
சி. ஜெயபாரதன், கனடா
அற்றைத் திங்கள்
அவ்வெண் ணிலவில்
முற்றுப் பெறாத தேன் நதியில்
சுற்றி வந்தோம்
சொர்க்கப் படகில் !
வசந்த காலம் !
வளர்பிறைக் கோலம் !
கட்டினோம் பாலம்
கடல் மீது !
எமக்குள் இருந்த
ஒற்றுமை வேர்களைப்
பற்றிக் கொண்டு
பழங் கதை பேசினோம் !
பாடினோம் ! ஆடினோம் !
படமெடுத்துச் சுவரில் மாட்டினோம் !
விடியும் வரை
விழித்திருந்து கனாக் கண்டோம் !
மண்ணில் கால் படாது,
விண்ணில் பறந்தோம் !
தாகம் மிகுந்து
மோகத் தீயில் மூழ்கினோம்!
சிப்பிக்குள் முத்துண் டானது !
ஒப்புடன்
விதியின் ஆசியால் முடிந்ததெம்,
அதிசயத் திருமணம்!
தேனிலவில் தடம்வைத்து,
சொர்க்க புரிச் சிகரத்தில்
ஏறிக் கீழ்
இறங்கும் போது
தர்க்க புரியில்
தடம் வைத்தோம் !
முழு நிலவின் பொன்னலைகள்
பழுதாக்கின
உழுது எம் நெஞ்சை !
நேற்று மறந்த
வேற்றுமை விழுதெல்லாம்
காற்றில் தாக்கின
முறிந்தது பாலம் !
சேயி ழைக்குக் காயம் !
நாயக னுக்கும் காயம் !
தேய்பிறைக் கோலம் !
இற்றைத் திங்கள்
இவ்வெண் ணிலவில்
முற்றுப் புள்ளி உதயம் !
அத்த மிக்கும் பரிதி !
எட்டிப் பார்க்கும்
கரு நிலவு !
++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) September 5, 2009 ( R-2)