் கண்ணுக்கு
தெரியாது !
உடனுள்ள உயிர்ப் பிறவி
ஒன்று நிலவி
உன்னருகில் உதவி வருவது
உனக்குத் தெரியாது !
அதன்
உன்னதம் புரியாது !
உயிர் பிரிந்து
போய் விட்ட பிறகு
அதன் இழப்பு தான்,
உனது
ஊனை உருக்குது !
உடலை முடக்குது
உயிரைக் கசக்குது !
+++++++++++++
[8]
புனிதவதி
எனக்காகப் பிறந்தாள்,
எனக்காக வளர்ந்தாள்,
எனக்காகப் பூத்தாள்,
ஒருமுறை நான் பார்த்து
ஒப்பிய திருமணம்.
என்னையே மணந்தாள்,
என் இல்லத் தீபத்தை
ஏற்றினாள்
ஐம்பத் தாறு ஆண்டுகள்
ஆதவன் உதித்தான் !
ஆனால் இன்று
நின்றதவள்
கைக் கடிகாரம்.
+++++++++++++++
[9]
ஒருவரி
ஒருவரி எழுதினால்
எழுதென
ஒன்பது வரிகள்
வாசலில்
வரிசையாய் காத்திருக்கும்,
கண்ணீரோடு !
புண்பட்ட வரிகள் !
வரிசை கலைந்து
முதலில்
என்னை எழுது,
என்னை எழுது என்று
கெஞ்சும் !
என் டைரியில்
உன் கையெழுத்தை இடுவென
முந்தும் !
எழுதி, எழுதி, எழுதி
என் மனம் தினம்
அழுதால்,
ஆறுதல் கிடைக்கும்
எனக்கு
நூறாண்டுக்குப்
பிறகு !
+++++++++++++
[10]
கால வெடி
[Time Bomb]
காத்திருந்தான் காலன் !
வேர்த்து நின்றான்
கதவருகில் !
கயிறை மாட்ட வந்தான்
எமதர்மன் !
பற்ற வைத்துப் புகையும்
கால வெடி
பட்டென வெடித்தது !
காலவெளியில்
நேர்ந்த
பெரு வெடிப்பு அது !
இரத்தக் குழல்
குமிழ் கிழிந்து குருதி
கொட்டும் !
குருதி கொட்டும் !
கொட்டி
ஆறாய் ஓடும் !
மருத்துவர்
இரத்தம் கொடுத்தார்
பை, பையாக
கை கடுக்க, கால் கடுக்க
மெய் கடுக்க !
தெய்வீக மருத்துவப் பெருமக்கள்
செய்யும் விடா முயற்சி
கண்டேன் !
வாழ்க ! வாழ்க !
நீடு வாழ்க அவரினம் !
அறுவை முறை
வெற்றியே !
ஆனால்
அவள் கைக் கடிகார
முள் அசைவு
நின்றது !
+++++++++++++
[11]
எழுதப் பட்டிருக்கிறது !
எப்படித் துவங்கும் அவள்
இறுதிப் பயணம் ?
எப்போது
எச்சரிக்கை மணி
அடிக்கும் ?
எப்படி அவள் கதை முடியும்
என்றெனக்குத்
தெரியாது !
ஆனால்
அது முன்பே
எழுதப் பட்டுள்ளது !
காலன் விடும்
ஓலம் வரும் முன்னே !
எமன் சவுக்கடி
மின்னல் வரும் பின்னே !
அவள் ஆத்மா
இப்படித் தான் பிரியும்,
தனித்து நான்
இப்படித் தான் குமுறிக் குமுறித்
தவிப்பேன் என்று,
எழுதப் பட்டுள்ளது !
++++++++++++++++
[12]
கண்ணீர்த் துளிகள்
எனது கண்ணீர்
உமது கண்ணீர் ஆனது !
உங்கள் கண்கள்
சிந்தும்
வெந்நீர்த் துளிகள்
என் கண்ணீர்
ஆனது !
