சி. ஜெயபாரதன், கனடா
என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
[Miss me, But let me go]
++++++++++++++
[41]
மீளா புரிக்கு !
என்னுள்ளத்தின் சுவர்களில்
ஒவ்வோர் அறையிலும்
நான் காண விழைவது
துணைவி படம் ஒன்றைத்தான் !
நான் கேட்க
விரும்புவது துணைவி
இனிய குரல்
ஒன்றைத் தான் !
ஓவ்வோர் அறைத் தளத்திலும்
என் காதில்
விழ வேண்டுவது
துணைவி தடவைப்பு
எதிரொலி
ஒன்றைத்தான் !
ஒவ்வோர் சுவர்ப் படத்திலும்
அவளது கண்கள்
உற்று நோக்க வேண்டுவது
எனது கண்களைத் தான் !
எண்ணற்ற அவளது
படங்களைத் தேடி எடுத்து
பலகையில் ஒட்டிப்
பலர் பார்க்க வைத்தேன்,
ஈமச் சடங்கிலே !
யாரை நான் இழந்தேன் என்று
ஊராரும், உற்றாரும்
பார்க்க வேண்டும் அன்று !
உடலையும் உயிரையும்
பிடித்து வைக்க முடிய வில்லை !
படங்களை யாவது
தினம், தினம்
பார்த்துப் பார்த்து
துணைவியை நினைக்கலாம் !
திரைப் படங்களில் அவள்
உயிரோடு
நடமாடி இருந்ததைக்
காணலாம்
மீண்டும், மீண்டும் !
என்னை விட்டுத் துணைவி
பிரிந்து விட்டாள்
நிரந்தரமாய் !
எனது இல்லத்தில் இனிமேல்
வாழத் தேவை யில்லை
என்று ஆயுள்
அத்தமனம் ஆனது !
ஒருபோக்குப் பாதையில்
திரும்பிப் பாராது,
புலம் பெயர்ந்து விட்டாள்
மீளா புரிக்கு !
++++++++++++++++
[42]
உயிரா ? உடலா ?
உயிர் என்னும் மாய விசை
இல்லையேல்,
உடம்பெனும் யந்திரம்
ஓடாது இப்புவியில் !
உடம்பு என்றோர்
பம்பரம் இல்லை யெனின்
உயிருக்கு வேலை
உண்டோ ?
தனித்து வாழ முடியாத
இரண்டும்
பிணைத்து வாழ வேண்டும்,
பிறப்புருவில்.
அல்லது
முறிந்து வீழ வேண்டும்,
என்பது ஊழ்விதி !
முதன் முதல்
உயிர் நீங்க வில்லை
துணைவிக்கு !
முறிந்து,
முடங்கியது முதலில்
உடம்பு !
உயிருக்கு ஆயுள் நீட்சி
இருப்பினும்
நோயுற்ற கூண்டிலே
குடியிருக்க
முடிய வில்லை,
உயிர்ப் புறா !
இறுதியிலே
பூரண
ஓய்வெடுத்தது உயிரும்
உடம்பும் !
+++++++++++++++++
[43]
ஈமச் சடங்கு
உயிருள்ள மானிடப் பிறவிக்கு
உரிய மதிப்பளிப்பது
நியாயமே மனித நேயமே.
அது போல்
உயிரிழந்த சடலத்துக்கும்
பயண முடிவில்
மரியாதை புரிவது
மனித நாகரீகம். மனித நேயமே.
பிரம்மாண்ட மான
வரலாற்றுச் சின்னமான
பிரமிடைக் கட்டினர்
ஃபெரோ வேந்தர்கள்
தமது உயிரிழக்கும் சடலத்துக்கு
முன்பாகவே !
மும்தாஜ் மனைவிக்கு
உலக ஒப்பற்ற,
எழில் கொலு மாளிகை,
தாஜ் மகாலை எழுப்பினார்
ஷாஜஹான் !
துணைவிக்கு நான் இரங்கற்
பாமாலை வடித்துச் சூட்டினேன்.
ஐம்பத்தாறு ஆண்டுகள்
உடனிருந்து
இடர், துயர், இன்பத்தைப்
பகிர்ந்து
கடமை, உடைமை
வறுமை, செழுமை, திறமையில்
தானும் பங்கெடுத்து
மரித்த என் துணைவிக்கு
உரிய மரியாதை
அளிப்பது என் இறுதிக் கடமை,
அதுவே ஈமச் சடங்கு !
மௌன மாளிகையில்
ஆரவர மின்றி ஆடம்பர மின்றி
ஊரார், உற்றார், உறவினர்
கூடி இருக்க,
நீத்தார் பெருமை நினைப்பது
ஈமச் சடங்கு !
தகன மாளிகையில் அன்பர் சூழக்
கடவுளை நினைத்து,
சடலத்தை
அக்கினி மூலமாய்
வழியனுப்பி வைத்தோம்.
தங்க உடம்பு
குடத்துச் சாம்பல் ஆனது.
துணைவி புரிந்த
நல்வினை எல்லாம் அன்று
நாலுபேர் பேசி
நினைவில் வைத்தோம்.
செல்லும் போது
சொல்லாமல் பிரிந்த துணைவிக்கு
“போய் வா” என்று
வாயால் சொல்லும் வாடிக்கை
விடை தரவில்லை !
ஆயினும்
காதில் துணைவி முணுத்தது :
“என் இழப்பை நினை !
ஆனால் போக விடு எனை !
++++++++++++++
பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்
++++++++++++++
ஐயா, தங்களின் நினைவலைகளில் நாங்களும் பங்களிப்புச் செய்கிறோம்.
மிக்க நன்றி ராஜசேகரன்.
கனிவுடன்
சி. ஜெயபாரதன்