உலகில் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர்

பெப்ரவரி 5, 2010

(1904-1967)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


விண்வெளியிலே ஒரே சமயத்தில் ஓராயிரம் சூரியன்கள் வெடித்துக் கதிரொளி பரப்பினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பராக்கிரம் படைத்த வல்லவனின் பேரொளி இருக்கும் !

உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)


அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த அமெரிக்க விஞ்ஞானி!

அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடை யாகவோ அன்றி மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஐந்து விஞ்ஞான மேதைகள்! முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி! அடுத்து செயற்கைக் கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி! அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] புரிந்த என்ரிகோ ஃபெரிமி! இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும் முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்! முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப் பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த ராபர்ட் ஓப்பன்ஹைமர்!

ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டுகள் விழுந்து கோர விளைவுகள் நிகழ்ந்த பின் உலகின் வல்லரசுகளும், மெல்லரசுகளும் உடனே அணு ஆயுதங்களை ரகசியமாய் உற்பத்தி செய்ய முற்பட்டன! 1945 இல் அமெரிக்கா ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைச் சோதித்தது! அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல் பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன! உலக நாடுகளில் 115 தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty, NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன! ஆனால் அர்ஜென்டைனா, பிரேஸில், சைனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பல நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பில் கையெழுத்திட ஒருங்கே மறுத்து விட்டன!

ஓப்பன்ஹைமர் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த, ஆனால் முரண்பாடுகள் உடைய ஓர் பெளதிக விஞ்ஞானி! அவரே உலக அணு ஆயுதங்களின் பிதா! நெருங்கிய நண்பர்களுக்கு அவர் ஒரு பெரும் தீரர்! சிலருக்குப் புரிந்து கொள்ள முடியாத ஓர் புதிர் மனிதர் அவர்! மற்றும் பலருக்கு அவர் ‘துரோகி ‘ என்று தூற்றப் பட்டவர்! அமெரிக்க சோவியத் ரஷ்யாவுக்கு இடையே எழுந்த ஊமைப் போர் அரசியல் ஊழலில் [Cold War Politics] பழி சுமத்தப் பட்ட ஓர் பலியாளி [Victim] என்று அவர்மேல் அனுதாபப் பட்டவரும் உண்டு! 1942 முதல் 1954 வரை அவர் புகழ் வானளவு உயர்ந்து பின்பு, அமெரிக்க அரசின் பாதுகாப்பில் ஐயப்பாடு நபராகி [National Security Risk], அணுசக்திப் பேரவையிலிருந்து வெளியே தள்ளப் பட்டவர்! வான வில்லாய்ப் போன அவரது அரிய வாழ்க்கை முள்ளும் மலரும் நிறைந்த ஓர் விந்தை வரலாறு!

ஓப்பன்ஹைமர் பெற்ற உயர்தரக் கல்வி வரலாறு

நியூ யார்க் நகரில் ஜெர்மனியிலிருந்து புலம்பெயர்ந்த ஓர் செல்வந்த யூத குடும்பத்தில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் 1904 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி பிறந்தார். தந்தையார் ஜூலியஸ் ஓப்பன்ஹைமர் துணிகள் இறக்குமதியில் பெருநிதி திரட்டிச் செல்வந்த ராகப் பெயர் எடுத்தவர்! தாயார் எல்லா பிரையெட்மன் ஓர் உன்னத ஓவியக்கலை மாது! ராபர்ட் அறிவாற்றல் பெற்றுப் பெரும் திறமைசாலி யாக வருவதற்கு, அவரது பெற்றோர்களே காரண கர்த்தாக்கள்! சிறிய வயதிலேயே ராபர்ட் கணக்கிலும், பெளதிகத்திலும் மிகுந்த ஆர்வத்தைக் காட்டினார்! உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, கால்குலஸ் கணிதத்தில் [Calculus] கைதேர்ந்த வல்லுநராக இருந்தார்! ஒழுக்கவியல் கலாச்சாரப் பள்ளியில் [Ethical Cultural School] படிப்பு முடிந்ததும், ராபர்ட் முதலில் ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் நுழைந்தார். ஹார்வேர்டில் படிக்கும் காலத்தில் லாட்டின், கிரேக்க மொழிகளில் சாமர்த்தசாலி யாகவும், பெளதிகம், ரசாயனம் ஆகியவற்றில் மிஞ்சிய திறமைசாலி யாகவும் விளங்கினார். மேலும் அவர் கிழக்காசிய வேதாந்தம் [Oriental Philosophy], மனிதவியல் [Humanities], சமூக விஞ்ஞானம் [Social Sciences] ஆகியவற்றையும் பயின்றார். அப்போது அவர் எழுதிய முதல் கவிதைத் தொகுதியும் வெளியானது! 1925 இல் B.A. பட்டம் பெற்ற பிறகு, இங்கிலாந்தில் மேற்படிப்பிற்குச் சென்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் காவென்டிஷ் ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சி செய்ய விரும்பினார்.

அங்கே அப்போது பேராசிரியராக இருந்தவர், அணுவின் அமைப்பை முதலில் விளக்கிய நோபெல் பரிசு விஞ்ஞான மேதை, ஏர்னஸ்டு ரூதர்ஃபோர்டு [Ernest Rutherford (1871-1937)]! உலகப் புகழ் பெற்ற ரூதர்ஃபோர்டு அணு அமைப்பு ஆராய்ச்சியில் பல முன்னோடி ஆய்வுகளை நடத்தியவர்! மேலும் பிரிட்டனில் பணி யாற்றிய பல பெரும் விஞ்ஞானிகளுடன் அணுத்துறை ஆராய்ச்சிகளில் ஓப்பன்ஹைமரும் கூட்டுழைக்க ஏதுவாயிற்று!

அடுத்து ஜெர்மன் விஞ்ஞானி மாக்ஸ் பார்ன் [Max Born (1872-1970)] ஓப்பன்ஹைமரைக் காட்டிங்கன் [Gottingen] பல்கலைக் கழகத்திற்கு வரும்படி அழைத்தார். மாக்ஸ் பார்ன் கதிர்த்துகள் யந்திரவியலில் [Quantum Mechanics] சிறப்பாக ஆராய்ச்சிகள் செய்து, நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞான மேதை. அங்கே விஞ்ஞான மேதைகளான நீல்ஸ் போர்[Neils Bohr], பால் டிராக் [Paul Dirac], என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi], வெர்னர் ஹைஸன்பர்க் [Wenner Heisenberg], ஜேம்ஸ் பிராங்க் [James Franck], யூஜீன் விஞ்னர் [Eugene Wigner] ஆகியோருடன் ஆய்வுகள் செய்துப் பழகும் வாய்ப்புக்கள் அவருக்கு நிறையக் கிடைத்தன! அவர்களில் பலர் பின்னால் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து, ரகசிய மன்ஹாட்டன் திட்டமான [Manhattan Project] அணு ஆயுதப் படைப்பில் சேர்ந்து ஒப்பன்ஹைமரின் கீழ் பணியாற்றினார்கள்!

ஓப்பன்ஹைமர் ஜெர்மனியில் மாக்ஸ் பார்னுடன் ஆராய்ச்சிகள் செய்து, பரமாணுக்களின் மோதல்களை [Collision between Particles] விளக்கி ‘மோதல் நியதி ‘ [Collision Theory] ஒன்றை எழுதி, 1927 இல் தனது 23 வயதில் அதற்கு Ph.D. பட்டத்தையும் பெற்றார். அதன் பின் 1929 இல் அமெரிக்காவுக்குத் திரும்பி, கலிஃபோர்னியா பொறியியற் கூடத்திலும் [California Institute of Technology], கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்திலும் [University of California] ஒருங்கே துணைப் பேராசிரியராகப் பணி புரிந்தார். அடுத்துப் பேராசிரியராக 1935 இல் உயர்த்தப் பட்டார்.

இந்தக் காலங்களில்தான் ஓப்பன்ஹைமர் பல முக்கிய விஞ்ஞானப் படைப்புகளை வெளியீடு செய்தார். குறிப்பாக கதிர்த்துகள் யந்திரவியல் [Quantum Mechanics], அணுவியல் கோட்பாடு [Atomic Theory] ஆகிய பெளதிகப் பகுதிகளில் தனது புதிய அரியக் கருத்துக்களை வழங்கி யுள்ளார். அவர் எழுதிய நூல்கள்: ‘விஞ்ஞானமும் பொதுவாய்ப் புரிதலும் ‘ [Science & Common Understanding (1954)], ‘மின்னியல் சொற்பொழிவுகள் ‘ [Lectures on Electrodynamics (1967)]. அதே சமயம், அமெரிக்க ஐரோப்பிய இளம் விஞ்ஞான வல்லுநர்களைத் தன் திறமையால் கவர்ந்து, கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தை நோக்கி வரும்படிச் செய்தார், ஓப்பன்ஹைமர்! அவரது காலத்தில் கலிஃபோர்னியா பல்கலைக் கழகம் கோட்பாடு பெளதிகத்தின் அமெரிக்க மையம் [American Center of Theoretical Physics] என்று பெயர் பெற்றது! 1940 ஆம் ஆண்டு ராபர்ட் ஓப்பன்ஹைமர், காதிரைன் என்னும் மாதை மணந்து கொண்டார். அவர்களுக்குப் புதல்வன் ஒருவனும், புதல்வி ஒருத்தியும் உள்ளார்கள்.

அமெரிக்காவில் முதல் அணு ஆயுதச் சோதனை

1939 இல் ஹிட்லர் போலந்தைக் கைப்பற்றியதும், ஐரோப்பாவிலிருந்து ஓடிவந்த முப்பெரும் ஹங்கேரியன் விஞ்ஞானிகள் லியோ ஸிலார்டு [Leo Szilard], எட்வெர்டு டெல்லர் [Edward Teller], யூஜீன் விக்னர் [Eugene Wigner] உலகப் புகழ் பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை ஒப்பவைத்து அவரது கையொப்பமுடன் ஒரு கடிதத்தை, அமெரிக்க ஜனாதிபதி ரூஸவெல்டுக்கு அனுப்பினார்கள்! ஹிட்லர் அணு ஆயுதத்தைத் தயாரித்து உலகை அழிப்பதற்கு முன், அமெரிக்கா அணு ஆயுதத்தை உருவாக்கி இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த வேண்டுமென, அக்கடித்ததில் எழுதி யிருந்தது! உடனே மன்ஹாட்டன் மறைமுகத் திட்டம் உருவாகி, அதற்கு ராணுவத் தளபதியாக லெஸ்லி குரூஸ் [Leslie Groves] தேர்ந்தெடுக்கப் பட்டார்! அவருக்குக் கீழ் விஞ்ஞான அதிபதியாக ராபர்ட் ஓப்பன்ஹைமர் நியமனம் ஆயினர்! மன்ஹாட்டன் அணு ஆயுதப் பணிக்கு அறுபதுக்கும் மேற்பட்ட அமெரிக்க, பிரிட்டிஷ், கனடா நாடுகளின் அரும்பெரும் விஞ்ஞான மேதைகள் அழைத்து வரப்பட்டார்கள்! இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் மன்ஹாட்டன் திட்டம் உருவாகி அழிவுக்கும், ஆக்கத்திற்கும் வழி வகுத்த அணு யுகம் உதயமானது, மாபெரும் ஓர் ஒப்பற்ற விஞ்ஞானச் சாதனைக் கருதப்படுகிறது!

அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் ஒரே சமயத்தில் அணு ஆயுத ஆரம்பப் பணிகள் துவங்கப் பட்டன! முப்பெரும் தளங்கள் W,X,Y என்னும் மறைவுப் பெயர்களில் தேர்ந்தெடுக்கப் பட்டன! யாவரையும் ஓரிடத்திலிருந்து கண்காணிக்க மறைவுத் தளம் Y, லாஸ் அலமாஸ் நியூ மெக்ஸிகோவில் [Los Alamos, New Mexico] குறிக்கப் பட்டது! டென்னஸி மாநிலத்தில் ஓக் ரிட்ஜ் [Oak Ridge] ஆராய்ச்சித் தொழிற் கூடங்களில் இரண்டு தளங்கள் W & X நிர்ணயமாயின! அணு ஆயுதப் படைப்பிற்கு நான்கு முக்கிய இமாலயப் பணிகள் நிறைவேற வேண்டும். முதலில் அணுப்பிளவு நிகழ்த்தத் தேவையான அளவு யுரேனியம்235 தயாரிக்க வேண்டும்! இயற்கை யுரேனியத் தாதுவில் [Natural Uranium Ore] மிகச் சிறிய அளவு [0.714%] இருக்கும் யுரேனியம்235 [U235] உலோகத்தை வாயுத் தளர்ச்சி முறையில் சேர்த்து [Gaseous Diffusion Process] மின்காந்தக் களத்தில் பிரித்து [Electromagnetic Separation] எடுக்கப்பட வேண்டும்.

அந்தப் பணியை அமெரிக்க விஞ்ஞானி எர்னஸ்ட் லாரென்ஸ் [Ernest Lawrence], ஆஸ்திரேலிய விஞ்ஞானி மார்க் ஒலிஃபன்ட் [Mark Oliphant] இருவரும் தளம் X இல் 440 மில்லியன் டாலர் செய்து முடித்தார்கள். இரண்டாவது பணி அணு உலையில் நியூட்ரான் கணைகளைக் கொண்டு இயற்கை யுரேனியத்தை தாக்கி புளுடோனியம்239 [Plutonium, Pu239] உலோகத்தை உண்டாக்கிப் பிரித்தெடுக்க வேண்டும்.

அந்தப் பணியை கெலென் சீபோர்க் [Glenn Seaborg] குழுவினர் 500 மில்லியன் டாலர் செலவில் செய்து வேண்டி அளவு புளுடோனியம்239 தயாரித்தார்கள். மூன்றாவது பணி சிகாகோவில் முதல் ஆய்வு அணு உலையை அமைத்து 1942 டிசம்பர் 2 இல் முதல் அணுக்கருத் தொடரிக்கத்தை இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மி வெற்றிகரமாகச் செய்து காட்டினார். நான்காவது பணி அணுகுண்டுச் சோதனை! 20 கிலோ டன் TNT அழிவாற்றல் உள்ள முதல் அணுகுண்டு தயாராகி 1945 ஜூலை 16 இல் நியூ மெக்ஸிகோ அலமொகாட் ரோவுக்கு [Alamogordo] அருகில் வெடிப்புச் சோதனையில் வெற்றிகரமாய் முடிந்தது! நியூ மெக்ஸிகோவில் முதல் அணுகுண்டு வெடித்த இடம் ‘டிரினிடி ‘ [Trinity] என்று அழைக்கப் பட்டது!

புளுடோனியம் தயாரிப்பதில் மாபெரும் சிரமங்கள் உள்ளன! புளுடோனியம் இயற்கையாகப் பூமியில் கிடைப்ப தில்லை! அந்த உலோகம் அணு உலைகளில்தான் உண்டாக்கப்பட வேண்டும்! ஒரு டன் [1000 kg] இயற்கை யுரேனியத்தை நியூட்ரான் கணைகளால் அடித்து அதன் அணுக்கருக்களைப் பிளந்தால், சுமார் 100 கிராம் புளுடோனியம்239 கிடைக்கிறது! அத்துடன் தீவிரமாய்த் தீங்கிழைக்கும் 10 மில்லியன் கியூரி காமாக் கதிரியக்கமும் [Gamma Radiation] எழுகிறது! ஆதலால் புளுடோனியத்தைப் பிரித்தெடுக்க தூரக் கையாட்சி [Remote Handling] முறைகளைக் கையாள வேண்டும்! யுரேனியம்235 உலோகம் இயற்கை யுரேனியத் தாதுக்களில் மிகச் சிறிய அளவு [0.714%] பூமியிலேயே கிடைக்கிறது.

ஜப்பானில் உண்டான அணுயுகப் பிரளயங்கள்!

‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான்! ‘ என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பார்த்திபனுக்கு ஓதிய ஒரு வேத மொழியை, நியூ மெக்ஸிகோ டிரினிடி [Trinity] பாலை வனத்தில் சரித்திரப் புகழ் பெற்ற முதல் சோதனை அணு குண்டை 1945 ஜூலை 16 ஆம் தேதி வெடித்த போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் உதாரணம் காட்டினார்!

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் அணு ஆயுதச் சோதனை முடிந்து சரியாக 21 நாட்கள் கழித்து, ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டு வீசப்பட்டது! எனோலா கே [Enola Gay] B29 வெடி விமானத்தில் கொண்டு சென்ற ‘லிட்டில் பாய் ‘ [Little Boy] என்னும் யுரேனிய அணுகுண்டு விழுந்து உலகில் முதல் பிரளயம் உண்டானது! அடுத்து மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்டு 9 ஆம் தேதி ‘ஃபாட் மான் ‘ [Fat Man] என்னும் புளுடோனிய அணுகுண்டு நாகசாகியில் போடப் பட்டு இரண்டாம் பிரளயம் உண்டானது! ஹிரோஷிமாவில் நொடிப் பொழுதில் 80,000 பேருக்கும் மேலாக வெடிப்பிலும், தீப்புயலிலும், அதிர்ச்சியிலும், கதிரியக்கத்திலும் தாக்கப்பட்டு மாண்டு போயினர்! அடுத்து 135,000 பேருக்கும் மேல் படுகாய முற்று செத்துக் கொண்டும், சாவை எதிர்பார்த்துக் கொண்டும் துடித்தனர்! அடுத்து நாகசாகியில் 45,000 பேர் மாண்டு, 64,000 பேர் படுகாயப் பட்டனர் என்று 1946 இல் கணக்கிடப் பட்டது!