எங்கள் வீட்டுக் குழாயும்
கசிந்து
கண்ணீர் சொட்டும்
எனக்கு !
ஓருயிரின் இழப்பு பெரும்
பாரமாய்க் கனத்து
காலவெளி,
மதம், இனம், தேசம்
கடக்கிறது !
+++++++++++ +++++++++++++++++++++++
[13]
உயிர்த்தெழுவாள் !
விழித்தெழுக என் தேசம்
என்னும்
கவிதை நூல்
எழுதி வெளியிட்டேன்.
ஆனால்
என் துணைவி,
அறுவை சிகிட்சையில்
விழிதெழ வில்லையே என
வேதனைப் பட்டேன்.
இந்துவாய் வாழ்ந்து
பைபிள் பயின்று
கிறித்துவை நம்பும்
உன் துணைவி
உயிர்த் தெழுவாள் என்று
ஓர் அசரீரிக் குரல்
ஒலித்தது உடனே
வெளி வானில் !
+++++++++++++
[14]
நேற்று
ஒளிகாட்டி
நடமாடிய தீபம்
புயல்
காற்றில் அணைந்து,
ஓவியமாகி
வீட்டுச் சுவரில் நினைவுப்
படமாகித்
தொங்குகிறது
இன்று
மாலையோடு !
++++++++++++
[15]
பெருங் காயம் !
உயிர்மெய்க் காயம்
பொய்யாம் !
மண்ணிலே தோன்றிய
பெண்மணிக்கு
எத்தனை,
எத்தனை அணிகள் !
ஜரிகைப் பட்டு
ஆடைகள் !
ஒப்பனைச் சாதனம் !
அனைத்தையும்
விட்டுப்
போனது துணைப் புறா,
இப்போது
துருப்பிடிக் காத
ஒரு கும்பா வுக்குள்
எரி சாம்பலாய்,
அவள் நீடித்த
குடியிருப்பு !
+++++++++++++++
[16]
தொட்ட இடம் !
இவ்வுலகில்
முப்பத்தாறு ஆண்டுகள்
மூச்சிழுத்த
இல்லத்தைப் பூட்டி விட்டுப்
போனவள்,
மீண்டும் திறக்க இங்கு
வரவில்லை !
வீட்டில்
தொட்ட இடம், துடைத்த இடம்
தூய்மை இழந்தன !
சுட்ட சட்டி, அறைத்த
அம்மி
விம்மி, விம்மி
அழுதன !
துவைத்த உடை காயாமல்
ஈரமாய் உள்ளது !
பண்ணிய வடை
இனித் தின்பாரற்று
ஊசிப் போகுது !
மண்ணாகி
மீளாத் துயிலில்
அவள்
தூங்கும் இடம் இப்போது
விண்ணாகிப்
போனது !
++++++++++++++++
[17]
ஆபரணங்கள்
பெண்ணுக்குப்
பொன்னாசை உள்ளது !
உயிர் உள்ளவரை மேனியில்
அணிகள் ஒளிவீசும் !
உயிர் போன பிறகு
எதுகை, மோனை
எதற்கு ?
உபமானம், உபமேயம்
எதற்கு ?
உடை யில்லாத
உயிர்மெய்
சொல்லுக்கே
வல்லமை அதிகம் !
உயிர்மெய்
உலகை விட்டுப் போன
பிறகு
உன் சோக வரலாறு
சொல்ல
இலக்கணம் எதற்கு ?
தலைக் கனம்
போதும்.
+++++++++++++++++++
[18]
இறுதிப் பயணம்
முப்பதாவது நாளின்று !
போன மாதம்
இதே நேரம், இதே நாளில்,
ஓடும் காரில்
பேரதிர்ச்சியில்
இரத்தக் குமிழ் உடைந்து
உரத்த குரல்
எழுந்தது என்னருகே !
ஃபோனில்
911 எண்ணை அடித்தேன் !
