போதி மரம் தேடி .. !
சி. ஜெயபாரதன், கனடா
படித்தேன் தெரு விளக்கில்
விடிய விடிய,
படிக்க வேண்டா வற்றை !
படிக்கத் தேவை யானவை எல்லாம்
பட்டப் படிப்பில் இல்லை !
படித்தேன் தேர்வுக் காகப் படித்தேன்
உயர்ந்த மதிப்பெண் வாங்கினேன் !
வாழ்வில் கிடைத்தது
பெரிய பூஜியம் !
படித்தவை புரிய வில்லை !
படியாதவை புரிந்தன !
ஆயினும் புரிந்த வற்றை
ஆழ்ந்து படிக்க வில்லை !
புரிந்ததைப் படிக்க வந்த போது
தெரு விளக்கு
குருடாய்ப் போனது !
படித்தவன் நடிக்கிறான்
மேடையில் !
படியாதவன் அவனுக்கு
அடிமை ஆகுவான் !
மூர்க்கர் ஒழிக்க வெள்ளை மாளிகை
ஊர்தி வெடி அனுப்பும்,
பொது மானுடர் மடிகிறார் !
மதவெறியன் மடி வெடியைத்
தூண்டி விட்டு,
மாண்டார் அப்பாவி மக்கள்
ஆண்டு தோறும் !
ஏன், ஏன், ஏன் என்றென்னைத்
துளைக் கின்றன
ஏழாயிரம் வினாக்கள் !
விடை வேண்டும்
எனக்கு,
போதி மரம் எங்கே ?
+++++++++++++++
jayabarathans@gmail.com [July 5, 2018] [R-1]