ஜப்பானுக்குச் சென்று ‘அமெரிக்க வெடிவீச்சுத் திட்டப் பதிவுக்குழு ‘ [The United States Strategic Bombing Survey Team] 1946 ஜூன் 30 இல் வெளியிட்ட, ‘ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணுகுண்டுகளின் விளைவுகள் ‘ [The Effects of Atomic Bombs on Hiroshima & Nagasaki] என்னும் தகவல் கூறுகிறது: முக்கியமான விளைவு ஒரே சமயத்தில் நிகழும் மித மிஞ்சிய மரண எண்ணிக்கை! அடுத்து மூன்று வித உருவில் அணு ஆயுதம் பேரழிவுச் சக்தியாய் கோரக் கொலை புரிகிறது! முதலில் அளவற்ற வெப்பம்! இரண்டாவது பயங்கர வெடிப்பு அல்லது வாயு அழுத்தம்! மூன்றாவது தீவிரக் கதிரியக்கம்! பாதிக்கப் பட்டவர்களில் (20-30)% தீக்காய மரணங்கள்! அதிர்ச்சி, வெடிப்பு, வேறு விதங்களில் (50-60)% மரணங்கள்! மற்றும் (15-20)% கதிரியக்கக் காய்ச்சலில் பாதிப்பு [Radiation Sickness]! மூன்றிலும் மிக மிகக் கொடியது, கதிரியக்கத் தாக்குதல்! கதிரியக்கம் நொடிப் பொழுதில் சித்திரவதை செய்து மக்களைக் கொல்வதோடு, தொடர்ந்து உயிர் பிழைத்தோரையும், அவரது சந்ததிகளையும் வாழையடி வாழையாகப் பல்லாண்டுகள் [Acute (Lethal) & Long Term Effects] பாதித்துக் கொண்டே இருக்கும்! பிறக்கும் குழந்தைகள் கண்கள் குருடாகி, கால்கள் முடமாகி, கைகள் சிறிதாகி அங்க ஈனமாய் பிறக்கும்! மேலும் பலவிதப் புற்று நோய்கள் தாக்கி மக்கள் மரண எண்ணிக்கை அதிகமாகும்!

ராபர்ட் ஓப்பன்ஹைமர் ஜப்பானில் விளைந்த கோர மரணங்களைப் பற்றி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தார்! ஹிரோஷிமா, நாகசக்கி மரண விளைவுகளுக்கும், கடும் கதிரியக்கத் தாக்குதலுக்கும் காரணமான தான் ஒரு குற்றவாளி என்று மனச்சாட்சி குத்தி மனப் போராட்டத்தில் வேதனை யுற்றார்! அணு குண்டுகள் போட்டு இரண்டு மாதங்கள் கழித்து, 1945 அக்டோபர் 16 ஆம் தேதி லாஸ் அலமாஸ் அணு ஆயுதக் கூடத்தின் ஆணையாளர் [Director, Los Alamos Laboratory] பதிவியிலிருந்து, ஓப்பன்ஹைமர் காரணம் எதுவும் கூறாமல் திடீரென விலகினார்!

தேசியப் பாதுகாப்பில் ஓப்பன்ஹைமர் மீது நம்பிக்கை இழப்பு!

பல்லாண்டுகள் முயன்று இமயத்தின் சிகரத்தில் ஏறியவர் அங்கேயே தங்கி இருக்க முடியாது! உச்சியை அடைந்த பின் ஒருவர் கீழே இறங்க வேண்டிய நிலை வந்து விடுகிறது! ஓப்பன்ஹைமர் 1945 நவம்பரில் தான் முன்பு வேலை பார்த்த கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தார். 1946 இல் ஐக்கிய நாடுகளின் அணுசக்திப் பேரையின் [United Nations Atomic Energy Commission] அமெரிக்க ஆலோசகராகப் பணியாற்றினார். 1947 இல் ஓப்பன்ஹைமர் பிரின்ஸ்டன் மேற்துறை விஞ்ஞானக் கூடத்தின் ஆணையாளராக [Director, Institute of Advanced Study, Princeton, N.J.] ஆக்கப் பட்டார். 1947-1952 ஆண்டுகளில் அமெரிக்க அணுசக்திப் பேரையின் [U.S. Atomic Energy Commission] அதிபதியாக ஆக்கப் பாடு பணி செய்து வந்தார்.

அந்தச் சமயத்தில் ரஷ்யா புளுடோனியத்தைப் பயன்படுத்தி, 1949 செப்டம்பர் 3 இல் தனது முதல் அணு ஆயுதச் சோதனையைச் செய்து, அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது! 1947 இல் ரஷ்யக் குழுவினர் இகோர் குர்சடாவ் [Igor Kurchatov] தலைமையில், ரஷ்ய அணுவியல் மேதை பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa], அமெரிக்காவில் என்ரிகோ ஃபெரிமி செய்து காட்டிய அணுக்கருத் தொடரியக்கத்தைத் தானும் ரஷ்யாவில் செய்து முடித்தார்! முக்கியமான ரகசியம் என்ன வென்றால், 1942-1945 ஆண்டுகளில் லாஸ் அலமாஸ் மறைமுகத் தளத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் யாவும், சோவியத் உளவுத் தொடர்பு மூலம் [Soviet Spy Network] ரஷ்யாவில் உள்ள பீட்டர் கபிட்ஸாவின் மேஜைக்கு வந்தடைந்தன!

1953 டிசம்பர் 21 ஆம் தேதி ஓப்பன்ஹைமருக்கு எதிராக அமெரிக்க ராணுவ உளவாளிகள் [Military Secret Service] ஓர் ஒற்று மனுவைத் தாக்கல் செய்தனர்! அமெரிக்க அணுசக்திப் பேரவையின் அதிபதியாக இருந்த சமயத்தில், அமெரிக்கா 1949 அக்டோபரில் திட்ட மிட்ட ஹைடிரஜன் குண்டு தயாரிப்பை ஒப்பாது நிராகரித்தார்! அதுவே அவர் செய்த முதல் குற்றம்! சென்ற காலங்களில் ஓப்பன்ஹைமர் பொதுடமைத் தோழர்களோடு [Communists] நட்பு கொண்டிருந்த தாகவும், அதைப் பற்றிக் கேட்கும் போது, சோவியத் ரஷ்யாவின் அணு ஆயுத உளவு செய்த ஒற்றர்களின் பெயரைத் தருவதில் அவர் காலம் கடத்திய தாகவும் பழிசுமத்தப் பட்டார்! அது அவர் செய்த இரண்டாவது குற்றம்! ஒரு காலத்தில் ஓப்பன்ஹைமர் பொதுடமைக் கட்சிக்கு அன்பளிப்புப் பணம் தந்து கொண்டிருந்தார்! அடுத்து ஒரு சமயம், அவர் ஹாகன் செவலியர் [Haakon Chevalier] என்னும் பொதுடமைத் தோழருக்கு சோவியத் இடைநபர் மூலம் கதிரியக்க ஆய்வுக்கூடம் பற்றித் தகவல் அனுப்பி யிருக்கிறார்! அத்துடன் லாஸ் அலமாஸ் திட்டத்தில் கம்யூனிஸ்டுகள் வேலை செய்ய வாய்ப்புக்கள் அளித்தார்! ராபர்ட் ஓப்பன்ஹைமர் தனையனும், அவரது மனைவியும் கம்யூனிஸ்டுக் கட்சியில் ஏற்கனவே 1930 முதல் உறுப்பினராகச் சேர்ந்துள்ளவர்கள்! மேலும் ராபர்டின் மனைவி காதிரைனும், அவளது பழைய கணவனும் பொதுடமைக் கட்சியின் அங்கத்தினராக இருந்தவர்கள்!  அமெரிக்க ராணுவ உளவாளிகள் ஓப்பன்ஹைமர் பொதுடமைத் தோழன் என்று நிரூபித்துக் காட்டப் பல காரணங்கள் கிடைத்தன!

உடனே அமெரிக்கா அணுசக்திப் பேரவை அதிபதிப் பதவியைப் பிடுங்கி, ஓப்பன்ஹைமரை அரசாங்கப் பங்கெடுப்புகளிலிருந்து அகற்றி வெளியே தள்ளியது! 1954 ஏப்ரல் 12 இல் அமெரிக்க அணுசக்திப் பேரவையின் பாதுகாப்புக் குழு [Security Board of the Atomic Energy Commission] ஓப்பன்ஹைமர் மீது அரசியல் வழக்குத் தொடர்ந்து, விசாரணை ஆரம்ப மானது! 1954 மே மாதம் 6 ஆம் தேதி விசாரணை முடிவில் நல்ல வேளை, ‘நாட்டுத் துரோகி ‘ என்று குற்றம் சாடப் படாமல், ‘பாதுகாப்பு முறையில் நம்பத் தகுதி யற்றவர்’ என்ற நாமத்தை, ஒப்பற்ற விஞ்ஞான மேதை ஓப்பன்ஹைமருக்குச் சூட்டியது! அந்த அபாண்டப் பழியை எதிர்த்து, அமெரிக்க விஞ்ஞானிகளின் ஐக்கிய சபை [The Federation of American Scientists] அவருக்குப் பக்க பலமாக இருந்து, பேரவைக்குக் கண்டனம் தெரிவித்தது!

அமெரிக்காவின் மதிப்பு மிக்கப் பதக்கம் பெற்ற ஓப்பன்ஹைமர்.

ஒருபுறம் ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சைனா ஆகிய நாடுகள் அணு ஆயுத உற்பத்திக்கு முற்படும் போது, அமெரிக்காவில் அணுசக்தியை ஆக்க வழிகளுக்குப் பயன்படுத்த, டென்னஸிப் பள்ளதாக்கு ஆணையகத்தின் அதிபதி [Chairman, Tennessee Valley Authority] டேவிட் லிலியெந்தால் [David Liliyenthal] 1947 ஏப்ரல் 19 இல் வாஸிங்டன் D.C. ஸ்டாட்லர் ஹோட்டலில் [Statler Hotel] காங்கிரஸ் தலைவர்கள், செனட்டர்கள், விஞ்ஞானிகள், அரசாங்கப் பதவியாளர்கள் ஆகியோர் முன்பாகப் பேசினார்! அவரது கையில் வெள்ளியில் செய்த சிகரெட் பாக்ஸ் ஒன்று இருந்தது! ‘பாருங்கள், இது யுரேனியம். இந்தச் சிறு பெட்டிக்குள் அடங்கி உள்ள அபார சக்தியைக் கட்டுப் படுத்தி, 2500 டன் நிலக்கரி எரிவதால் வரும் சக்தியை உண்டாக்கலாம்! அணுசக்தியை மின்சாரம் உற்பத்தி செய்ய நாம் ஆக்க வழியில் பயன்படுத்த வேண்டும் ‘ என்று அமெரிக்காவுக்கு ஓர் புதிய வழியைக் காட்டினார்! அவரே உலகின் முதல் அணு மின்சக்தி நிலையம் அமெரிக்காவில் நிறுவிட அடிகோலியவராகக் கருதப்படுகிறார்!

இரண்டாம் உலகப் போர் நெருக்கடியில் பன்னாட்டு விஞ்ஞான மேதைகளைப் பணிபுரிய வைத்து, சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை உண்டாக்கிப் பந்தயத்தை ஆரம்பித்த ஓப்பன்ஹைமர் தாழ்ச்சி நிலைக்குத் தள்ளப்பட்டு அவமதிக்கப் பட்டாலும், உலக வரலாற்றில் அவருக்கு ஓர் உன்னத இடம் நிச்சயமாக உள்ளது! உலகில் ஊமைப் போர் [Cold War] சற்று குளிர்ந்து போனதும், ஓப்பன்ஹைமரின் மதிப்பு மறுபடியும் தலை தூக்கியது! அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்ஸன் ஓப்பன்ஹைமரின் உன்னத போர்த்துறை விஞ்ஞானப் பணிக்கு 1963 டிசம்பர் 2 இல் அமெரிக்காவின் மதிப்பு மிக்க ‘என்ரிகோ ஃபெர்மிப் பதக்கத்தை’ [Enrico Fermi Award] அளித்து அவரைப் போற்றினார். ‘நீங்கள் இந்த தேசத்தில் நீண்ட காலமாய் விஞ்ஞான மேன்மைக்குச் செய்த சாதனைகளுக்கு, இப்பரிசு அளிக்கப் படுகிறது. விஞ்ஞான அடிப்படைப் பணிகளில் நீங்கள் இயற்றிய பங்கு, உங்கள் சாதனைகளை உலகில் ஒப்பில்லா நிலைக்கு உயர்த்தி யுள்ளது’.

ராபர்ட் ஓப்பன்ஹைமர் தனது 63 ஆவது வயதில் கழுத்துப் புற்று நோயில் அவதியுற்றுப் பிரின்ஸ்டன் நியூ ஜெர்ஸியில் 1967 பிப்ரவரி 18 ஆம் தேதிக் காலமானார்!

*******************

Reference :

1. http://en.wikipedia.org/wiki/Trinity_(nuclear_test)  (First Test)

S.  Jayabarathan (jayabarat@tnt21.com)  February 4, 2010 (Revised R-1)

அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய என்ரிக்கோ ஃபெர்மி

ஜனவரி 28, 2010

என்ரிக்கோ ஃபெர்மி

(1901-1954)

ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng., (Nuclear) கனடா.


அணுவைப் பிளந்த விஞ்ஞானிகள்

1934 ஆம் ஆண்டு ஜனவரியில் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய விஞ்ஞான  மேதை, என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi] முதன் முதல் யுரேனியத்தை நியூட்ரான்  கணைகளால் உடைத்து, அதை இரு கூறாக்கினார். ஆனால் சரித்திரப் புகழ் பெற்ற,  அந்த முதல் அணுப்பிளவு அவருக்குத் தெரியாமலே போனது! காரணம் அணுக்கரு  இயக்கத்தின் விளைவுகள் யாவும் புதிராக இருந்தன. புதுக் கதிர் உலோகத்துடன்  சிறிய துணுக்குகளும் தோன்றின! தான் ஒரு புது மூலகத்தை உண்டாக்கி  விட்டதாகப் ஃபெர்மி தவறாக நம்பினார். சோதனையில் யுரேனியம் கதிரியக்கப்  பட்டு, எதிர்பாராத புதிய ரசாயனக் குணாதிசயங்களை ஏற்று, ஒரு புதிய மூலகமாக  உருமாற்றம் [Transmutation] கொண்டது!  அடுத்த நான்கு ஆண்டுகள் பல தடவை  பாரிஸ், பெர்லின், இத்தாலியில் யுரேனியம் நியூட்ரன் கணைகளால் பிளக்கப்  பட்டாலும், என்ன விந்தை விளைந்துள்ளது, என்று விஞ்ஞானிகளுக்கு அப்போது  புரியவில்லை.

ஜெர்மன் வெளியீடு ‘பயன்பாட்டு இரசாயனம்’ [Applied Chemistry] இதழில் ஐடா &  வால்டர் நோடாக் [Ida & Walter Noddack] விஞ்ஞானத் தம்பதிகள், ஃபெர்மியின்  பிழையான கருத்தை எடுத்துக் கூறி, ‘கன உலோகம் யுரேனியம், நியூட்ரான்  தாக்கும் போது, பிளவு பட்டுப் பல துணுக்குகளாய்ப் பிரிகிறது’ என்று எழுதி  யிருந்தார்கள்.  மெய்யான இந்த விளக்கத்தை, ஃபெர்மி உள்படப் பலர் அன்று  ஒப்புக் கொள்ள வில்லை!  சாதாரண ஆய்வகச் சாதனம் அணுவைப் பிளக்க  முடியாது. விஞ்ஞான விதிகளின்படி, மாபெரும் சக்தியைக் கொண்டுதான்  அணுவை உடைக்க முடியும், என்பது ஃபெர்மியின் அசைக்க முடியாத கருத்து.   பெரும்பான்மையான பெளதிகவாதிகள் [Physicists] யுரேனியம் நியூட்ரானை  விழுங்கி, எதிர்பார்த்தபடி ஒரு புது மூலகத்தை உண்டாக்கி யுள்ளது என்றே  நம்பினார்கள். அப்போது ஐன்ஸ்டைன் உள்படப் பல விஞ்ஞானிகள் அணுவைப்  பிளப்பது அத்துணை எளிதன்று என்ற ஆழ்ந்த கருத்தைக் கொண்டிருந்தனர்.