அபாய மருத்துவ
வாகனம் அலறி வந்தது
உடனே !
காலன் துணைவியைத் தூக்க
நேரம் குறித்தான் !
ஏக்கத்தில் தவிக்கும் நான் !
நவம்பர் 9 ஆம் நாள்,
இதுவுமோர் 9/11 ஆபத்து தான்
மாலை மணி 6 !
நடுத்தெரு நாடக மாகி,
சிறுகதை யாகி
பெருங்கதை யாகி,
இறைவன்
திருவிளை யாடல்
துவங்கும் !
++++++++++++++
[19]
[டிசம்பர் 9 ஆம் நாள்]
அந்த வெள்ளிக் கிழமை
அற்றைத் திங்கள்
அந்த வெள்ளிக் கிழமை
எந்தன் துணைவியும் இருந்தாள் !
அவளோடு ஒட்டி
நானும் இருந்தேன்.
வீட்டு விளக்கு
வெளிச்சம் தந்தது !
இற்றைத் திங்கள்
இந்த வெள்ளிக் கிழமை
என் துணைவியும் இல்லை !
தனியனாய் நான்
பிரிவு நாள் அது.
பெரிய துக்க நாள் அது !
+++++++++++++++++++
[20]
என் இழப்பை நினை !
ஆனால் போகவிடு எனை !
ஆங்கில மூலம் : ராபின் ரான்ட்சிமன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
பயண முடிவுக்கு நான் வந்த பிறகு
பரிதி எனக்கு அத்தமித்த பிறகு,
கருமாதி எதற்கு துக்க அறையில்,
கதறல் எதற்கு விடுபடுது ஆத்மா ?
என்னை இழப்பது சிறிது காலம், ஆனால்
இழப்பை நீடிக்காதே உன் சிரம் தாழ்த்தி,
நினைவில் உள்ளதா நம் நேசிப்பின் பங்கு,
இழப்பை நினை, ஆனால் போகவிடு எனை.
இப்பயணமே நாமெலாம் எடுக்க வேண்டும்,
இப்படி ஒருவர் தனியாகவே போக வேண்டும்,
ஊழித் தலைபதி இடும் திட்டம் இவையெலாம்.
ஓர் எட்டு வைப்பிவை நம் இல்லப் பாதை மீது.
தனித்து நீ தவிப்பில் இதயம் நோகும் போது
உனக்குத் தெரிந்த நண்பரிடம் நீ சென்று,
உன் துயர்களைப் புதை, நல்வினை புரிந்து.
என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை.
+++++++++++++++++++++++++
துணைவியின் இறுதிப் பயணம் – 5
சி. ஜெயபாரதன், கனடா
என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
[Miss me, But let me go]
++++++++++++++
என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்
தோற்றம் : அக்டோபர் 24, 1934
மறைவு : நவம்பர் 18, 2018
++++++++++++++++++
[21]
எழுதிச் சென்ற ஊழியின் கை !
முடிந்தது
அவள் ஆயுள் என
விதி
மொழிந்தால் நான்
ஏற்க மாட்டேன் !
முடிந்தது
அவள் வினைகள் எல்லாம்
என் வீட்டில் எனக்
காலன்
ஓலமிட்டால் நான்
காதில்
கேட்க மாட்டேன் !
முடிந்தது
அவள் கடமை யாவும்
இந்த உலகில் என
விதியின் கை
எழுதி இருந்தால்,
ஊழியிடம்
ஒரு வினா மட்டும்
கேட்பேன் !
அறுவை முறையை
மருத்துவர் சரியாகச் செய்து
ஒன்பது நாள்
உயிர் கொடுத்தாயே ! ஏன்
ஒன்பதாம் நாள்
சுவாச மூச்சை நிறுத்தினாய் ?
சொல் ! சொல் ! சொல் !
++++++++++++++++
[22]
ஊழியின் எழுத்தாணி
எழுதிச் செல்லும்
ஊழியின் எழுத்தாணி
எழுதி, எழுதி மேற்செல்லும் !
