சி. ஜெயபாரதன், கனடா
இமயத் தொட்டிலில் ஆட்டமடா !
இயற்கை அன்னை சீற்றமடா !
பூமாதேவி சற்று தோள சைத்தாள் !
பொத்தென வீழ்ந்தன மாளிகைகள்
பொடித்தூள் ஆயின குடி வீடுகள் !
செத்து மாண்டவர் எத்தனை பேர் ?
பெற்றோர் இழந்தவர் எத்தனை பேர் ?
கைகால் முறிந்தோர் எத்தனை பேர் ?
இமைப் பொழுதில்
எல்லாம் இழந்தவர் எத்தனை பேர் ?
கட்டிய இல்லம், சேமித்த செல்வம்
பெட்டி, படுக்கை, உடுப்பு,
உணவெல்லாம் மண்ணாச்சு !
அந்தோ !
வசந்த கால வாடைக் காற்றில்,
அழுதிடும் சேய்க ளோடு
புழுதி மேடையில் தூங்குகிறார் !
வானந்தான் கூரை !
பாழ்வெளி தான் இல்லம் !
சுவரில்லை ! கதவில்லை !
போர்த்திக் கொள்ள எவர்க்கும்
துணி யில்லை !
மானம் போனது, மதிப்பு போனது !
தானம், தர்மம் நாடி
வானம் நோக்கித் துதிக்கிறார் !
கடவுளுக்கு
கண்ணில்லை ; காதில்லை !
கருணையும் இல்லை !
கொடுத்த தெல்லாம் பறித்துக் கொண்டாள்
கோபத்தாய் !
எண்ணிலா மாந்தர் புதைபட்டார்
உயிரொடு !
இடிந்த வீடுகள் புதை காடாயின !
எங்கெங்கு வாழினும்
இன்னலடா !
ஏழு பிறப்பிலும் தொல்லையடா !
சூழ்வெளி மட்டும்
பாழாக வில்லை யடா!
ஆழ்பூமிக் குள்ளும்
புற்று நோய் தொற்றுமடா !
++++++++++++++
S. Jaybarathan [jayabarathans@gmail.com] April 25, 2015