அணுக்கருப் பிளவை முதலில் விளக்கிய லிஸ் மெயிட்னர்

நியூட்ரான்களை ஏவி அணுக்கரு உடைப்பு [Nuclear Bombardments] ஆராய்ச்சியில்  பங்கேற்ற விஞ்ஞானப் பெண் மேதைகள், இருவர் குறிப்பிடத் தக்கவர். முதலாவது  இயற்கைக் கதிரியக்கம் பற்றி விளக்கி நோபல் பரிசு பெற்ற மேரி கியூரியின் மூத்த  புதல்வி, தாயைப் பின்பற்றிச் செயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபல் பரிசு  பெற்ற ஐரீன் கியூரி. அடுத்து ஜெர்மன் விஞ்ஞானி ஆட்டோ ஹான் [Otto Hahn]  அவருடன் 30 ஆண்டு காலம் ஆய்வு உதவியாளியாகப் பணியாற்றிய, லிஸ்  மெயிட்னர் [Lise Meitner]. ஹானும், மெயிட்னரும் பலமுறை யுரேனியத் தேய்வு  அணுக்கரு இயக்கங்கள் நிகழ்த்தி ஆராய்ச்சி செய்து, ‘புரொட்டோ ஆக்டானியம் ‘  [Protoactinium] என்னும் புது மூலகம் கண்டு பித்தவர்கள். மெயிட்னர் யூதரானதால்,  ஹிட்லருக்குப் பயந்து 1938 இல் சுவீடனுக்கு ஓடி, ஸ்டாக்ஹோம் நோபல்  ஆய்வகத்தில் [Nobel Institute, Stockholm] சேர்ந்து தன் ஆராய்ச்சிகளைத்  தொடர்ந்தார்.

ஐரீன் கியூரி செயற்கைக் ‘கதிர் ஊட்டம்’ [Irradiation] சம்பந்தமாகப் பேசிய சமயம்,  நியூட்ரானைக் கொண்டு யுரேனிய அணுவைத் துண்டிக்க முடியும் என்று  கூறியதைப் பின்பற்றி, யுரேனிய நியூட்ரான் இயக்கத்தை உண்டாக்கி, முதன்  முதலில் அணுவை உடைத்ததாக ஜெர்மனியில் ஆட்டோ ஹான், அவரது தோழர்,  ஃபிரிட்ஷ் ஸ்டிராஸ்மன் [Fritz Strassman] இருவரும் 1938 இல் பறை  சாற்றினார்கள். இவ்வரிய புதுக் கண்டு பிடிப்பைக் கடிதம் மூலம் ஆட்டோ ஹான்,  சுவீடனில் இருந்த தனது பழைய துணையாளி, லிஸ் மெயிட்னருக்குத்  தெரிவித்தார். தகவலைப் படித்த மெயிட்னர் அவரது உறவினர், ஆட்டோ ராபர்ட்  ஃபிரிஷ் [Otto Robert Frisch] இருவரும் புதிய அணுக்கரு இயக்கத்தைப் பற்றி  விவாதித்து, ‘இயற்கை’ [Nature] ஃபிரிஷ் வெளியீட்டுக்கு உடனே இதைப் பற்றி  விபரமாக எழுதி, அதில் ‘அணுக்கருப் பிளவு இயக்கம்’ [Nuclear Fission]  நிகழ்ந்துள்ளது என்ற பதத்தைப் பயன்படுத்தி யிருந்தார்கள். அணுவைப் பிளந்தவர்  பலராயினும் மெயிட்னர், ஃபிரிஷ் இருவர்தான் முதலில் அணுக்கருப் பிளவைப்  புரிந்து உலகத்திற்கு விளக்கிய, ஐரோப்பிய விஞ்ஞானிகள். இதே ஆட்டோ ராபர்ட்  ஃபிரிஷ் பிறகு அமெரிக்காவுக்குச் சென்று, நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸில்  அணுகுண்டு விஞ்ஞானிகளோடு சேர்ந்து அணுகுண்டுக்குத் தேவையான யுரேனியம்,  புளுடோனியம் உலோக அளவைக் கணித்து, முதல் அணுகுண்டு செய்ய  உதவியவர்.

அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த அமெரிக்க விஞ்ஞானி!

அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடை யாகவோ அன்றி  மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஐந்து விஞ்ஞான மேதைகள்!  முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி! அடுத்து செயற்கைக்  கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி!  அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction]  புரிந்த என்ரிகோ ஃபெரிமி! இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும்  முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட்  ஐன்ஸ்டைன்! முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப்  பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த  ராபர்ட் ஓப்பன்ஹைமர்!

ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டுகள் விழுந்து கோர விளைவுகள்  நிகழ்ந்த பின் உலகின் வல்லரசுகளும், மெல்லரசுகளும் உடனே அணு  ஆயுதங்களை ரகசியமாய் உற்பத்தி செய்ய முற்பட்டன! 1945 இல் அமெரிக்கா  ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல்  அணுகுண்டைச் சோதித்தது! அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல்  பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற  நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன! உலக நாடுகளில் 115  தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty,  NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன! ஆனால்  அர்ஜென்டைனா, பிரேஸில், சைனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான்,  தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பல நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத்  தடுப்பில் கையெழுத்திட ஒருங்கே மறுத்து விட்டன!

அணுவின் அமைப்பு. பிண்ட சக்தி அழிவின்மை.

2500 ஆண்டுகளுக்கு முன்பே, கிரேக்க ஞானிகள் அணுவை பற்றிச் சிந்தித்து  விளக்கியதைத்தான் பிற்கால விஞ்ஞானிகள் அடிப்படையாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கிரேக்க மொழியில் ‘Atomos’ என்றால் பிரிக்க இயலாதது என்று அர்த்தம்.  அதிலிருந்து Atom என்ற பதம் வந்தது. கி.மு.460-370 ஆண்டுகளில் கிரேக்க  வேதாந்த ஞானி டெமாகிரிடஸ் [Democritus] எழுதி வைத்த அணுவியல் நியதி,  [Atomic Theory] “தூய பிண்டம் [Matter] அனைத்தும் நுண்ணிய, கண்ணுக்குத்  தெரியாத, கடினமான, திணிக்க முடியாத, அழிக்க முடியாத மூலச்சிறு தூள்களைக்  [Particle] கொண்டவை. அவைதான் அணுக்கள். அணுவுக்கும் சிறிய தூள் எதுவும்  அகிலத்தில் இல்லை. அணுக்களே பிண்டத்தின் மூலத் துகள். அணுக்கள்  எண்ணற்றவை. பல வடிவம் உடையவை. எல்லையற்ற அண்ட வெளியில்  அணுக்கள் ஓயாமல் எப்போதும் அசைந்து கொண்டே இருப்பவை. அணுக்களின்  அளவு, வடிவம், நிறை வேறு பட்டாலும், அவை யாவும் ஒரே மூலப் பொருளால்  ஆனவை. அணுக்களின் தனிச் சிறப்புப் பிறழ்ச்சிகள் தான் பொருட்களில்  மாறுபாடுகளை உண்டாக்குகின்றன. இயற்கை நிகழ்ச்சியால், அணுக்களின்  முடிவற்ற இயக்கத்தில், அகிலம் உருவானது. அணுக்கள் மோதுவதாலும், தாமே  சுழல்வதாலும் பிண்டத்தின் மாபெரும் வடிவங்கள் தோன்றின”. டெமாகிரிடஸின்  அணுவியல் நியதியே, நவீனத் தத்துவமான ‘பிண்ட சக்தி அழிவின்மை’  [Conservation of Energy & Matter] கோட்பாடுக்கு அடிகோலியது.

இந்து வேதாந்த ஞானிகள் கிரேக்க ஞானிகளுக்கு முன்பே, அணுவைப் பற்றியும்,  அவற்றின் கருவில் இருக்கும் அடிப்படைப் பரமாணுக்களைப் [Sub Atomic Particles]  பற்றியும் கூறி இருக்கிறார்கள் என்று சாமுவெல் கிளாஸ்டன் [Samuel Glasston]  தான் எழுதிய ‘அணுசக்தியின் மூலப் புத்தகத்தில்’ [Source Book on Atomic Energy]  முதல் பக்கத்திலே கூறியிருக்கிறார். அகிலத்தின் தோற்றம் பற்றியும், அண்ட  கோளங்களின் சுழற்சி பற்றியும், சக்தி பொருள் இவற்றின் அழிவின்மை பற்றியும்  இந்து வேதங்கள் பக்கம் பக்கமாய் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  இயற்றியுள்ளன.

அங்கிங்கு எனாதபடி எங்கும் அணுமயம்! ஆனால் அணுவை எவரும் இதுவரைப்  பார்த்ததில்லை! நமது புறக் கண்களுக்கு அணுக்களைக் காணும் திறமை இல்லை.  துளை நுண்ணோக்கிக் [Tunneling MicroScope] கருவி மூலம் தளவுளாவி [Scanning]  மின்கணணிப் பிம்பத்தில் [Computerized Image] நாம் அணுவின் அமைப்பைக்  கண்டறிய முடியும்! எட்டு மில்லி கிராம் எடையுள்ள ஒரு குண்டூசியின் நுனியில் 1  கூபிக் மில்லி மீடரில் [cubic mm] 100 பில்லியன் பில்லியன் [10 அடுத்து 17  பூஜியங்கள்] அணுக்கள் உள்ளன! ஒரு நீர்த் துளியைப் பெரிது படுத்திப் பூமி  வடிவில் நோக்கினால், நீர் மூலத்திரளில் [Molecule] உள்ள அணு, ஓர் எழுமிச்சைப்  பழம் அளவாகக் கருதலாம்.

நூற்றுக்கும் மேற்பட்ட அணு வகைகள் உலகில் உள்ளன. நமக்குத் தெரிந்த தங்கம்,  வெள்ளி, இரும்பு, தாமிரம் [Copper], ஈயம், அலுமினியம் போன்ற பழைய  உலோகங்கள் நிலையானவை [Stable]. பின்னால் புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்ட  யுரேனியம், தோரியம், புளுடோனியம், ரேடியம், பொலோனியம் ஆகியவை  கதிரியக் கத்தால் சுயமாய்த் தேயும், நிலையற்ற [Unstable] கன மூலகங்கள் [Heavy  Elements]. இது வரை கண்டு பிடிக்கப்பட்ட 106 மூலகங்களில் 88 இயற்கையில்  தோன்றுபவை. மற்ற 18 அணுக்கருச் சிதைவிலோ, அன்றி அணு உலைகளிலோ  உண்டானவை. அணு எண் 92 மேல் மூலகங்கள் பூமியில் இயற்கையாகக் கிடைப்ப  தில்லை. அணுக்கள் தனியாகவோ, அன்றி கூட்டாகவோ இயற்கையில்  தோன்றுகின்றன. உதாரணமாக நீரில் ஈரணு ஹைடிரஜனும் [H2], ஓரணுப் பிராண  வாயுவும் [Oxygen] இணைந்தே [H2+O-->H2O] தென்படுகின்றன. ஈரணு, மூவணு  அன்றிப் பலவணு சேர்ந்து இயங்கும் மூலகக் கூறுகளை ‘மூலத்திரள்’ [Molecules]  என்று இரசாயனத்தில் கூறுவார்கள்.

ஜான் டால்டன், ஹென்ரி பெக்குவரல், ஏர்னஸ்ட் ரூதர் ஃபோர்டு, நீல்ஸ் போஹ்ர்  ஆகிய விஞ்ஞானிகளின் புது அணுவியல் நியதியின்படி, அணுவின் அமைப்பு ஓர்  குட்டிச் சூரிய மண்டலம் போன்றது. சூரியன் போல, அணுவின் நடுவே சக்தி  அடங்கிய அணுக்கரு உள்ளது. அண்ட கோளங்கள் போல கருவைச் சதா  எலக்டிரான்கள் [Electrons] நீள்வட்ட [Elliptical] வீதியில் சுற்றி வருகின்றன. நடுக்  கருவில் நியூகிளியான் [Nucleons] எனப்படும் புரோட்டான் தனியாகவோ, அல்லது  நியூட்ரான் கூடச் சேர்ந்தோ இருக்கிறது. அண்ட வெளி போன்று அணுவின்  உள்ளும் பெரும் சூன்ய வெளி சூழ்ந்திருக்கிறது. புரோட்டான் நேர்மின் [Positive],  எலக்டிரான் எதிர்மின் [Negative], நியூட்ரான் நடுமின் [Neutral] கொடையும் [Electrical  Charge] கொண்டவை. எலக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவைகள்  பரமாணுக்கள் [Sub atomic Particles] எனப்படுபவை. ஓர் அங்குள நூலில்  முத்துக்களைப் போல் வரிசை யாகக் கோர்த்தால், 10 பில்லியன் பில்லியன் [10  அடுத்து 17 பூஜியங்கள்] நியூகிளியான்களை அமைத்து விடலாம்!

அணு எண், அணுப் பளுஎண், அணுநிறை, ஏகமூலங்கள்

மூலகத்தின் அணு எண் [Atomic Number] என்பது, அணுக் கருவுக்குள் இருக்கும்  புரோட்டான்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். ஓர் மூலகத்தின் இரசாயனக்  குணங்கள் அதனுடைய அணு எண்ணைப் பொருத்தது. மூலகங்கள் அணு எண்  வரிசையில்தான் அணி அட்டவணையில் [Periodic Tables of Elemets] இடம்  பெறுகின்றன. அணுப் பளு எண் [Atomic Mass Number] எனப்படுவது, கருவில்  இருக்கும் நியூட்ரான் புரோட்டான் கூட்டு எண்ணிக்கையைக் காட்டும். அது  ‘நியூக்கிளியான்’ தொகை. அணு நிறை [Atomic Weight] என்பது மூலகக் கருவில்  புரோட்டான் நியூட்ரான் ஆகியவற்றின் கூட்டு நிறை. அணு நிறை என்புது ஓர் ஒப்பு  நிறை [Relative Mass]. கரியின் [Carbon12] அணுக்கருவில் 6 புரோட்டான், 6  நியூட்டான் உள்ளன. கரியின் அணு எண் 6, பளு எண் 12, அணு நிறை  12.00000000. கரியின் அணு நிறை 8 தசமத் துள்ளியமாக இருப்பதால், மற்ற  மூலகங்களின் அணு நிறை யாவும், கரி நிறைக்கு ஒப்பாகக் கணக்கிடப் படுகிறது.  உதாரணமாக, முதல் எளிய மூலகமான ஹைடிரஜன் ஒரே ஒரு புரோட்டானைக்  கொண்டுள்ளது. அதன் அணு எண் 1. பளு எண் 1. நிறை 1.0078.

சில மூலகங்களுக்கு ஒன்று அல்லது பல ஏகமூலங்கள் [Isotopes] இயற்கையிலோ  அன்றி செயற்கையிலோ ஆக்கப் பட்டுள்ளன. ஏகமூலங்கள் என்றால்,  அணுக்கருவில் ஒரே புரோட்டான் எண்ணிக்கை கொண்டு, வெவ்வேறு நியூட்ரான்  எண்ணிக்கை கொண்ட மூலகங்கள். உதாரணமாக ஹைடிரஜன் மூலகத்திற்கு  இரண்டு ஏகமூலங்கள் உள்ளன. டியுடிரியம் [Deuterium] புரோட்டான் 1, நியூட்ரான் 1.  டிரிடியம் [Tritium] புரோட்டான் 1, நியூட்ரான் 2.

கரி12, கரி13, கரி14 மூன்றும் கரியின் ஏகமூலங்கள். அது போல், யுரேனியம்238  இன் ஏகமூலம் யுரேனியம்235. யுரேனியம்238 இன் அணு எண்: 92 [92  புரோட்டான், 146 நியூட்ரான்], பளு எண்: 238. அணு நிறை: 238.03. யுரேனியம்235  இன் அணு எண்: 92 [92 புரோட்டான், 143 நியூட்ரான்], பளு எண்: 235.  இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் U238 விகிதம்: 99.286% U235 விகிதம்:  0.714% யுரேனியம் U235 தானாகப் பிளந்து [Spontaneous Fission] உடையும் தன்மை  யுடையது. யுரேனியம் U235 போன்று, புளுடோனியம் Pu239, தோரியம் Th233  இரண்டும் சுயமாய்ப் பிளக்கும் தன்மை யுடையவை. ஆதலால் அணுசக்தி  நிலையங்களிலும், அணு ஆயுதங்களிலும் U235, அல்லது Pu239, அல்லது Th233  முழுமையாக [100%] அல்லது செழுமையாக [Small% Enriched] எரிக்கோலாய்ப் [Fuel  Rods] பயன் படுகின்றன.

