சி. ஜெயபாரதன், கனடா
புத்தாண்டு பிறந்தது ! நமக்கு
புத்தாண்டு பிறந்தது !
கடந்த ஆண்டு மறையுது, ஆயினும்
தடம் இன்னும் தெரியுது !
வித்தைகள் சிறந்து ஓங்கணும் !
விஞ்ஞானம் தழைக்கணும் !
வேலைகள் பெருகணும் !
வீணர்கள் தேறணும் !
சித்தர்கள் புதிதாய்ப் பிறக்கணும் !
பித்தர்கள் தெளிவாகணும் !
புத்திகள் கூர்மை ஆகணும் !
யுக்திகள் புதிதாய்த் தோன்றணும்.
சண்டைகள் குறையணும் !
ஜாதிகள் சேர்ந்து வாழணும் !
சமய இனத்தர் கைகோர்த்து வசிக்கணும் !
பொரி உருண்டை ஆச்சு பூத உலகம் !
திறமைகள் ஒன்றாகி வலுக்கணும்
வறுமை குன்றி வருவாய் பெருகணும்.
மின்சக்தி பெருகி யந்திரங்கள் ஓடணும்.
வேளாண்மை விருத்தி ஆகணும் !
பஞ்சம் குறைய மிஞ்சி விளையணும் !
லஞ்ச மனிதர் அஞ்சி அடங்கணும் !
நீர்வளம், நிலவளம், சூழ்வெளி
துப்புரவு செய்யணும் !
விடுதலை நாடு சீராய்த் தழைக்க,
கடமைகள் முடிக்கணும்; நாட்டுப்
பொறுப்புகள் ஏற்கணும் !
தேசப் பற்று நமக்குள் ஊறணும் !
தேச விருத்தி குறிக்கோள் ஆகணும் !
தேச மக்கள் நேசம் பெருகணும் !
++++++++++++