அழுதாலும், தொழுதாலும்
வழி மாறாது !
விதி மாறாது !
நழுவிச் செல்லும்,
உந்தன்
அழுகை காணாது !
காலன் வந்து
வீட்டு வாசலில் நின்று
சிவப்பு மாவில்
கோலமிட்டுக்
குறி வைத்துப் போவான் !
எமனின் நீள் கயிறு
அவளைக் கட்டி
இழுத்துச் செல்லும் !
அவளது இறுதிச்
சடங்கு
ஓலைச் சுவடியில்
ஜோதிடரால்
எழுதப்பட வில்லை, அவளது
மூளைச் சுவரில்
எழுதி வைத்துள்ளது
ஊழ்விதி !
+++++++++++++
[23]
அன்னமிட்ட கைகள்.
எனக்கு
அன்ன மிட்ட கைகள்,
ஆக்கி வைத்த
கரங்கள் மூன்று !
முதலாக
முலைப் பால் ஊட்டிய
என் அன்னை !
இருபத்தி யெட்டு வயது வரை
கண்ணும், கருத்துமாய்
உண்ண வைத்து
ஊட்டி வளர்த்த தாய் !
தாயிக்குப் பின்
தாரம் !
ஐம்பத்தி யாறு ஆண்டுகள்
தம்பதிகளாய்க்
கைப்பற்றி
இல்லறத்தில் வாழ்ந்து
முடிந்த கதை !
மருத்துவ மனையில்
பிரியும் ஆத்மா
பிணைத்தது ஒரு கையை !
என் இடது கையை !
இணையத் துடித்த
ஆத்மாவோ
இரு கரம் பற்றி
என்னைத்
தன்வசம் இழுத்தது !
முன்பு தனியாக வாழ்ந்த
சமயத்தில்
அரிசிச் சாதம் கிட்டாத
அந்தக் காலத்தில்
முகம் சுழிக்காது அன்புடன்
புன்னகையுடன்
பன்முறை விருந்தளித்த
பெண்மாது !
உண்டி கொடுத்தோர் வாழ்வில்
உயிர் கொடுத்தோரே.
++++++++++++++++++
பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்.
துணைவியின் இறுதிப் பயணம் – 6
சி. ஜெயபாரதன், கனடா
என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
[Miss me, But let me go]
++++++++++++++
[24]
[ஆயுள் சான்றிதழ்]
[Life Certificate]
ஓய்வு ஊதியம் பெறுவதற்கு
ஓவ்வோர் ஆண்டும்
ஆயுள் நீடிப்புச் சான்றிதழ்
அவசியம்.
இந்திய அரசாங்க ஆணையர்
நவம்பர் மாதம்
முதல் வாரம் அளிப்பார்
முத்திரை குத்தி !
தம்பதிகள் இருவரும் புறப்பட்டோம்.
பயணம் துவங்கியது.
பாதி வழியில்
இருளும் மாலை நேரத்தில்,
திடீரெனத் துணைவி
இரத்தக் குழல் குமிழியில்
நேர்ந்தது வெடிப்பு !
உள் பூகம்பம் !
நாள் காட்டியில்
காலன் என்றோ குறித்து வைத்த
நவம்பர் ஒன்பதாம் நாள் !
அடுத்தோர் 9/11
அபாய மரண நிகழ்ச்சி
நேரும்
ஓருயிருக்கு !
முடிவில் நடந்தது என்ன ?
எனக்குக் கிடைத்தது
அரசாங்கத்தின்
ஆயுள் சான்றிதழ்.
என்னருமைத் துணைவிக்கு
எமனின்
மரணச் சான்றிதழ் !
++++++++++++
துணைவியின் இறுதிப் பயணம் – 7
சி. ஜெயபாரதன், கனடா
என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
[Miss me, But let me go]
++++++++++++++
[25]
தங்க ரதம்
தங்க ரதம் போல்
வீட்டில் தினம்
உலாவி வருவாள் !