நிலையற்ற கன மூலகங்களான யுரேனியம், தோரியம், புளுடோனியம், ரேடியம்,  பொலோனியம் சிதைந்து தேய்வதற்குக் காரணம் என்ன ? கன உலோகங்களின்  அணுக்கருவில் உள்ள நியூகிளியான் [புரோட்டான் நியூட்ரான்] எண்ணிகையைப்  பார்த்தால் இதற்குப் பதில் அறிந்து விடலாம். நிலையான உலோகங்களில் ஏறக்  குறைய நியூட்ரான், புரோட்டான் சம எண்ணிக்கையில் உள்ளன. அதாவது  நியூட்ரான் / புரோட்டான் பின்னம் [Neutron Proton Ratio] = 1 [அருகில்]. யுரேனியம்  [U235] இல் நியூட்ரான்145 / புரோட்டான்92 பின்னம் = 1.55 அதாவது  அணுக்கருவில் அதிகமான, அளவுக்கு மீறிய நியூட்ரான்கள் அடங்கி நிலை யற்ற  தன்மையை உண்டாக்குகின்றன.

மீறும் தொடரியக்கம், ஆறும் தொடரியக்கம், பூரணத் தொடரியக்கம்

அணு உலைகளில் U235 மீது, ஒரு நியூட்ரான் கணையை ஏவிடும் போது,  அணுக்கருவில் நியூட்ரான் எண்ணிக்கை இன்னும் அதிகமாகி, U236 இரு  துண்டங்களாகப் பிரிந்து, இணைவு சக்தி [Binding Energy] வெளியாகி, அடுத்து 2  அல்லது 3 நியூட்ரான்கள் இயக்கத்தில் உண்டாகும். ஓர் இயக்கத்தில் தோன்றிய 2  நியூட்ரான்கள் அடுத்துள்ள U235 அணுக்களைத் தாக்கிப் பிளவுத் துணுக்குகளும்  [Fission Products] 4 நியூட்ரான்கள் வெளியேறும். இவ்வாறு நியூட்ரான் எண்ணிக்கை  2, 4, 8, 16, 32, 64 என்ற தொடர்ப் பெருக்கத்தில் [Geometric Progression] மீறிப்  போய் அபார சக்தி பொங்கி அணுகுண்டாக வெடிக்கிறது. அளவு கடந்த நியூட்ரான்  பெருக்க இயக்கத்திற்கு ‘மீறும் தொடரியக்கம்’ [Super Critical Reaction] என்று  சொல்லப்படுகிறது. அணு உலையில் நியூட்ரான் விழுங்கிகளைத் [Neutron  Absorbers] தக்க சமயத்தில் நுழைவித்து, எண்ணிக்கையைக் குறைத்தால் இயக்கம்  சிறிது நேரத்தில் நின்று விடும். இக்கட்டுபாடு ‘ஆறும் தொடரியக்கம்’ [Sub Critical  Reaction] எனப்படும். நடு நிலமையில் நியூட்ரான் விழுங்கிகளை ஏற்றியும்,  இறக்கியும் ஆட்சி செய்து, சம நிலை நியூட்ரான்களை நிலவச் செய்வதைப்,  ‘பூரணத் தொடரியக்கம்’ [Critical Reaction] என்பார்கள். மீறும் தொடரியக்கம்  பொதுவாக அணு ஆயுதங்களில் பயன்படும். அணு உலை ஆட்சியில் [Reactor  Control] பூரணத் தொடரியக்கமும், ஆறும் தொடரியக்கம் உபயோக மாகிறது.  எதிர்பாராத அபாய நிலை [Prompt Critical] இயக்கங்களைத் தடுக்க தடைக் கோல்  [Shut Down Rods] அல்லது தடுப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. பூரணத்  தொடரியத்தில் வெப்பசக்தி ஒரே நிலையில் சீராகக் கட்டுப் பாடாகிறது. தடுப்பு,  ஆறும் இயக்கங்களில் முறையே வெப்பசக்தி உடனே அல்லது மெதுவாகக்  குறைக்கப் படுகிறது.

அணுஉலையில் கோடான கோடி இயக்கங்கள் ஒரு நொடிக்குள் நிகழ்கின்றன.  ஓரணுப் பிளவில் மட்டும் 200 MeV வெப்பசக்தி வெளியாகிறது. U235 சுயமாகவே  பிளவுபடுவதால், அதைச் சுற்றி நியூட்ரான்கள் வெளிப்பட்டு மறைகின்றன.  நியூட்ரான் பெருக்க இலக்கம் [Muliplication Factor] K=1 என்றால் பிறக்கும்  நியூட்ரான்கள் யாவும் இயக்கத்தில் பயன்படுகின்றன என்று அர்த்தம். K=0.5  என்றால் நியூட்ரான் எண்ணிக்கை குன்றி உலை நிறுத்தப் படுகிறது. K=1.006  என்றால் நியூட்ரான் அணு உலையில் சக்தி அதிகமாவதைக் காட்டுகிறது. K>1.5  என்றால் அபாயம்! நியூட்ரான்கள் அளவுக்கு மிஞ்சுகின்றன! தடை ஏற்பாடுகள்  உடனே இயங்கி உலையைப் பாதுகாக்க வேண்டும். K>3 என்றால் அங்கே ஓர்  அணுகுண்டு வெடிக்கப் போகிறது!

அணுயுகம் பிறந்தது, அமெரிக்காவின் ஆய்வு அணு உலையிலே!

இரண்டாம் உலக மகா யுத்த சமயத்தில், ஐரோப்பிய விஞ்ஞானிகள் பலர்  அமெரிக்காவுக்கு விரைந்தார்கள். குறிப்பாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ்  போஹ்ர் [Niels Bohr, Denmark], லியோ ஸிலார்டு, எட்வெர்டு டெல்லர், யுஜீன்  விஞ்னர் [Leo Szilard, Edward Teller, Eugene Wigner, Hungery], என்ரிகோ ஃபெர்மி  [Enrico Fermi, Italy], ஹான்ஸ் பெதே [Hans Bethe, Germany], ஆட்டோ ஃபிரிஷ் [Otto  Frisch, Vienna] ஆகியோரும், மற்றும் அமெரிக்காவில் பல ஆய்வுக் கூடங்களில்  பணியாற்றிய விஞ்ஞானிகள் ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer]  தலைமையில், லெஸ்லி குரூஸ் [Leslie Groves] ராணுவ அதிகாரியின் கீழ் நியூ  மெக்ஸிகோ, லாஸ் அலமாசில் மன்ஹாட்டன் திட்டத்தில் [Manhattan Project]  அணுகுண்டு தயாரிக்க ஆழ்ந்தார்கள்.

சிகாகோ பல்கலைக் கழகத்தின் உலோகவியல் ஆய்வகத்தில் [Metallurgical  Laboratory] 1942 நவம்பர் 7 ஆம் தேதி அணுவியல் விஞ்ஞானிகள் கூடி, முதல்  அணுஉலையைக் கட்டத் துவங்கினார்கள். CP1 [Chicago Pile-1] என்று பெயர்  பெறும், இந்த அணுஉலையை டிசைன் செய்த இத்தாலிய விஞ்ஞானி, என்ரிகோ  ஃபெர்மி நிறுவன மேற்பார்வையாளர். மற்றும் ஆர்தர் காம்ப்டன் [Arthur Compton],  லியோ ஸிலார்டு, யுஜீன் விஞ்னர், வால்டர் ஸின் [Walter Zinn] குறிப்பாக  அணுஉலை ஏற்பாட்டில் நேரடிப் பங்கேற்றவர்கள். இந்த அணு உலைக் கவசமற்ற  [Unshielded], வெப்பம் தணிக்கப் படாத [Uncooled] உலை. ஃபெர்மியின் திட்டப்படி  5.5 டன் யுரேனியம், 36 டன் யுரேனியம் ஆக்ஸைடு இரண்டும் திணித்த  கரித்திரட்டுக் [Graphite] கோளங்கள் சீரணியில் அமைக்கப் பட்ட ‘சதுரப் பெட்டகம்’  [Cubic Lattice] ஒன்று கட்ட வேண்டும். அணுப் பிளவில் முதலில் எழும்  நியூட்ரான்களின் வேகத்தைக் குன்றச் செய்து மிதமாக்கிட 344 டன் கரித்திரட்டுக்  கட்டிகள் பயன் பட்டன. இதை அமைக்க, சாதனங்கள் உள்பட மொத்தச் செலவு 1  மில்லியன் டாலர். ஒரு சில வாட்ஸ் [Watts] வெப்ப சக்தி உண்டாக்கும் எளிய  ஆய்வு உலை, அணுவியல் பெளதிகச் சோதனைகளுக்கும், அணுக்கருத்  தொடரியக்கம் ஏற்படுத்தவும் டிசைன் செய்யப் பட்டது. ஃபெர்மி 17 நாட்கள்  நியூட்ரான் ‘பெருக்க இலக்கம்’ [Muliplication Factor] K=1 ஆகக் கொண்டு, பூரண  இயக்கத்தில் ஆட்சி செய்து, தன் டிசைன் முடிவுகளைச் சரிபார்த்துக் கொண்டார்.

மித நியூட்ரான்தான் யுரேனியம்235 [U235] இல் கலந்து, அணுக்கருப் பிளவை  உண்டாக்க முடியும். வேக நியூட்ரான் U235 இல் அணுப் பிளவு ஏற்படுத்துவது  இல்லை. ஆனால் நியூட்ரான் யுரேனியம்238 [U238] அணுக்கருவுடன் சேரும் போது,  புளுடோனியம்239 [Pu239] ஆக மாறுகிறது. அடுத்து மித நியூட்ரான் Pu239 தாக்கி  அணுக்கருப் பிளவு உண்டாக்கிச் சக்தி எழுகிறது.

கரித்திரட்டு செங்கல் போல் வெட்டப் பட்டு மரச் சட்டங்களில் அமைக்கப் பட்டு,  எரிப் பண்டமான யுரேனியக் கோளங்கள், கரிக்கட்டி மூலையில் அடுத்தடுத்து  வைக்கப் பட்டன. அணுஉலைப் பாதுகாப்புக்கு நியூட்ரான் விழுங்கியான 7  ‘காட்மியம் கோல்கள்’ [Cadmium Rods] இடையே செங்குத்துத் துளைகளில்  நுழைக்கப் பட்டன. மீறும் தொடரியக்கம் எழாது தடுக்க, எப்போதும் நியூட்ரான்  தடைக் கோல்கள் அணு உலையில் தயாராக இருக்க வேண்டும். மூன்று  துளைகளில் நியூட்ரான் மிதக் கட்டுப் பாட்டுக்குப் ‘போரான் இரும்புக்’ கோல்கள்  [Boron Steel] தொங்க விடப்பட்டன. மட்டத் துளைகளில் போரான் டிரைபுளுரைடு  [Boron Trifluoride] உள்ள ‘நியூட்ரான் மானிகள்’ [Neutron Monitors] நியூட்ரான்  திணிவைக் [Neutron Flux] கண்காணிக்க அமைக்கப் பட்டன.

1942 டிசம்பர் 2 ஆம் தேதி 3:25 P.M. சரியாக, ஃபெர்மி பச்சைக் கொடி காட்ட,  உதவியாளர் ஜார்ஜ் வீல் [George Weil] இறுதி மித ஆட்சிக் கோலை மேலே  நீக்கிடும் போது, பெருக்கு இலக்கம் K=1.0006 ஆகக் கூடி நியூட்ரான் எண்ணிக்கை  விரிந்து முதன் முதல் அணுக்கருத் தொடரியக்கம் [Nuclear Chain Reaction]  சிகாகோ ஆய்வு அணுஉலையில் காட்டப் பட்டு ‘அணு யுகம்’ [Atomic Age]  பிறந்தது. மாபெரும் இந்த அரிய சரித்திர சாதனையை நேரில் கண்ட விஞ்ஞான  மேதைகள் பெர்மி, காம்ப்டன், ஸிலார்டு, விஞ்னர், வால்டர் ஸின் ஆகியோர் தவிர  மற்றும் 42 பேர்கள் பால்கனியில் நின்று, இந் நிகழ்ச்சியைக் கண்டு பெரு மகிழ்ச்சி  அடைந்தனர். உலகின் முதல் அணுஉலை 28 நிமிடங்களுக்கு இயங்கி அதன் பின்  ஆட்சிக் கோல்கள் மறுபடியும் நுழைக்கப் பட்டு உலை நிறுத்தப் பட்டது. இவ்வரிய  வெற்றியை, ஆர்தர் காம்ப்டன் உடனே குறி மொழியில் [Code Language]  ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் வேந்தராய் இருந்த ஜேம்ஸ் பிரையன்ட்  கொனாட் [James Bryant Conant] அவருக்குப் தொலை பேசியில், ‘இத்தாலிய  மாலுமி புதிய உலகில் கால் வைத்தார் ‘ என்று செய்தி கொடுத்தார்.

அணு உலை, அணுசக்தியின் பிதா, என்ரிகோ ஃபெர்மி

என்ரிகோ ஃபெர்மி 1901 இல் செப்டம்பர் 29 ஆம் தேதி இத்தாலியில் ரோம் நகரில்  பிறந்தார். ஆக்கத் திறமையும், கணித வல்லமையும், ஆய்வுச் சாதுரியமும்,  சோதனை யுக்தியும் ஒருங்கே பெற்றவர். சிறு வயதிலேயே பெளதிகத்தில் மிகுந்த  ஆர்வம் காட்டினார். பைசா நகரப் பல்கலைக் கழகத்திலும், ஐரோப்பாவில் வேறு  இடங்களிலும் படித்துப் பெளதிகத்தில் பட்டம் பெற்று, ரோம் பல்கலைக் கழகத்தில்  பேராசிரியராகப் பணியாற்றியவர். 1934 முதல் கதிரியக்க ஆய்வில் பீட்டாக்கதிர்  தேய்வு நியதியைத் [Theory of Beta Decay] தோற்றுவித்தவர். இயல் யுரேனியத்தை  [Natural Uranium] நியூட்ரான் கணைகளால் தாக்கி, செயற்கைக் கதிரியக்கத்தை  உண்டு பண்ணி, புது யுரேனியச் சீரணி மூலகங்களை [Trans Uranium Elements]  உருவாக்கியவர். அந்த பெளதிகச் சாதனைக்கு 1938 இல் ஃபெர்மி நோபல் பரிசு  பெற்றார்.

அவரது மனைவி யூதரானதால், மதச் சீண்டலைத் தாங்க முடியாமல், யுத்த  சமயத்தில் அமெரிக்காவுக்கு விரைந்தார். ஆங்கு கொலம்பியா பல்கலைக்  கழகத்தில் பெளதிகப் பேராசியராகச் சேர்ந்தார். தான் முன்பே துவங்கிய யுரேனிய  நியூட்ரான் அணுக்கரு இயக்கங்கள் 1939 இல் பிரபலமாகி, ‘அணுக்கருப் பிளவு’  விளக்கமாகி ஐரோப்பாவில் வெளியான போது, ஃபெர்மி நியூ மெக்ஸிகோ லாஸ்  அலமாஸில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அடியில் அணுகுண்டு ஆக்கும் முயற்சியில்  இறங்கிய மற்ற விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பணியாற்றினார்.

சிகாகோ பல்கலைக் கழகத்தில் 1942 டிசம்பரில் சரித்திரப் புகழ் பெற்ற முதல்  அணுஉலையில், முதல் ‘அணுக்கருத் தொடரியக்கத்தை’ [Nuclear Chain Reaction]  நிகழ்த்திக் காட்டி, முதல் அணுகுண்டு அழிவுக்கும், முதல் அணு மின்சக்தி  ஆக்கத்திற்கும் காரண கர்த்தாவாக விஞ்ஞான வானில் ஒளி வீசினார்.  யுத்தத்திற்குப் பிறகு 1946 இல் சிகாகோ பல்கலைக் கழகப் பெளதிகப்  பேராசிரியராகப் பணியாற்றி, 1954 நவம்பர் 28 ஆம் தேதி தன் 53 ஆம் வயதில்  எதிர்பாராத விதமாகப் புற்று நோயில் காலமானார். அமெரிக்கா அவரது பெயரில்  50,000 டாலர் ‘என்ரிகோ ஃபெர்மி பரிசு’ [Enrico Fermi Award] ஒன்றை ஏற்படுத்தி  உள்ளது. அவரைக் கெளரவிக்க அமெரிக்கா முதலில் அவரது சாதனைக்கு அப்  பரிசை என்ரிகோ ஃபெர்மி அளித்தது!

************

S. Jayabarathan (jayabarat@tnt21.com) January 28, 2010

************

S. Jayabarathan (jayabarat@tnt21.com) January 28, 2010

ஆயுத மனிதன் (பெர்னாட் ஷாவின் ஓரங்க நாடகம்)

ஜனவரி 21, 2010

ஆயுத மனிதன்

(The Man of Destiny)

ஓரங்க நாடகம்

அங்கம் -1 பாகம் -1

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“எனது ஓய்வு காலத்தில் நான் எனது உடைவாளை மயிலிறகாக மாற்றிக் கொள்வேன்.  என் அரசாட்சி வரலாற்றில் அது வியப்பூட்டலாம்.  இதுவரை அவர் எனது போலி நிழல் வடிவை மட்டுமே கண்டிருக்கிறார்.  இப்போது என் நிஜ உருவத்தைக் காட்டப் போகிறேன்.  எத்தனை தோற்றங்களைத்தான் நான் வெளிப்படுத்த முடியும் ?  பல மனிதருக்கு என் பொய்யுருவே தெரிந்திருக்கிறது.  ஆயிரக் கணக்காக நான் வெறுக்கத் தக்கவற்றை நாட்டுப் பாரமாக நிரப்பி வந்திருக்கிறேன்.  முடிவில் எனக்கு அவை என்ன செய்துள்ளன ? என்னை நயவஞ்சகத்தில் எல்லாம் தள்ளிவிட்டன !”

