துணைவியின் இறுதிப் பயணம் -3

அமர கீதங்கள்

துணைவியின் இறுதிப் பயணம்

சி. ஜெயபாரதன், கனடா

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

[Miss me, But let me go]

++++++++++++++

என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன்

தோற்றம் :  அக்டோபர்  24, 1934

மறைவு : நவம்பர் 18, 2018

++++++++++++++++++

[21]

எழுதிச் சென்ற ஊழியின் கை !

 

முடிந்தது

அவள் ஆயுள் என

விதி

மொழிந்தால் நான்

ஏற்க மாட்டேன் !

முடிந்தது

அவள் வினைகள் எல்லாம்

என் வீட்டில் எனக்

காலன்

ஓலமிட்டால் நான்

காதில்

கேட்க மாட்டேன் !

முடிந்தது

அவள் கடமை யாவும்

இந்த உலகில் என

விதியின் கை

எழுதி இருந்தால்,

ஊழியிடம்

ஒரு வினா மட்டும்

கேட்பேன் !

அறுவை முறையை

மருத்துவர் சரியாகச் செய்து

ஒன்பது நாள்

உயிர் கொடுத்தாயே ! ஏன்

ஒன்பதாம் நாள் 

சுவாச மூச்சை நிறுத்தினாய் ?

சொல் ! சொல் ! சொல் !

 

++++++++++++++++

[22] 

ஊழியின் எழுத்தாணி

 

எழுதிச் செல்லும்

ஊழியின் எழுத்தாணி

எழுதி, எழுதி மேற்செல்லும் !

அழுதாலும், தொழுதாலும்

வழி மாறாது !

விதி மாறாது !

நழுவிச் செல்லும்,

உந்தன்

அழுகை காணாது !

காலன் வந்து

வீட்டு வாசலில் நின்று

சிவப்பு மாவில்

கோலமிட்டுக்

குறி வைத்துப் போவான் !

எமனின் நீள் கயிறு

அவளைக் கட்டி

இழுத்துச் செல்லும்

அவளது இறுதிச்

சடங்கு

ஓலைச் சுவடியில்

ஜோதிடரால்

எழுதப்பட வில்லை, அவளது

மூளைச் சுவரில்

எழுதி வைத்துள்ளது

ஊழ்விதி !

 

+++++++++++++

 [23] 

அன்னமிட்ட கைகள்.

 

எனக்கு

அன்ன மிட்ட கைகள்,

ஆக்கி வைத்த

கரங்கள் மூன்று !

முதலாக

முலைப் பால் ஊட்டிய

என் அன்னை !

இருபத்தி யெட்டு வயது வரை

கண்ணும், கருத்துமாய்

உண்ண வைத்து

ஊட்டி வளர்த்த தாய் !

தாயிக்குப் பின்

தாரம் !

ஐம்பத்தி யாறு ஆண்டுகள்

தம்பதிகளாய்க்

கைப்பற்றி

இல்லறத்தில் வாழ்ந்து

முடிந்த கதை !

மருத்துவ மனையில்

பிரியும் ஆத்மா

பிணைத்தது ஒரு கையை !

என் இடது கையை !

இணையத் துடித்த

ஆத்மாவோ

இரு கரம் பற்றி

என்னைத்

தன்வசம் இழுத்தது !

முன்பு தனியாக வாழ்ந்த

சமயத்தில்

அரிசிச் சாதம் கிட்டாத

அந்தக் காலத்தில்

முகம் சுழிக்காது அன்புடன்

புன்னகையுடன்

பன்முறை விருந்தளித்த

பெண்மாது !

உண்டி கொடுத்தோர் வாழ்வில்

உயிர் கொடுத்தோரே.

 

++++++++++++++++++

 [24]

தங்க ரதம்

 

தங்க ரதம் போல்

வீட்டில் தினம்

உலாவி வருவாள் !

மங்கா ஒளி முகத்தோடு

வீட்டில் தினம்

விளக்கை ஏற்றுவாள்.

தகதகக்கும் அந்த

தங்க மேனியாளை

திருமணத்தில் கைப் பற்றிய நான்,

இறுதியாக

என்னிரு கைகளால்

எரியும் மின்சார நெருப்பிலே நான்

தள்ளினேனே ! நான்

தள்ளினேனே !

++++++++++++++++

[25]

[ஆயுள் சான்றிதழ்]

[Life Certificate]

 

ஓய்வு ஊதியம் பெறுவதற்கு

ஓவ்வோர் ஆண்டும்

ஆயுள் நீடிப்புச் சான்றிதழ்

அவசியம்.

இந்திய அரசாங்க ஆணையர்

நவம்பர் மாதம்

முதல் வாரம் அளிப்பார்

முத்திரை குத்தி !

தம்பதிகள் இருவரும் புறப்பட்டோம்.

பயணம் துவங்கியது.

பாதி வழியில்

இருளும் மாலை நேரத்தில்,

திடீரெனத் துணைவி

இரத்தக் குழல் குமிழியில்

நேர்ந்தது வெடிப்பு !

உள் பூகம்பம் !

நாள் காட்டியில்

காலன் என்றோ குறித்து வைத்த

நவம்பர் ஒன்பதாம் நாள் !

அடுத்தோர் 9/11

அபாய மரண நிகழ்ச்சி

நேரும்

ஓருயிருக்கு !   

முடிவில் நடந்தது என்ன ?

எனக்குக் கிடைத்தது

அரசாங்கத்தின்

ஆயுள் சான்றிதழ்.

என்னருமைத் துணைவிக்கு

எமனின் 

மரணச் சான்றிதழ் !

 

++++++++++++

 [26]

மரணம்

 

மானுட  இனத்துக்கு

மரணம் என்பது

புதிதல்ல !  

மரணம்  என்பது

பொல்லாது ! 

உயிருடன் வாழ்வோரைத் தினமும்

கொல்லாமல் கொல்வது !  

மரணம் என்பது

விதியல்ல என்று நீ

சொல்லாதே !

மதியால் நீ விதியை

வெல்லலாம் என்று சொல்லிக்

கொள்ளலாம். 

ஆனால்

மரணத்தை வெல்ல

முடியுமா !

பிறப்பும், இறப்பும்

உயிரின வாழ்க்கையின்

இருதுருவங்கள்.

பிறந்தவர்

ஒருநாள் இறப்பவர் தான் !  

இறப்பவர் மீண்டும்

பிறப்பர்

என்பது தெரியாது !

மரணம் புதிதல்ல என்று

உரைத் தெனக்கு

ஆறுதல் கூற வராதீர் !

மரணம் விதியல்ல என்று

இறையிடம்

முறையிடுவேன் !

மரணம்

அரக்கர் தொழில் !

மானிடப் படைப்பைச் சீராய்

உருவாக்கிய பிறகு  

ஊனுருகப் பறிப்பது தான்

உன் அறுவடையா ?

அல்லது

அறநெறியா ?

 

+++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.