மங்கா ஒளி முகத்தோடு
வீட்டில் தினம்
விளக்கை ஏற்றுவாள்.
தகதகக்கும் அந்த
தங்க மேனியாளை
திருமணத்தில் கைப் பற்றிய நான்,
இறுதியாக
என்னிரு கைகளால்
எரியும் மின்சார நெருப்பிலே
தள்ளினேனே ! நான்
தள்ளினேனே !
+++++++++
[26]
மரணம்
மானுட இனத்துக்கு
மரணம் என்பது
புதிதல்ல !
மரணம் என்பது
விதியல்ல என்று நீ
சொல்லாதே !
மதியால் விதியை நீ
வெல்லலாம் !
ஆனால்
மரணத்தை வெல்ல
முடியுமா !
பிறப்பும், இறப்பும்
உயிரின வாழ்க்கையின்
இருதுருவங்கள்.
பிறந்தவர்
ஒருநாள் இறப்பவர் தான் !
இறப்பவர் மீண்டும்
பிறப்பர்
என்பது தெரியாது !
மரணம் புதிதல்ல என்று
உரைத் தெனக்கு
ஆறுதல் கூற வராதீர் !
மரணம் விதியல்ல என்று
இறையிடம்
முறையிடுவேன் !
மரணம்
அரக்கர் தொழில் !
மானிடப் படைப்பைச் சீராய்
உருவாக்கிய பிறகு
ஊனுருகப் பறிப்பது தான்
உன் அறுவடையா ?
அல்லது
அறநெறியா ?
+++++++++++++
பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்
துணைவியின் இறுதிப் பயணம் – 8
சி. ஜெயபாரதன், கனடா
என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
[Miss me, But let me go]
++++++++++++++
[27]
ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை
சூழத்தீ இட்டது கண்ணகிக்கு ! – காலவெடி
மாய்த்த துணைவிக்கு கானடா வில் தீவைப்பு !
ஆயுள் முடிந்த கதை.
ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை
சூழத்தீ இட்டது கண்ணகிக்கு ! – பாழ் உலகில்
காலவெடி மாய்த்த துணைவிக்குத் தீ கனடா !
ஊழியின் முத்திரைக் குத்து.
++++++++++++++++++++++++
[28]
தனிமை
கொடிது கொடிது இளமையில்
வறுமை !
அதனினும் கொடிது
நடுமையில்
ஊழிய வருவாய் இன்மை !
அதனினும் கொடிது
முதுமையில் நோய்மை !
அதனினும் கொடுமை
மண விலக்கு,
இல்லற உடைப்பு,
புறக்கணிப்பு !
அனைத்திலும் கொடுமை
மனத்துக் கினிய
மனைவியோ, கணவனோ
சட்டெனத் தவறி
மனிதப் பிறவி நொந்திடும்
தனிமை ! தவிக்கும்
தனிமை.
++++++++++++++++
[29]
இட்ட கட்டளை
முதலில் கண் மூடுவது
தானோ அல்லது
நானோ என்று
நாள்தோறும்
எட்டிப் பார்ப்பாள் என்னை
அடிக்கடி,
அடுத்த அறையில் நான்
எழுதும் போது !
இரவு பதினொரு மணி
இனிமேல்
எழுத வேண்டாம் என
எனக்கிடுவாள் கட்டளை !
உங்களுக்கு
எதுவும் நேர்ந்தால்
எனக்குத் தெரியாது.
என்னால் உதவ முடியாது
தூங்கச் செல்வீர்.
+++++++++++
[30]
துணைவியின் கொடை
கண்ணும் கருத்துமாய்
வளர்த்த
பெண்டிர் இருவர்.
மூத்தவள்
மருத்துவப் பணி.
இளையவள்
பொறியல் பணி.
தக்கார் தகவிலர் என்பது
மக்கட் திறனால்
தெரியும்.
இல்லறப் பயன்பாடு
என்பது
பிள்ளைகள் செயற்பாடு.