நெப்போலியன் (1769–1821)


நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி:

ஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி.  தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர்.  வறுமையி லிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார்.  அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ•ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), ஆனந்த நாடகங்கள் (Plays Pleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), இதயத்தைப் பிளக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :

1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான்.  அப்போது நெப்போலியனுக்கு வயது 27.  அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் !  நாடக ஆரம்பத்தில் பிரான்ஸிலிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான்.  அவனது லெஃப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும்.  ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெஃப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !

அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.

நாடகத்தில் பங்கெடுப்பாளர் :

1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் போர் ஜெனரல் (27 வயது)

2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)

3. பிரென்ச் லெ·ப்டினென்ட் : (24 வயது)

4. ஹெலன் : ஓர் ஆஸ்டிரியப் பெண் (30 வயது)

காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.

இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)

ஆரம்பக் காட்சி :

(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான்.  அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார்.  ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான்.  மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது.  எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன்.  மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன.  பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன.  இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான்.  நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன.  கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான்.  வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான்.

கியூஸெப்:  (மலர்ந்த முகத்தோடு)  இன்று எங்களுக்கு ஒரு பொன்னாள் !  மேன்மை தங்கிய சக்ரவர்த்தி தங்கள் வருகையால் எங்கள் விடுதி பெருமைப் படுகிறது !

நெப்போலியன்:  (படத்தில் முழுக் கவனத்தைச் செலுத்திக் கொண்டு)  எதுவும் பேசாதே !  என் கவனத்தைக் கலைக்காதே !

கியூஸெப்:  தங்கள் ஆணைப்படி செய்கிறேன் பிரபு .

நெப்போலியன்:  (சட்டெனத் திரும்பி)  கொஞ்சம் சிவப்பு மை கொண்டு வா !

கியூஸெப்:  ஐயோ சக்ரவர்த்தி !  என்னிடம் சிவப்பு மை இல்லையே !

நெப்போலியன்:  (கடுமையாக)  எதையாவது கொன்று குருதியைக் கொண்டு வா !

கியூஸெப்:  (தயங்கிக் கொண்டு)  மேதகு சக்ரவர்த்தி !  என்னிடம் எதுவும் இல்லை !  வெளியே உங்கள் குதிரை ! சிப்பாய் ! விடுதியில் என் மனைவி ! மாடி அறையில் ஓரிளம் பெண் !

நெப்போலியன்:  (கோபத்துடன்)  உன் மனைவியைக் கொல் !

கியூஸெப்:  மேதகு சக்ரவர்த்தி !  அது முடியாத காரியம் !  என் மனைவிக்கு என்னை விடப் பலம் உள்ளது !  அவள்தான் என்னைக் கொன்று போட்டு விடுவாள் !

நெப்போலியன்:  அப்படியானாலும் சரி ! அல்லது போ வெளியே சிட்டுக் குருவி, காக்கா எதையாவது சுட்டுக் கொண்டு வா ?

கியூஸெப்:  எனக்குச் சுடத் தெரியாது பிரபு !  துப்பாக்கியும் கிடையாது !  நான் கொஞ்சம் சிவப்பு ஒயின் கொண்டு வரட்டுமா ?

நெப்போலியன்:  ஒயினா ?  வேண்டாம்.  அதை வீணாக்கக் கூடாது  !

கியூஸெப்:  ஒயின் குருதியை விட மலிவானது பிரபு !

நெப்போலியன்:  (ஒயினைக் குடித்துக் கொண்டு)  உன்னைப் போன்றவர்தான் உலகில் அதிகம்.  ஒயினை வீணாக்காதே !

(உருளைக் கிழங்கு மேல் ஊற்றிய குழம்பை எடுத்து வரைப்படத்தில் குறியிட்டுக் கொள்கிறான்.  வாயைத் துண்டால் துடைத்துக் கொண்டு காலை நீட்டிச் சாய்கிறான்.)

கியூஸெப்:  (மேஜைத் தட்டுகளை எடுத்துக் கொண்டு)  எங்கள் விடுதியில் ஒயின் பீப்பாய்கள்  நிறைய உள்ளன.  நாங்கள் எதையும் வீணாக்குவ தில்லை.  உங்களைப் போன்ற உயர்ந்த ஜெனரல்கள் மலிவான குருதியை நிரம்ப வைத்திருப்பீர் !  ஆனால் நீங்களும் இரத்தம் சிந்துவதில்லை !

(மேஜை மீது யாரோ விட்டுச் சென்ற ஒயின் மிச்சத்தைக் குடிக்கிறான்)

நெப்போலியன்:  கியூஸெப் !  குருதிக்குப் பண மதிப்பில்லை !  அதுதான் மலிவு ! ஆனால் பணம் கொடுத்துத்தான் ஒயினை வாங்க வேண்டியுள்ளது !  (கனல் அடுப்பு அருகில் செல்கிறான்)

கியூஸெப்:  நான் கேள்விப் பட்டிருக்கிறேன் !  நீங்கள் எதன் மீதும் கவனமாக இருப்பீராம் மனித உயிரைத் தவிர !

நெப்போலியன்: (புன்னகையுடன்)  தோழனே !  மனித உயிர் ஒன்றுதான் தானே தன்னைக் கவனித்துக் கொள்கிறது !  (ஆசனத்தில் அமர்கிறான்)  உயிருக்குப் பயந்தவன் வாழ முடியாது.  சுதந்திரம் வேண்டுமென்றால் கில்லட்டினால்தான் முடியும் !  அமைதியை நிலைநாட்டப் புரட்சியை உண்டாக்க வேண்டும் !  பிரெஞ்ச் புரட்சி நினைவிருக்கிறதா ?

கியூஸெப்:  எங்களுக் கெல்லாம் அறிவு மட்டம் உங்களோடு ஒப்பிட்டால் !  வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் உங்கள் சாதிப்புகளின் ரகசியம் என்ன ?  தெரியாது எங்களுக்கு !

நெப்போலியன்:  நீ இத்தாலியின் சக்ரவர்த்தியாய் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள் !  என்ன புரியுதா ?

கியூஸெப்:  அது நிரம்பத் தொல்லை சக்ரவர்த்தி !  அரசாங்கப் பொறுப்பு வேலை யெல்லாம் உங்களுக்குத்தான் !  நான் இத்தாலிக்குச் சக்ரவர்த்தி யானால் என் விடுதியை யார் நடத்துவது ? நான் பரபரப்பாய் விடுதியில் வேலை செய்வது உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.  தாங்கள் ஐரோப்பாவுக்கே மகா சக்ரவர்த்தியாகி இத்தாலிக்கும் வேந்தரானால் அது எனக்கு மிகவும் பிடிக்கும் !

நெப்போலியன்:  (புன்னகை புரிந்தவாறு)  என் மனதில் உள்ளதை அப்படியே படம் பிடித்துக் சொல்கிறாயே !  ஐரோப்பியச் சக்கரவர்த்தியா ?  ஐரோப்பாவுக்கு மட்டும்தானா ?

கியூஸெப்: தவறிச் சொல்லி விட்டேன்.  உலகத்துக்கே சக்ரவர்த்தியாக வர வேண்டும் தாங்கள் !  ஒருத்தனைப் போல் மற்றொருவன் !  ஒரு நாட்டைப் போல் மற்றொரு நாடு ! ஒரு போரைப் போல் மற்றொரு போர் !  உங்களுக்கு இருக்கும் போர் அனுபவம் யாருக்குள்ளது ?  ஒரு நாட்டை முறியடிப்பது போல்தான் அடுத்த நாட்டை பிடிப்பதும் !

நெப்போலியன்:  கியூஸெப் !  நீ எனக்கு மந்திரியாக இருக்கத் தகுதி உள்ளவன் !  போரிட்டு அடிமையாக்க வேண்டும் நான் எல்லா நாடுகளையும் !  ஒவ்வொரு நாட்டுக்கும் நான் அதிபதியாய் ஆக வேண்டும் !  ஆசிய நாடுகள் மீதும் எனது கண்ணோட்டம் உள்ளது !  குறிப்பாக பிரிட்டீஷ்காரரை விரட்டி இந்தியாவுக்கும் வேந்தனாக வேண்டும் !  அதற்காக சூயஸ் கால்வாயை வெட்ட நான் திட்டங்கள் தீட்டி வருகிறேன் ! இந்தியாவின் ஏகச் சக்ரவர்த்தி நெப்போலியன் !  மகா அலெக்ஸாண்டர் அப்படித்தான் செய்தார் !  அவர் தரை வழியாகப் போனார் !  நான் கடல் வழியாகப் போகத் திட்டமிடுகிறேன் !

கியூஸெப்:  நல்ல யோசனை பிரபு !  ஆனால் அதற்கு முதலில் கால்வாய் வெட்ட வேண்டுமே எகிப்தில் !

நெப்போலியன்: அந்தப் பெரிய திட்டங்கள் எல்லாம் நிறைவேற எனது எஞ்சினியரை நியமித்திருக்கிறேன். இந்த பிரிட்டீஷ் வணிக நரிகளை எல்லா நாடுகளிலிருந்தும் விரட்டி அடிப்பது எனது குறிக்கோள்களில் ஒன்று. நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ எதுவும் சொல்லாதே !

கியூஸெப்: (அருகில் வந்து குனிந்து பணிந்து) மன்னிக்க வேண்டும் பிரபு. நான் ஒரு சாதாரண விடுதிக்குச் சொந்தக்காரன் ! நீங்கள் பிரான்சின் மாபெரும் தளபதி. இப்படி யெல்லாம் நான் தங்களிடம் பேசக் கூடாது. மேன்மை மிகும் நீங்கள் மற்ற வீரத் தலைவரைப் போன்றவர் அல்லர். யுத்தக் கலையில் உங்களுக்கு நிகர் வேறு யார் ? நீங்கள் ஒருவரே !

நெப்போலியன்: அப்படியா ? என்னைப் பற்றி இத்தாலியச் சிற்றூரில் கூடப் பரவியுள்ளதே ! வேறென்ன சொல்கிறார் என்னைப் பற்றி !

கியூஸெப்: ஆஸ்டிரியப் படைகளை முறியடித்து இத்தாலியைக் காத்த மாவீரர் அல்லவா தாங்கள் ! ஒன்று உங்களிடம் கேட்க வேண்டும் பிரபு ! உங்களுக்குத் தெரியுமா மேல் மாடியில் புதிதாய் இன்று வந்து தங்கியுள்ள ஓரிளம் பெண்ணை !

நெப்போலியன்: (நிமிர்ந்து தலைதூக்கி) இளம் பெண்ணா ? அந்தப் பெண்ணுக்கு வயதென்ன ?

கியூஸெப்: நல்ல வனப்பான வாலிப வயதுதான் !

நெப்போலியன்: வயதை எண்ணிக்கையில் சொல் ! பதினாறா அல்லது இருபதா ?

கியூஸெப்: முப்பது வயது இருக்கலாம் பிரபு !

நெப்போலியன்: பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருப்பாளா ?

கியூஸெப்: அழகு ஒப்புமையானது பிரபு ! அது அவரவர் விழியைப் பொருத்தது ! உங்கள் கண் மூலம் நான் காண முடியாது ! ஒவ்வொரு மனிதனும் அழகைத் தீர்மானிக்க வேண்டும். என் கருத்து அவள் ஒரு கவர்ச்சியான பெண் என்பது. இந்த மேஜைக்கு அவள் வந்து அமர நான் ஏற்பாடு செய்யவா ?

நெப்போலியன்: (எழுந்து நின்று) வேண்டாம். இந்த மேஜையில் எதுவும் செய்யாதே. நான் வரைப்படத்தை விரித்து வைத்துள்ளேன் ! யாரும் அதைப் பார்க்கக் கூடாது. நான் காத்திருக்கும் என் படையாள் வரும் வரை யாரையும் நான் சந்திக்க விரும்ப வில்லை. (தன் சங்கிலிக் கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறான். இங்குமங்கும் பரபரப்பாய் நடக்கிறான்.)

கியூஸெப்: ஓ உங்கள் படையாளியா ? இத்தனை நேரமாக வராமல் இருப்பதற்குக் காரணம் ? பிரபு ! வழியில் அவனை ஆஸ்டிரியப் பகைவர் பிடித்திருப்பார். தப்பி வந்திருந்தால் இப்படித் தாமதம் செய்வானா ?

நெப்போலியன்: (கோபத்துடன்) அப்படி நடந்திருந்தால் என் ஆறாக் கோபத்துக்கு சிலர் ஆளாவார் ! முதலில் அப்படி சொன்ன உன்னைத் தூக்கிலிடுவேன் ! அடுத்து உன் மனைவி. அப்புறம் மேல்மாடி அழகி. அத்தனை பேர் தலைகளும் தரையில் உருண்டோடும் !

கியூஸெப்: தூதரைக் கொல்வீரா ? ஆனால் தயவு செய்து என் மனைவியை விட்டு விடுங்கள் ! அப்பாவி அந்த இளம் பெண் இதில் ஒன்றும் பங்கெடுக்காதவள் !

நெப்போலியன்: உன்னை ஒருபோதும் தூக்கிலிட மாட்டேன். உயிரை இழக்க எதிர்ப்புக் காட்டாதவனைக் கொல்வதில் என்ன பயன் ?

கியூஸெப்: உண்மைதான் பிரபு ! என்னுயிர் பிழைத்தது ! ஐயமின்றி நீங்கள் பெரிய மனிதர் ! பொறுப்பதில் உங்களை மிஞ்சுவோர் இல்லை. நியாயத்தை நிறுத்துப் பார்ப்பதில் நீங்கள்தான் உயர்ந்த நியாதிபதி !

நெப்போலியன்: போதும் உமது முகத்துதி ! வாயை மூடு. போ வெளியே நில் ! என் படையாளி வந்தவுடன் உள்ளே அவனை அழைத்து வா ! (மறுபடியும் வரைப்படத்தில் கவனம் செலுத்து கிறான்)

கியூஸெப்: அப்படியே செய்கிறேன். அவன் வருகையை உடனே தெரிவிக்கிறேன் (வெளியே போகிறான்)

நெப்போலியன்: (வரைப்படத்தைப் பார்த்து மௌனமாக முணுமுணுத்து) முதலில் இத்தாலி, அடுத்து ஆஸ்டிரியா, அப்புறம் ஹாலண்டு. அடுத்த ஆண்டுக் கடைசியில் எகிப்து ! சூயஸ் கால்வாய்த் திட்டம் துவங்க வேண்டும். இந்தியாவுக்குப் புதிய கடல் மார்க்கம் சூயஸ் வழியாக !

பெண்ணின் குரல்: (தூரத்திலிருந்து இனிமையான குரலில்) கியூ……..ஸெப் ! ஹலோ ! கியூஸெப் ! எங்கே இருக்கிறாய் ? காது கேட்கிறதா ?

நெப்போலியன்: யார் குரல் அது ?

கியூஸெப்: (உள்ளே எட்டிப் பார்த்து) அதுதான் பிரபு ! மேல்மாடி அழகி ! அவள் பேசுவது இசைபோல் இனிக்கும் !

நெப்போலியன்: மேல்மாடி மங்கையா ?

கியூஸெப்: அவள் ஓர் அதியசப் பெண் ! புதிரானவள் ! பிரபு !

நெப்போலியன்: அதியசப் பிறவியா ? பெண் எப்போதும் புதிரானவள்தானே ! அவள் எந்த நாட்டுக்காரி ? எப்படி வந்தாள் ?

கியூஸெப்: யாருக்குத் தெரியும் ? தாங்கள் குதிரை வாகனத்தில் வந்து தங்குவதற்குச் சற்று முன்னேதான் அவள் வந்தாள். யாரும் அவளுடன் வரவில்லை. ஒரு பெட்டி, கைப் பையுடன் வந்தாள். அவள் வாகனத்தை ஓட்டி வந்தவன் அவள் குதிரையை “கோல்டன் ஈகிள்” விடுதியில் விட்டு வந்ததாகச் சொல்கிறான். அவளது குதிரை அலங்கார அணிகள் பூண்டிருந்ததாம்.

நெப்போலியன்: என்ன ? அணிசெய்த குதிரையோடு ஓரிளம் மங்கையா ? அவள் ஆஸ்டிரிய நாட்டிச் சேர்ந்தவளா ? அல்லது பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவளா ?

கியூஸெப்: பிரெஞ்ச் நாடாக இருக்கலாம்..

நெப்போலியன்: ஐயமின்றி அது அவளது கணவனின் குதிரை ! லோதி யுத்தத்தில் செத்துப் போயிருப்பான் ! பாவம் !

பெண்ணின் குரல்: (இனிமையாக) கியூஸெப் !

நெப்போலியன்: (எழுந்து நின்று) நேற்றுப் போரில் இறந்தவன் மனைவி, வாயில் வரும் குரல் இல்லை அது !

கியூஸெப்: கணவர்கள் செத்துப் போவது எப்போதும் துக்கமாக இருப்பதில்லை பிரபு ! (பெண் குரல் வரும் திசை நோக்கி) இதோ வருகிறேன் பெண்ணே ! (உள்ளெ போகிறான்)

நெப்போலியன்: (அவனைத் தடுத்து நிறுத்தி) நில் போகாதே ! அவளே இங்கு வரட்டும்.

பெண்ணின் குரல்: (பொறுமை இழந்து) கியூஸெப் ! இங்கு சற்று வருகிறாயா ?

கியூஸெப்: பிரபு ! என்னை அனுமதியுங்கள். என் கடமை அது ! யாரும் என்னுதவியைத் தேடி விடுதியில் அழைத்தால் நான் உடனே போக வேண்டும்.

ஆடவன்: (அப்போது வெளியிலிருந்து ஆடவன் ஒருவன் குரல் கேட்கிறது) விடுதியின் அதிபரே ! எங்கிருக்கிறீர் ? (தடதட வென்று பூட்ஸ் சத்தமுடன் ஓர் இராணுவ அதிகாரி நுழைகிறான்.)

நெப்போலியன்: (அவசரமாய்த் திரும்பி) அதோ ! என் படையாளி வந்து விட்டான். போ நீ உள்ளே ! அந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்சனை என்று கேள் !

(கியூஸெப் உள்ளே போகிறான்)

(தொடரும்)

***************************

“எனது வணிக யுத்தம் வெற்றி பெறுவது ! நான் அதில் கைதேர்ந்தவன் ! நானே என் இலியட் இதிகாசத்தை (Greek Epic Iliad -The Siege of Troy) உருவாக்குகிறேன் ! அனுதினமும் அதைத்தான் நான் ஆக்கி வருகிறேன்.”

“படைவீரன் ஒருவன் வர்ண நாடா (Coloured Ribbon) ஒன்றைப் பெறக் கடுமையாக நீண்ட காலம் போரில் சண்டை செய்வான்.”

“இரகசியங்களை ஒளித்து வைத்திருக்கும் ஒற்றர்களின் வாயிலிருந்து அவற்றை வரவழைக்கத் துன்புறுத்தும் காட்டிமிராண்டித்தனமான பழக்க முறை தவிர்க்கப் பட வேண்டும். இம்மாதிரி அவரைச் சித்திரவதை செய்து கேள்விகள் கேட்பதால் பயனுள்ள எதுவும் விளையாது.”

நெப்போலியன், “யுத்தக் கலை” (1798)

*************************

தகவல் :

Based on The Play :

(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)

(B) The Life & Times of Napoleon –Curtis Books (1967)

(C) The Horizon Book of The Age of Napoleon (1963)

(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 27, 2010)

பேரழிவுப் போராயுதம் ஹைடிரஜன் குண்டு ஆக்கிய விஞ்ஞானி எட்வர்டு டெல்லர்

ஜனவரி 15, 2010

(1908–2003)


சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

“ஒருவர் அமைதி நிலைநாட்ட விரும்பினால் அவர் போருக்குத் தயார் செய்ய வேண்டும்.”

ரோமானியப் பொன்மொழி

“சமாதானத்தை விழைவோர் கையில் ஆயுதப் பலம் இருந்தால்தான், உலகில் அமைதி நிலவும்.”

எட்வர்டு டெல்லர்

ஆக்கப்போவது அணு குண்டா ? அல்லது ஹைடிரஜன் குண்டா ?

1942 ஆம் ஆண்டு அமெரிக்க மன்ஹாட்டன் திட்டத்தில் மறைமுகமாகப் பணிசெய்த விஞ்ஞானிகள் முதலில் அணுப்பிளவுக் குண்டை [Fission Bomb] ஆக்குவதற்கு முயன்ற சமயத்தில் அணுப்பிணைவுக் குண்டையும் [Fusion Bomb] உண்டாக்க ஒரு சிலருக்கு ஆர்வம் எழுந்தது! அந்தப் பயங்கரப் படைப்பை மிக்க வெறியோடு நிறைவேற்றப் பல்லாண்டுகள் காத்துக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை, எட்வர்டு டெல்லர் [Edward Teller]! தீவிர அந்த வேட்கையை எட்வெர்டு டெல்லருக்கு முதலில் தூண்டி விட்டவர், என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi]! சிகாகோப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆராய்ச்சி அணு உலையை அமைத்து அணுக்கருத் தொடரியக்கம் புரிய ஃபெர்மியின் கீழ் டெல்லர் பணி செய்யும் போது அவர்களுக்கு ஹைடிரஜன் குண்டைப் பற்றி ஓர் எண்ணம் உதயமானது! ஆனால் ஆரம்பத்திலே யிருந்து எட்வெர்டு டெல்லரை அதைரியப் படுத்தி, முதலில் ஆக்கப் போவது அணுப்பிளவுக் குண்டு, வெப்ப அணுக்கருக் குண்டு [Thermo Nuclear Bomb] அல்ல என்று அதிருப்தி உண்டாக்கியவர், மன்ஹாட்டன் திட்ட அதிபதி ராபர்ட் ஓப்பன்ஹைமர்! ஹைடிரஜன் குண்டுக்கு மறு பெயர் வெப்ப அணுக்கருக் குண்டு! சூப்பர் பாம் [Super Bomb], ஹெச் பாம் [H Bomb] எல்லாம் ஒன்றுதான்! அடுத்து 1947-1952 ஆண்டுகளில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதியாக [Chairman, Atomic Energy Commission] இருந்த சமயத்திலும் டெல்லர் மறுமுறை உயிர்ப்பித்த ஹைடிரஜன் குண்டு திட்டத்தை அங்கீகரிக்காது ஒதுக்கித் தள்ளினார்!

இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே ஊமைப் போர் [Cold War] மூண்டு பெரும் அளவில் வலுத்தது! 1949 செப்டம்பரில் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டைச் சோதனை செய்ததைக் கேட்டு, அதை எதிர்பாராத அமெரிக்கா அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தது! அமெரிக்காவின் மித மிஞ்சிய அணு ஆயுதப் பேராற்றல் சமமாகிப் போனதால், உடனே ஜனாதிபதி ட்ரூமன் மறைமுகமாய் வெப்ப அணுக்கரு ஆயுதம் உருவாக, எட்வெர்டு டெல்லருக்குப் பச்சைக் கொடி காட்டினார்! அதற்காகக் காத்துக் கொண்டிருந்த எட்வெர்டு டெல்லர், ரஷ்யாவுக்குப் பயம் உண்டாக்க ஓர் ராட்சத குண்டை உருவாக்கி, அமெரிக்காவை உலக நாடுகளில் உச்ச வலுத் தேசமாக ஆக்க உறுதி எடுத்துக் கொண்டார்! அந்த முயற்சியில் வெற்றி பெற்று 1952 நவம்பர் முதல் நாள் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் முதல் ஹைடிரஜன் குண்டு வெடித்துச் சோதிக்கப் பட்டது! ஏட்டிக்குப் போட்டியாக அடுத்து சோவித் ரஷ்யாவும் எட்டு மாதங்களுக்குள், 1953 ஆகஸ்டு 12 ஆம் தேதி பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] உருவாக்கிய, முதல் வெப்ப அணுக்கரு ஆயுதத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்து காட்டியது! அந்த அணு ஆயுதப் பந்தயத்தைத் தொடர்ந்து 1957 இல் பிரிட்டன், 1967 இல் சைனா, 1968 இல் பிரான்ஸ் தமது முதல் ஹைடிரஜன் குண்டுகளைச் சோதனை செய்து, அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஐம்பெரும் வல்லரசுகள் என்று பெயர் பெற்றன!

எட்வெர்டு டெல்லரின் இடருற்ற வாழ்க்கை வரலாறு!

எட்வெர்டு டெல்லர் 1908 ஜனவரி 15 ஆம் தேதி ஐரோப்பாவின் ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். ஹங்கேரியில் அரசியல், சமூகக் கொந்தளிப்புக்கள் உச்ச நிலையில் நாட்டை ஆட்டிக் கொண்டிருந்ததால், டெல்லர் தன் இளமை வாழ்க்கையில் மிகவும் அவதி யுற்றார்! அப்போது ஹங்கேரியை ஆட்சி செய்தவர், மிஞ்சிய வலது சாரிக் கொடுங்கோல் தளபதி [Fascist Dictator] நிக்கலஸ் ஹார்த்தி [Nicholas Horthy]! அவரும் ஹிட்லரைப் போல் ஓர் யூத வெறுப்பாளி! முதல் உலகப் போரும் [1919] இரண்டாம் உலகப் போரும் [1936] அடுத்தடுத்து ஹங்கேரி நாட்டைக் கலக்கி அடித்த காலங்கள் அவை! ரஷ்யச் செங்கரடி ஒருபுறமும், நாஸிக் ஜெர்மனியின் ஹிட்லர் மறுபுறமும் ஹங்கேரியை நசுக்கியதால், பல அரிய விஞ்ஞான மேதைகள் அமெரிக்காவுக்கு அகதிகளாய் ஓட வேண்டிய தாயிற்று! அவர்களில் குறிப்பிடத் தக்க அணுவியல் வல்லுநர்கள் மூவர்: லியோ ஸிலார்டு [Leo Szilard], யூஜீன் விஞ்னர் [Eugene Wigner], எட்வெர்டு டெல்லர் [Edward Teller]! அவர்கள் மூவருந்தான் ஹிட்லர் அணு ஆயுதத்தை ஆக்கி உலகை அழிப்பதற்கு முன், அமெரிக்கா அணு குண்டைத் தயாரித்து, இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த முற்பட வேண்டும், என்று ஓர் விண்ணப்பத்தில் எழுதி, ஐன்ஸ்டைனைக் கையெழுத்திட வைத்து, அமெரிக்க ஜனாதிபதி ரூஸவெல்டுக்கு அனுப்பியவர்கள்! பிறகு மன்ஹாட்டன் அணுகுண்டு திட்டத்திலேயும் பணி புரிந்தவர்கள்! மூவரிலும் கடுமையானவர், போராயுதக் கழுகு என வெறுக்கப்படும் எட்வெர்டு டெல்லர்தான் பின்னால் ராட்சத ஹைடிரஜன் குண்டைப் படைத்தவர்! பிற்காலத்தில் ஜெர்மனியின் ஹிட்லரையும், சோவியத் யூனியன் ஸ்டாலினையும் டெல்லர் மிகவும் வெறுத்ததற்கு அவரது வாலிபக் காலக் கொடும் போர்களே காரணம்!

முதலில் டெல்லர் தாய்நாட்டில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டுப் பிறகு ஜெர்மனிக்குச் சென்று கார்ல்ஸ்ரூ பொறியியல் கூடத்தில் [Karlsruhe Institute of Technology] பயின்று, கெமிகல் எஞ்சினியரிங் பட்டம் பெற்றார்! அதன்பின் மியூனிச்சில் [Munich] சிறிது காலம் படித்து, லைப்ஸிக் பல்கலைக் கழகத்தில் [University of Leipzig] பேராசிரியர் வெர்னர் ஹைசென்பெர்கின் [Werner Heisenberg] கீழ் பெளதிகம் பயின்று, கதிர்த்துகள் நியதி [Quantum Theory], மூலக்கூறு விஞ்ஞானம் [Molecular Physics], வானியல் பெளதிகம் [Astrophysics] ஆகியவற்றை விருத்தி செய்தார். 1930 ஆம் ஆண்டு தனது 22 ஆம் வயதில் பெளதகத்தில் Ph.D. பட்டம் பெற்றார்! மியூனிச்சில் மாணவனாக இருந்த போது, ஓடும் மின்சார வண்டியின் அடியில் விழுந்து, அவரது வலது கால் வெட்டப் பட்டுப் பிறகு பொய்க்காலில் வாழ்க்கை முழுவதும் நடக்க வேண்டிய தாயிற்று!

டெல்லர் அடுத்து டென்மார்க் சென்று அணுவியல் நியதிக்கு நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ரிடம் [Neils Bohr], படித்து அணுவியல் பெளதிகத்தில் ஆழ்ந்த திறமை பெற்றார். பிறகு 1931-1933 இ ல் ஜெர்மனியின் காட்டிங்கன் பல்கலைக் கழகத்தில் [University of Gottingen] ஆசிரியராகப் பணி யாற்றினார். அங்கே புகழ் பெற்ற ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் காமாவுடன் [George Gamow (1904-1968)] பழகும் வாய்ப்பு டெல்லருக்குக் கிடைத்தது. அப்போது ஜெர்மனியில் ஹிட்லர் அதிபதி யானதும், அங்கே விஞ்ஞானக் கல்வி புகட்டிப் பிழைக்கலாம் என்ற டெல்லரின் ஆசை நாசமானது!

புத்துலகம் அமெரிக்கா நோக்கி டெல்லர் புறப்பாடு

1935 இல் அவரும் அவரது மனைவி அகஸ்டா ஹார்க்கனி [Augusta Harkanyi] இருவரும் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து சென்றார்கள். அமெரிக்காவில் ஜார்ஜ் வாஸிங்டன் பல்கலைக் கழகத்தில் [Washington D.C.] சேர்ந்து டெல்லர் ஆசிரியராகப் பணி ஏற்றார். அங்கே பணிபுரிந்த விஞ்ஞான மேதை ஜார்ஜ் காமாவை [George Gamow] மறுபடியும் சந்தித்தார்! அவருடன் கூட்டாளியாகச் சேர்ந்து, டெல்லர் அணுக்கரு பெளதிகத்தில் ஆராய்ச்சிகள் செய்தார்! கன உலோகங்கள் கதிரியக்கத் தேய்வின் [Radiactive Decay of Heavier Elements] போது பீட்டா பரமாணுக்கள் [Beta Particles] வெளியேறும் முறைகளைச் சீராக வகுத்துப் புதியக் கோட்பாடுகளை எழுதினர்கள். அவற்றில் ஒன்று காமா-டெல்லர் பீட்டா தேய்வு நியதி [Gamow-Teller Theory of Beta Decay]. மேலும் விண்மீன்களின் தோற்ற ஆரம்பத்தில் எழும் வெப்ப அணுக்கரு இயக்கங்களைப் [Thermo Nuclear Reactions] பற்றியும் இருவரும் ஆராய்ச்சிகள் செய்தனர்.

1939 இல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்த சமயத்தில் ஜெர்மன் விஞ்ஞானிகள் ஆட்டோ ஹான், ஸ்டிராஸ்மன் [Otto Hahn & Strassmann] ஆகிய இருவரும் யுரேனிய அணுவைப் பிளந்ததாக நீல்ஸ் போஹ்ர் கொண்டு வந்த செய்தியைக் கேட்டு டெல்லர் பிரமிப்பும், அதிர்ச்சியும் அடைந்தார்! அப்போது அமெரிக்க ஜனாதிபதி பிராங்கலின் ரூஸவெல்ட் அமெரிக்க விஞ்ஞானிகளை நோக்கி, நாஸிக் ஜெர்மனியை எதிர்த்து அமெரிக்காவைப் பாதுகாக்க உதவும்படி ஆணையிட்ட போது, எட்வெர்டு டெல்லர் ஆயுத ஆக்கத்திற்குத் திட்ட மிட்டுத் தன் வாழ்வை அர்ப்பணிக்கத் துணிந்தார்!