++++++++++++++
[31]
பொங்கலோ பொங்கல்
ஒவ்வோர் ஆண்டும்
தவறாது
ஒவ்வோர் தை மாதமும்
மறவாது,
குளிர்நாடு கானடாவில்
எங்கள் இல்லத்தில்
கமகமவென மணக்கும் பால்
பொங்கல் வைப்பாள்
என்னருமைத் துணைவி.
தித்திக்கும்
சர்க்கரைப் பொங்கல் !
சாம்பார்
வெண் பொங்கல் !
இரட்டைப் பொங்கல் !
இவ்வாண்டு தைத் திங்கள்,
பொழுது புலர்ந்தது,
பொங்கல் பானை,
புத்தரிசி,
சர்க்கரை, கரும்பு, பால்
அக்கரையுடன்
காத்திருக் கின்றன,
வீட்டு வாசல் முற்றத்தில் !
சர்க்கரைப்
பொங்கல் வைக்க இல்லையே
துணைவி
எங்கள் இல்லத்தில் !
+++++++++++++++++++++
[32]
மானுடப் பிணைப்பு
[Human Bondage]
“மானுடம் பூத்தது
வாழ்வதற்கு ! அந்த
மன்மத ராகங்கள்
காதலுக்கு !” என்று
கனடா கவிஞர் புகாரி
கவிதை
எழுதி வைத்தார்.
முன்புறம்
ஒரு கதவு மூடினால்
பின்புறம்
மறு கதவு திறக்கிறது !
இறுதியில்
பிரிந்து செல்லும் கை
பிடித்தது
என் இடது கையை
பிரியா விடை பெற்று !
உடனே அடுத்து நான் வாழப்
பிணைக்கும்
இருகரங்கள் பற்றி
இழுத்துக் கொள்ளும் என்னைத்
தன்வசம் !
இன்னும் ஆயுள் நீடிக்கும்
உனக்கு !
வாழ நினைப்பாய்.
இல்லார்க்கு உதவ முனைவாய்,
இன்னும் முடிக்க வேண்டிய
பணிகள் பல உள்ளன,
உன்னைப் படைத்த படைப்பாளி
உனக்கிட்ட வினைகளை
முடிப்பாய் !
பயணம் முடிய வில்லை
உனக்கு !
+++++++++++++++++++++
[33]
சிலுவை
ஒவ்வோர் மனிதனும்
தன் முதுகிலே
தனது சிலுவைச்
சுமந்து கொண்டு தான்
சுற்றி வருகிறான் உலகை
செக்கு மாடுபோல்,
தெரிந்தோ
தெரியாமலோ !
மதுபானம் சிலருக்கு!
மரிவானா சிலருக்கு !
மடிவெடி சிலருக்கு !
புற்று நோய் சிலருக்கு !
பட்டென வெடித்துக் கொல்லும்
இரத்தக் குழல் வீக்கம்
சிலருக்கு !
பயண முடிவிலே சிலுவையில்
யார் உன்னை அடிப்பது
ஆணியில் ?
ஊழிக் காலன் தான் !
++++++++++++++++++
பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்
துணைவியின் இறுதிப் பயணம் – 10
சி. ஜெயபாரதன், கனடா
என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
[Miss me, But let me go]
++++++++++++++
[34]
மனமுடைந்த நான்கு மாதர்
அன்னிய மாதர் அனைவரும்,
ஒட்டுமில்லை எனக்கு
உறவுமில்லை !
மருத்துவ மனையில்
மனமுடைந்து
நான் அழும் போது
ஒடிவந்து அணைத்துக் கொண்டு
ஆறுதல் அளித்த அந்த
மருத்துவ மாது !
“மனைவி பிழைக்க மாட்டாள்
போவென,” என்னை
டாக்சியில் அனுப்பிய கனிவு
டாக்டர் மாது !