1941 இல் டெல்லர் அமெரிக்கக் குடியினன் [U.S. Citizen] ஆகி, மன்ஹாட்டன் மறைமுக அணு ஆயுத ஆக்கத் திட்டத்தில் [Top Secret Manhattan Project] ராபர்ட் ஓப்பன்ஹைமர் தலைமையின் கீழ்ப் பணி புரியப் புகுந்தார்! சிகாகோப் பல்கலைக் கழகத்தில் என்ரிகோ ஃபெர்மியின் குழுவில் சேர்ந்து, முதல் அணுக்கருத் தொடரியக்கத்தைத் [Nuclear Chain Reaction] தூண்டும் அமைப்பாடு வேலைகளில் ஈடுபட்டார்! செப்டம்பர் 1941 இல் முதல் அணு குண்டு ஆக்கப்படும் முன்பே, என்ரிகோ ஃபெர்மிதான் டெல்லருக்கு ஹைடிரஜன் குண்டு பைத்திகார வேட்கையை எழுப்பி விட்டவர்! அணு குண்டு உண்டாக்கும் பேரளவுத்

தீப்பிழம்பைப் [Hot Plasma] பயன்படுத்தி ஹைடிரஜன் மூலகத்தின் [Hydrogen Element] ஏகமூலமான, டிட்டிரியம், டிரிடியம் [Deuterium & Tritium, Isotopes of Hydrogen] பளுவைக் கொளுத்தி, வெப்ப அணுக்கரு இயக்கத்தை ஏற்படுத்தி ஒரு குட்டிச் சூரியனைப் படைத்து விடலாம் என்று ஓர் ஆலோசனையைக் கூறினார்! 1942 ஆண்டு கோடை காலத்தில் எல்லா விஞ்ஞானிகளும் அணுப்பிளவு குண்டு [Fission Bomb] ஆக்கத்தைப் பற்றி விவாதிக்கும் போது, டெல்லர் அவர் அனைவரையும் வற்புறுத்தி அணுப்பிணைவுக் [Fusion Bomb] குண்டைப் படைக்கத் தனக்குப் பின்னால் திருப்பினார்! மேலும் டெல்லருக்கு அணுகுண்டு ஆக்கத்தில் எந்த வித ஈடுபாடும் இல்லாமல், இட்ட பணி எதுவும் புரியாமல் மற்ற விஞ்ஞானிகளுடன் வேலை செய்ய மறுத்து எல்லாருக்கும் இடையூறாய் இருந்தார்! அநேக விஞ்ஞானிகளுக்கு டெல்லரின் பைத்தியகாரப் போக்கு சிறிது கூடப் பிடிக்க வில்லை!

முதல் ஹைடிரஜன் குண்டு தயாரிப்பில் எட்வெர்டு டெல்லர்

இரண்டாம் உலகப்போர் முடிந்ததும், எட்வெர்டு டெல்லர் லாஸ் அலமாஸ் நியூ மெக்ஸிகோவை விட்டு விட்டு, சிகாகோ பல்கலைக் கழகத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்து பேராசிரியர் பதவி பெற்றார். 1949 ஆகஸ்டில் சோவியத் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டை வெடித்ததும், டெல்லர் அந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி அவரது ஒரே குறிக்கோள் ஆயுதமான வெப்ப அணுக்கருக் குண்டை அதி விரைவில் தயாரித்து, அமெரிக்காவைப் பாதுகாக்க வேண்டு மென்று அரசாங்க அதிகாரிகளுடன் வாதித்தார்! ஊமைப் போர் ஊழலில் [Cold War Politics], ரஷ்யா அமெரிக்காவுக்கு முன்பே ராட்சத குண்டை ஆக்கி விட்டால், அமெரிக்காவின் கதி என்ன ஆவது என்று டெல்லர் கவலை அடைந்தார்! அவரது எச்சரிக்கைக்கு அடி பணிந்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் 1950 ஜனவரி இறுதியில் ஹைடிரஜன் குண்டு திட்டத்திற்கு ஒப்புதல் தந்து அங்கீகாரமும் அளித்தார்!

லாஸ் அலமாஸ் மறைமுகத் தளத்திற்கு எதிர்மறையாக, லாரென்ஸ் லிவர்மோர் ஆய்வுக் கூடம் [Lawrence Livermore Laboratory] புதியதாகக் கலிஃபோர்னியாவில் அமைக்கப் பட்டது. அதற்கு எட்வெர்டு டெல்லர் அதிபதியாக ஆக்கப் பட்டார்! டெல்லருக்கு வெப்ப அணுக்கரு ஆய்தப் பணியில் உதவியவர் முக்கியமாக இருவர்: விஞ்ஞான மேதைகள், டாக்டர் ரிச்சர்டு கர்வின் [Richard Garwin], டாக்டர் ஸ்டனிசியா உலாம் [Stanisiaw Ulam]. அணுப்பிளவு குண்டில் எருவாகப் [Fission Bomb Fuel] பயன்படுபவை, கன உலோகம் யுரேனியம்235 அல்லது புளுடோனியம்239. நியூட்ரான் கணைகளைக் கொண்டு யுரேனிய அல்லது புளுடோனிய அணுக்கருவைப் பிளந்தால் அளப்பரிய வெப்ப சக்தி, கதிர்ச் சக்தி வெடிப்பில் வெளியாகின்றன! அணுப்பிணைவு குண்டின் எரு [Fusion Bomb Fuel] எளிய மூலகம் ஹைடிரஜனின் ஏகமூலங்கள் டியூடிரியம், டிரிடியம் அல்லது லிதிய மூலகம் போன்றவை [Isotopes of Hydrogen, Deuterium, Tritium or Lithium] பேரளவு அழுத்தம், உஷ்ணத்தில் இணைந்து அபார சக்தியை உண்டாக்குகின்றன! அணுப்பிளவு, அணுப்பிணைவு இ ரண்டு இ யக்கங்களிலும் முடிவில் நிகழும் பளு இழப்பு அல்லது பளுக் குறைபாடு [Mass Defect] இணைப்பு சக்தியாக [Binding Energy] வெளியேறுகிறது! அவ்வாறு எழும் பளு இழப்பு எவ்வளவு சக்தியை உண்டாக்கும் என்பதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய ‘பளு சக்திச் சமன்பாடு ‘ [Mass Energy Equation] மூலம் கணக்கிட்டு அறியலாம்!

ஹைடிரஜன் குண்டு மெய்யாக ஓர் ‘பிளவுப் பிணைவுக் குண்டு ‘ [A Fission Fusion Bomb]. அதனுள்ளே இரு ஆயுதங்கள் அமைப்பட்டுள்ளன. முதலாவது தூண்டும் அணுப்பிளவுக் குண்டு [Fission Bomb]. இரண்டாவது முடிவில் வெடிக்கும் ணுப்பிணைவுக் [Fusion Bomb] குண்டு. அணுப்பிளவு இயக்கம் முதலில் வெடித்து, அளப்பரிய அழுத்தமும், வெப்பமும் உண்டாகி அணுப்பிணைவு எருவை எரித்துப் பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில், சூரியன் போன்று வெப்ப அணுக்கரு இயக்கத்தைத் தூண்டி, தொடரியக்கம் நிகழ்கிறது! அப்போது பன்மடங்கு வெப்ப சக்தி உண்டாகிப் பயங்கர வெடிப்பும், தீவிரக் கதிர்வீச்சும் எழுகின்றன! அணுகுண்டு தரும் அதிர்ச்சியில் [Shockwave] இரண்டாவது அணுப்பிணைவு மூலகங்கள் அழுத்தப் பட்டு, வெடிப்பால் விளையும் பேரளவுத் திணிவும், உஷ்ணமும் [High density & Temperature] வெப்ப அணுக்கரு எருவைப் [Thermo Nuclear Fuel] பிணைவு செய்து, பிரம்மாண்டமான சக்தியை வெளியாக்கும்! இந்த முறையைப் படைத்தவர், டாக்டர் உலாம்! டெல்லர் அதைச் சற்று மாற்றி, அதிர்ச்சிக்குப் பதிலாக, அணுகுண்டு வீசும் பேரளவு கதிர்வீச்சைப் [Radiation] பயன் படுத்தி, வெப்ப அணுக்கரு எருவை அழுத்தவும், பெருங்கனல் எழுப்ப வேண்டும் என்று முடிவான அமைப்பைச் செய்தார்! முடிவான அந்த வெப்ப அணுக்கரு முறை ‘டெல்லர்-உலாம் அமைப்பு ‘ [Teller-Ulam Configuration] என அழைக்கப் படுகிறது.

1952 நவம்பர் முதல் தேதி டெல்லர்-உலாம் அமைப்பில் தயாரான 10 மெகா டன் TNT வெடிப்பாற்றல் உள்ள முதல் ஹைடிரஜன் குண்டு, பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் வெற்றி கரமாக வெடிக்கப் பட்டுச் சோதிக்கப் பட்டது! அந்த ராட்சத குண்டு ஹிரோஷிமாவில் போட்ட முதல் குண்டை விட 700 மடங்கு பேரழிவாற்றல் கொண்டது! ஹைடிரஜன் குண்டுகளின் அழிவுச் சக்திக்கு ஓர் எல்லையே இல்லை! பொதுவாக அவற்றின் அழிவாற்றல் அணுகுண்டை விட 100 முதல் 1000 மடங்கு அதிகமானது! ஹைடிரஜன் குண்டில் பயன்படும் அணுக்கரு எரிப்பண்டம் மலிவானது! எரிப்பண்டத்தின் அளவுக்குத் தக்கவாறு அழிவாற்றலைக் கூட்டிக் குறைக்கலாம்! முரட்டுப் பிடிவாதத்தில் இறுதியாக ராட்சத அழிவு ஆயுதத்தைத் தயாரித்து வெற்றி பெற்ற எட்வெர்டு டெல்லர், ஆயுதச் சோதிப்புக்குப் பின்பு பல உலக விஞ்ஞான மேதைகளின் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளானார்!

உலக நாடுகளின் அணு ஆயுதப் பந்தயம்! ஆயுதக் கட்டுப்பாடு!

அணுகுண்டுகளின் வெடிப்பாற்றலை கிலோ டன் டியென்டியில் [Kiloton TNT] குறிப்பிடும் போது, குறைந்தது 1000 மடங்கு அதிக அழிவு சக்தியுடைய, ஹைடிரஜன் குண்டுகளை மெகா டன் டியென்டியில் [Megaton TNT] கணக்கிடுகிறார்கள்! 50 மெகா டன்னுக்கும் மேற்பட்ட அபார அழிவாற்றல் உடைய வெப்ப அணுக்கரு குண்டுகள் இதுவரை வெடிக்கப் பட்டுள்ளன! ஆனால் நாட்டிடையே ஏவப்படும் கட்டளை ஏவுகணைகளில் [Intercontinental Ballistic Missiles, ICBM] 100 கிலோ டன் முதல் 1500 கிலோ டன் வெடிப்பாற்றல் உடைய குட்டி ஹைடிரஜன் குண்டுகளே பயன் படுகின்றன! மின்கணனி மூலம் செலுத்தப்படும் கட்டளை ஏவுகணைகள் பூகோளத்தின் பாதி தூரத்தை 20 அல்லது 25 நிமிடங்களில் பயணம் செய்து, துள்ளியமாக சில ஆயிரம் அடிகளுக் கருகில் குறியிட்ட இடத்தைத் தாக்குகின்றன! 1980-1990 ஆண்டுகளில் மட்டும் 40,000 பேரளவு அழிவியற்றும் வெப்ப அணுக்கரு ஆயுதங்கள் [Weapons of Mass Destruction] தயாரிக்கப் பட்டு, மனித இனத்தை அழித்துவிடப் பயமுறுத்திக் கொண்டிருந்ததாக அறியப் படுகின்றது!

35 ஆண்டுகள் அமெரிக்கா ரஷ்யா இரு நாடுகளும் ஏட்டிக்குப் போட்டியாய் அணு ஆயுதங்களையும், அவற்றை ஏந்திச் செல்லும் கட்டளை ஏவுகணைகளையும் அதிகரித்து அடுக்கிக் கொண்டே போயுள்ளன! 1980 ஆம் ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவிடம் 4300 மெகாடன் அழிவாற்றல் உள்ள 4000 போராயுதக் குண்டுகள் [Warheads] இருந்தன! அப்போது சோவியத் ரஷ்யாவிடம் 3100 மெகாடன் அழிவாற்றல் கொண்ட 1800 போராயுதக் குண்டுகள் தயாராயின! ‘திட்ட மிட்ட போராயுதக் கட்டுப்பாடு உரையாடல் ‘ [Strategic Arms Limitation Talks, SALT I (1972-1977) & SALT II (1981-1985)] இருமுறை இரு நாடுகளுக்கும் இடையே நிகழ்ந்துள்ளன! ஆயினும் முடிவில் நடந்த தென்ன ? இரு நாடுகளும் 1980 ஆண்டுக்குப் பிறகு பேரளவில் போராயுதங்களைப் பெருக்கிக் கொண்டன! அமெரிக்கா மட்டும் 10,000 போராயுதக் குண்டுகளை உற்பத்தி செய்துள்ளது!

1990 ஆண்டுக்குப் பிறகு சோவியத் யூனியனின் ஆதிக்கம் குடை சாய்ந்து, அமெரிக்க ரஷ்ய நாடுகளுக்கு இடையே ஊமைப் போரின் உக்கிரம் குறைந்து போனதும், அந்த அழிவு ஆயுதங்களின் எண்ணிக்கைக் குறைந்து கொண்டே வருகிறது!

வாள்முனையை ஏர்முனையாய் உலக நாடுகள் மாற்றுமா ?

அணுகுண்டு உற்பத்தி, அணு ஆயுதச் சோதனைகளை உடனே நிறுத்தும்படி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ ஸிலார்டு, லினஸ் பாலிங், ஜேம்ஸ் பிராங்க், பெர்டிரான்டு ரஸ்ஸல் போன்ற உலக மேதைகள் கூக்குரல் எழுப்பினர்! ஆனால் 1963 இல் ‘அணுகுண்டு சோதனைத் தடுப்பு உடன்படிக்கையை ‘ [Nuclear Test Ban Treaty] முதன் முதல் எதிர்த்து நின்று, அதை நீக்கும்படி வற்புறுத்திய முதல் விஞ்ஞானி எட்வெர்டு டெல்லர்! அணு ஆயுதங்களை பூமிக்கு மேலே சோதித்துத் தீவிரக் கதிரியக்கப் பொழிவுகளை உண்டாக்கக் கூடாது என்பதே உடன்படிக்கையின் விதி! ஆனால் அமெரிக்கா கொண்டு வந்த ‘அணுவியல் வெடிப்பின் அமைதிப் பயன்பாடுகள் ‘ [Peaceful Uses for the Atomic Explosions] என்னும் கொள்கையை டெல்லர் கடைப்பிடித்து, ‘ஏர்முனைத் திட்டத்தின் தீரன் ‘ [Champian of Project Plowshare] என்ற பெயரைப் பெற்றார்! ‘உலக நாடுகள் வாள்முனையை ஏர்முனையாக மாற்ற வேண்டும்! ‘ என்று பைபிள் வேதநூலில் ஏசுவின் சீடர், இ சையா [Isaiah] கூறி யிருக்கிறார். ஆனால் உலக அரங்கில் ஏர்முனைத் திட்டம் [Project Plowshare] பின்பற்றப் படாது படுதோல்வி யுற்றது! ஆக்க வினைகளுக்கும், அமைதியைப் பரப்புவதற்கும் அணு ஆயுதங்கள் ஒருபோதும் பயன் படுத்தப்பட வில்லை! உலக நாடுகள் இப்போது தமது வாள்களின் முனைகளைக் கூர்மையாகத் தீட்டுவதோடு, புதுப் புது ஆயுதங்களை உற்பத்தி செய்து பலத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன!

அமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கையில், முற்பட்ட அணு ஆயுதங்களின் விருத்திக்கும், அவற்றைச் சோதிப்பதற்கும் எப்போதும் சலிப்படையாமல் டெல்லர் பேராதரவு அளித்தார்! வியட்நாம் போரின் சமயத்தில் அவர் அளித்த பயங்கர ஆலோசனைகளைக் கேட்டு, கண்டனர் செய்தவர் பலர், டெல்லரைப் ‘போர்க் குற்றவாளி ‘ [War Criminal] என்று இகழ்ந்தனர்! 1980 ஆண்டுகளில் ஜனாதிபதி ரேகனுக்கு ‘வானவெளிப் போர்கள் ‘ [Star Wars] என்ற திட்டமிட்டப் பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு [Strategic Defense Initiative] எட்வெர்டு டெல்லர் ஆயுத ஆலோசனைகள் பலவற்றை அளித்திருக்கிறார்!

எட்வெர்டு டெல்லரின் முரண்பாடான பேச்சுகள்!

அமெரிக்க அணு ஆயுத வினைகளில் வேலை செய்த விஞ்ஞானிகள் எல்லோரைக் காட்டிலும் கடுமை, முரண்பாடு மிகுந்து பலரது எதிர்ப்புக்களையும் மீறி, வெப்ப அணுக்கரு ஆயுதத்தை ஆக்கியே ரஷ்யாவை மிஞ்ச வேண்டும் என்று ஒற்றைக் குறிக்கோளில் வெற்றி பெற்றக் கர்மவாதி, எட்வெர்டு டெல்லர்! படைப்புத் திறமை மிக்க உன்னத விஞ்ஞானி என்று பாராட்டுபவர் சிலர்! பயங்கரப் போக்குடைய விஞ்ஞானி என்று அவரைப் பழித்தவர்களும் உளர்! 1954 இல் நடந்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் மீது தொடரப் பட்ட பாதுகாப்பு ஐயப்பாடு விசாரணையில், எட்வெர்டு டெல்லர் ஓப்பன்ஹைமருக்கு எதிராகச் சாட்சி சொல்லி விஞ்ஞானிகளின் வெறுப்பைத் தேடிக் கொண்டார்! ஓப்பன்ஹைமர் பொதுடமைத் தோழர்களின் அனுதாபியாக இருந்ததாலும், தான் ஹைடிரஜன் குண்டு தயாரிக்க முற்படும் போதெல்லாம், அவர் பல முறைத் தடுத்ததாலும், மனக் கசப்பில் டெல்லர் ஓப்பன்ஹைமருக்கு ஆதரவாகப் பேசவில்லை! அவரது வயது முதிர்ந்த காலத்தில், தான் ஓப்பன்ஹைமருக்கு எதிராகச் சாட்சி சொல்லியது தவறு என்று ஒப்புக் கொள்கிறார்! ‘அப்போதும் சரி, இப்பவும் ஓப்பன்ஹைமர் அமெரிக்காவின் மேல் கொண்டிருந்த தேசப் பற்றின் மீது எனக்கு ஐயப்பாடு இல்லை ‘ என்று டெல்லர் தன் நூல் ஒன்றில் குறிப்பிட் டுள்ளார்!