மனைவி மரித்து விட்டாள்
எனத் தகவல் கேட்ட
உடனே
இரங்கல் மடலோடு
ஏந்திய
மலர்க் கொத்தோடு
இருகண்களில்
தாரை தாரையாய்க்
கண்ணீர் சிந்த
ஓடிவந்து அணைத்துக் கொண்டு
ஆறுதல் அளித்த
ஜெவோஹா விட்னஸ்
மாது !
அடுத்த நாள் ஆவி பறக்க
சுடச்சுட சூடாக
சூப்பு தயாரித்து எனது
கரங்களில் கொடுத்த அதே
கிறித்துவ மாது !
மாதமிரு முறை
வீட்டைத் துடைக்க வரும்
பணி மாது !
வேலை செய்யப் போன
வீட்டில்
மனைவி மரித்து விட்டாள் எனக்
கேட்ட போதே
தேம்பித் தேம்பி அழுத மாது !
அடுத்த நாள்
பூக்கும்பா கொண்டு வந்த
வீட்டுப் பணி மாது !
துணைவி மரித்து விட்டாள் எனக்
பக்கத்து வீட்டுக்
காவல்துறை நண்பரிடம் நான்
சொல்லிச் சென்ற பின்,
நோயுடன் படுத்துக் கிடந்த
அவரது மனைவி,
கதவைப் பட்டெனத் திறந்து
போர்வை எதுவு மின்றித்
துள்ளி ஓடி வந்து
என்னை நிறுத்தி
தெருவிலே அழத மாது !
மனைவி மரித்த தற்குக்
கண்ணீர் விட்ட
அன்னிய வனிதையர்.
மனப் பாறையில் செதுக்கி நான்
மறக்க முடியாத அந்த
மாதரெல்லாம்
பூதலத்தில் பிறந்த
தேவ மகளிர் !
+++++++++++++++++
[35]
இறுதி நிகழ்வுகள்
[9/11]
[நவம்பர் 9, 2018]
வெள்ளிக் கிழமை !
இறுதிப் பயண நாள் அது
தலைவலி
உள்ளதெனக் கூறி மாலை
ஐந்து மணிக்கு,
ஆரஞ்சுவில் ஓட்டலில்
காபி தயாரித்து
என்னுடன் காபி அருந்தி
உரையாடியது,
அதன் பிறகு
இளைய புதல்வியுடன் இனிதாய்ப்
பேசியது !
ஹார்வி, சுவிஸ் சாலே
ஓட்டலுக்குப் போவீர் என்று
எங்கள் திசையை மாற்றியது
இளைய மகள் !
இரவு உணவு உண்ணப்
போவது
ஆறு மணிக்குத் தான் என்று
மீண்டும் மீண்டும்
அழுத்திக் கூறியது
மனைவி !
ஆறு மணி தாண்டி
நாங்கள்
கார் போகும் போதுதான்
நேர்ந்தது 9/11 விபத்து !
இரத்தக் குழல் குமிழ் விரிந்து
உள்வெடிப்பு !
உரத்த குரலில் வலியில்
கத்தினாள் !
என் நெஞ்சைப் பிளந்தது
அக்குரல் !
911 எண்களைத் தட்டினேன் !
மணியடித்து
அவசரக் காப்பு வாகனம்
வந்தது உடனே !
மருத்துவரிடம்
வலியோடு தன் பெயரை
வயதைச்
சொல்லி இருக்கிறாள் !
ஒருமுறை
மருத்துவ மனையில்
தாங்கா வலியுடன் தவித்துக்
கண்திறந்து பார்த்து
என் இடது கையைப் பற்றியது
இறுதியில் !
கண்மூடி, வாய்மூடிய சமயம்,
புதல்வியர் பேசிய போது
கால், கைவிரல் மட்டும் அசைந்தன,
இடது கண்ணில்
வடிந்தது ஒரு சொட்டுக்
கண்ணீர் !
இறுதிக் கண்ணீர் !
++++++++++++++++++
பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்
++++++++++++++++++
பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்