நோபெல் பரிசைப் பற்றி ஒருவர் டெல்லரைக் கேட்ட போது அவர் கூறியது: “எனக்கு நோபெல் பரிசு கிடைத் திருந்தால், எதற்காக உனக்குக் கொடுத்துத் தொலைத்தார்கள், என்று கடிவார்கள் பொது நபர்கள்! அதே சமயம் எனக்கு நோபெல் பரிசு கிடைக்கா விட்டால், ஏனப்பா உனக்குக் கொடுக்காமல் போனார்கள், என்றும் குறையாடுவார்கள்! முதலில் கடிந்ததை விட, இரண்டாவது குறைபாடு எனக்குச் சரியாகத் தோன்றுகிறது!”  “மன்ஹாட்டன் திட்டத்தில் சேர்ந்து முதல் அணுகுண்டு ஆக்கியதைப் பற்றியும், அடுத்து ராட்சத வெப்ப அணுக்கரு ஆயுதத் தயாரிப்பு செய்ததைப் பற்றியும் நான் குற்ற உணர்வில் வருந்துகிறேனா, என்று பலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள்! அதற்கு எனது பதில், இல்லை! இல்லை! இல்லை! அணுகுண்டில் மாண்டு போனவருக்காக, காயம் அடைந்தோருக்காக நான் மிகவும் வருந்துகிறேன்! ஆனால் அணு ஆயுத திட்டங்களில் நான் பங்கெடுத்த தற்கு எனக்கு எந்த வருத்தமும் வில்லை! ‘இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், அணு ஆயுதப் பணியில் நாங்கள் யாவரும் ஈடுபடாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ? ‘ என்று நம்மைப் பார்த்துப் பதில் கேள்வி கேட்கிறார்! அவரது ஒரே ஓர் அந்தரங்க பயம், ஹிட்லர் அணு ஆயுத உற்பத்தியில் முந்திக் கொண்டிருந்தால், உலகின் கதி என்ன வாயிருக்கும் என்பதே!

எட்வெர்டு டெல்லர் பெற்ற மதிப்புகள், பரிசுகள்!

டெல்லர் எழுதிய நூல்கள்: விஞ்ஞான ரகசியங்களைப் பற்றிய உரையாடல்கள் [Conversations on the Dark Secrets of Physics (1991)], கத்தியை விடக் கவசமே மேல் [Better a Shield Than a Sword (1987)], எளிமையை நோக்கி முற்பாடு [Pursuit of Simplicity (1980)], விண்ணிலிருந்தும், மண்ணிலிருந்தும் சக்தி [Energy from Heaven & Earth (1979)]. எட்வெர்டு டெல்லர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பரிசு, அடுத்து 1962 இல் அமெரிக்காவின் மதிப்புள்ள என்ரிகோ ஃபெர்மி பதக்கத்தையும் பெற்றார். ஸ்ரேல் பொறியியல் கூடத்தின் ஹார்விப் பரிசு, மற்றும் தேசிய விஞ்ஞானப் பதக்கத்தையும் பெற்றார்.

டெல்லர் 1956 முதல் 1958 வரை அமெரிக்க அணுசக்திப் பேரவையின் [U.S. Atomic Energy Commission] ஆலோசகராக இருந்திருக்கிறார். அவர் அமெரிக்க ஜனாதிபதியின் வெண்ணிற மாளிகை விஞ்ஞானக் குழுவினரின் [White House Science Council] அங்கத்தினராகவும், அமெரிக்க விமானப்படை விஞ்ஞான ஆலோசகராகவும் [Scientific Advisory Board of the U.S. Air Force] இருந்திருக்கிறார்! மேலும் அவர் அமெரிக்க அணுவியல் கழகம் [American Nuclear Society], அமெரிக்க விஞ்ஞானக் கழகம் [American Academy of Science] ஆகியவற்றின் சிறப்புநராக ஆக்கப் பட்டார்.

எட்வெர்டு டெல்லரின் வயது 2002 இல் இப்போது 94! கண்கள் ஒளி மங்கி, காதுகள் கேட்கும் திறனற்றுத் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்! ஆனாலும் அவரது மூளை இன்னும் கூர்மை மழுங்காமல் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது! அவரது அருமை மனைவி 2000 ஆம் ஆண்டு காலமானார். அவர் அடிக்கடி கூறும் ரோமானியப் பொன்மொழி, ‘ஒருவர் அமைதி நிலைநாட்ட விரும்பினால் அவர் போருக்குத் தயார் செய்ய வேண்டும் ‘ என்பது. ‘சமாதானத்தை விழைவோர் கையில் ஆயுதப் பலம் இருந்தால்தான், உலகில் அமைதி நிலவும் ‘ என்று அழுத்தமாகக் கூறுகிறார்.

******************

Information:
1.  http://en.wikipedia.org/wiki/Edward_Teller (January 10, 2009)

2. Creams & Dreams.org Bomb Pioneer Edward Teller Dies (September 10, 2003)

++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com)  January 15, 2010

விண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்

ஜனவரி 8, 2010


கார்ல் சேகன்

(1934-1996)


சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


“பிரபஞ்சத்தை நம்மைப்போல் வேறு உயிரினங்களும் பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டு பிடித்ததின் முக்கியத்துவம் மிகவும் மகத்தானது!   அது மனித வரலாற்றில் பதிக்க வேண்டிய விண்வெளி யுகத்தின் ஓர் சிகரமான நிகழ்ச்சி ஆகும்”

கார்ல் சேகன்


அண்ட கோள ஆராய்ச்சியில் பங்கெடுத்த அமெரிக்க விஞ்ஞானி

1957 ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் அணுக்கருப் பெளதிகம் [Nuclear Physics] படித்துக் கொண்டிருந்த ஒரு வானியல் பெளதிக [Astrophysics] மாணவர், அமெரிக்கா 1970 ஆம் ஆண்டுக்குள் சந்திர மண்டலத்தில் இறங்கி விடும் என்று சித்தாந்த ஞானிபோல் முன்னறிவித்தார்! அவ்வாக்கு மொழி மெய்யாக நிகழ்ந்தது! அதைக் கூறிய தீர்க்க தரிசி வேறு யாரு மில்லை! அவர்தான் வானியல் மேதை டாக்டர் கார்ல் சேகன்!

அமெரிக்காவின் ஐநூறு ஆண்டு வரலாற்றில், விஞ்ஞானத்தைக் கற்றுப் பட்டமேதை ஆகி, அண்டவெளிப் பயணங்களில் பங்கெடுத்து, கோடான கோடி மைல்களுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி நகர்ந்து செல்லும் பிற அண்டங்களில் பூமியைப் போல், வேறு உயிரினங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சி செய்யப் புகுந்தவர்களில் முதல் விஞ்ஞானி கார்ல் சேகர்! பொது நபர்கள் எளிதில் புரியும்படி, விஞ்ஞானக் கருத்துக்களைப் புத்தகங்கள் மூலம், கட்டுரைகள் வாயிலாய், சொற்பொழிவுகள் நிகழ்த்தி அமெரிக்காவில் புகழ் பெற்றவர், கார்ல் சேகன்! கசப்பான விஞ்ஞானப் படைப்புகளை, இனிப்பான நிகழ்ச்சிகளாய் இதிகாசக் கதைகள் மூலம் எளிதாக விளக்கிக் கேட்போரைக் கவர்ந்தவர், கார்ல் சேகன்!

கார்ல் சேகன் வானியல் [Astronomy] விஞ்ஞானத்தின் பல கிளைகளில் பயிற்சி பெற்ற அறிவாளி. பிரபஞ்சவியல் [Cosmology] விஞ்ஞானத்தில் பாண்டித்தியம் உடையவர். விஞ்ஞான வேதங்களில் [Philosophy of Science] வேட்கை மிகுந்தவர். எல்லாவற்றையும் விட கார்ல் சேகனுக்குப் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலத்தைப் [Origin of Life on Earth] பற்றி ஆழ்ந்து அறியவும், அதேபோல் பிரபஞ்சத்தின் வேறு அண்டங்களிலும் உயிரினங்கள் [Exobiology] இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை உறுதியாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்யவும் விரும்பினார்! அவ் வேட்கையை நிறைவேற்ற நாசாவின் [NASA, National Aeronautics & Space Administration] அண்டவெளிப் படையெடுப்புத் திட்டங்களில் நேரடியாகப் பங்கேற்று ஆய்வுகளில் ஈடுபட்டார்! 1960-1990 ஆண்டுகளில் அமெரிக்காவின் மாரினர் [Mariner], வைக்கிங் [Viking 1, 2], பயனீயர் [Pioneer], வாயேஜர் [Voyager], காலிலியோ [Galileo] ஆகிய மனிதரற்ற விண்வெளிக் கப்பல்களின் [Unmanned Spaceships] பயணங்களில் பங்கெடுத்து வெள்ளி, செவ்வாய், வியாழன் ஆகிய அண்ட கோளங்களில் நுண்ணுயிர் ஜந்துக்கள் [Micro-Organisms] உள்ளனவா என்ற சோதனைகளில் கலந்திருக்கிறார்.

வானியல் வல்லுநர் கார்ல் சேகனின் வாழ்க்கை வரலாறு

‘பிரபஞ்சத்தை நம்மைப்போல் வேறு உயிரினங்களும் பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டு பிடிப்பதின் முக்கியத்துவம் மிகவும் மகத்தானது! அது மனித வரலாற்றில் பதிக்க வேண்டிய விண்வெளி யுகத்தின் ஓர் சிகரமான நிகழ்ச்சி ஆகும் ‘, என்று ஒரு சொற்பொழிவில் கார்ல் சேகன் கூறி யிருக்கிறார்!

1934 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் நாள், கார்ல் சேகன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புலம் பெயர்ந்த ஓர் யூத குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் சாமுவெல் சேகன் [Samuel Sagan] மெலிந்த உருவம், சிறப்பு அம்சம் எதுவும் அற்ற உருவம், செந்நிறத் தலைமயிர் மட்டும் பளிச்செனத் தெரியும் தோற்றம்! தாயார் ரேச்சல் குரூபர் சேகன் [Rachel Gruber Sagan] எடுப்பான தோற்றம், மிடுக்கான சொல்லாட்சி கொண்டவள். பூர்வீகத் தாய்வழிப் பாட்டனார், லைப் குரூபர் [Leib Gruber] ஐரோப்பாவில் ஆஸ்டிரிய ஹங்கேரி இனத்தவர்! அவர் பிறந்த இடம் யுக்ரேயினில் உள்ள கலிஸியா [Galicia in Ukraine]. ஹீஃப்ரூ மொழியில் ‘சேகன் ‘ என்றால் ‘தளபதி ‘ என்று அர்த்தம்!

தந்தையார் சாமுவெல் சேகன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பயின்று மருந்தியல் பட்டம் [Pharmacy Degree] பெற்றவர். மகனைச் சிறு வயதிலிருந்தே சிறந்த முறையில் பெற்றோர்கள் வளர்த்தார்கள். மன்ஹாட்டனில் இயற்கை வரலாறு பொருட் காட்சி மாளிகை [Museum of Natural History], ஹேடன் விண்வெளிக் கோள மாளிகை [Hayden Planetarium] ஆகியவற்றுக்கு மகனை அழைத்துச் செல்வார்கள். காரிருள் வானில் கண்சிமிட்டும் விண்மீன்கள் கார்ல் சேகனுக்குப் புதிராகக் காட்சி அளித்தன! ‘செவ்வாயின் பணிமாது ‘ [Maid of Mars], ‘செவ்வாய்ச் சதுரங்கன் ‘ [Chessman of Mars], ‘செவ்வாய் யுத்தப் பிரபுக்கள் ‘ [The Warlords of Mars], போன்ற விஞ்ஞானப் புதினங்களைச் சிறுவன் சேகன் படித்தான்! 1940 இல் ஆறு வயதுச் சிறுவன் வால்ட் டிஸ்னியின் ஃபென்டாஸியா [Fantasia] திரைப் படத்தில் பூர்வீக விலங்கினங்களைக் [Prehistoric Animals] கண்டு பூரித்துப் போனான்! தனியார் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பாக கிரேக்க ரோமானிய இதிகாசங்களை எடுத்துப் படித்தான்! பனிரெண்டு வயதில் பறக்கும் தட்டுகளைப் [Flying Saucers] பற்றிக் கேள்விப் பட்டு, அவை பிற அண்டங்களி லிருந்து பூமிக்கு வருகின்றன என்று உறுதியாக நம்பினான்!

புகழ் பெற்ற எழுத்தாளர், ஆர்தர் கிளார்க் [Arthur C. Clarke] எழுதிய ‘விண்வெளி அண்டங்களுக் கிடையே பயணம் ‘ [Interplanetary Flight] என்னும் நூலைப் படித்த பிறகு கார்ல் சேகனின் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பம் ஏற்பட்டது! அதைத் தொடர்ந்து அண்டவெளி விஞ்ஞான மேதைகளான ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் [George Gamov], பிரிட்டிஷ் விஞ்ஞானி ஆர்தர் எட்டிங்டன் [Arthur Eddington], உயிரியல் விஞ்ஞானி ஜூலியன் ஹக்ஸ்லி [Julian Huxley] ஆகியோரின் நூல்களில் ஈடுபாடு கொண்டார்!

அமெரிக்க வானியல் விஞ்ஞானி சைமன் நியூகோம் [Simon Newcomb] எழுதிய ‘எல்லோருக்கும் வானியல் விஞ்ஞானம் ‘ [Astronomy for Everybody] என்னும் புத்தகத்தில், ‘செவ்வாய் மண்டலத்தில் உயிரினங்கள் வாழ்வதுபோல் தோன்றுகிறது! அச்செய்தி ஒரு காலத்தில் மெய்யானதா என்று கேட்கப் பட்டது! இப்போது பொதுவாக ஒப்புக் கொள்ளப் பட்டச் செய்தி, அது! ‘ என்று எழுதி யிருந்தது! அவ்வாசகம் கார்ல் சேகன் அண்ட கோளங்களில் உயிரினங்கள் வாழலாம் என்ற கருத்தை மேலும் வலியுறுத்தியது!

உயர்நிலைப் படிப்பை முடித்த கார்ல் சேகன், மேற்படிப்புக்குச் சிகாகோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அப்போது அங்கு பெளதிகப் பேராசிரியராக இருந்த விஞ்ஞான மேதைகள், நோபெல் பரிசு பெற்ற என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi], சுப்ரமணியன் சந்திரசேகர் [S. Chandrasekhar], மற்றும் எட்வெர்டு டெல்லர் [E. Teller], ஜெரால்டு குயிபர் [Gerald Kuiper]! கார்ல் சேகனின் முதல் பெளதிகக் குரு வானியல் வல்லுநர், சந்திரசேகர்! கணிதத்தில் வலுவற்ற கார்ல் சேகன், கணிதப் புலியான சந்திரசேகரை எதிரே சந்திக்க விரும்பாது, சுற்றி போய்விடுவார் என்று அறியப் படுகிறது! 1955 இல் கார்ல் சேகன் பெளதிகத்தில் B.A. பட்டம் பெற்றார். பிறகு வானியல், விண்வெளிப் பெளதிகம் [Astronomy, Astrophysics] இரண்டையும் பயின்று, ‘அண்ட கோளங்களின் பெளதிக ஆய்வுகள் ‘ [Physical Studies of Planets] என்னும் கோட்பாடை எழுதி 1960 இல் டாக்டர் பட்டத்தையும் பெற்றார். அந்தக் கோட்பாட்டில் முதன் முதலாகக் கார்ல் சேகன் ‘சுக்கிரனில் கண்ணாடி இல்ல விளைவு ‘ [Greenhouse Effect on Venus] என்னும் தலைப்பில் அங்கே உள்ள அடர்த்தியான வாயுக்கோளச் சூழ்மண்டலத்தில் சுற்றிச் சுற்றி நிகழும் கொதிப்பு வெப்பத்தைப் பற்றி எழுதிள்ளார்!

1960-1962 ஆண்டுகளில் கார்ல் சேகன் பெர்கெலி, கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் [University of California, Berkeley] ஆராய்ச்சி நபராகப் [Research Fellow] புகுந்தார். அடுத்து ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் 1962-1968 ஆண்டுகளில் ஆசிரியர் பணியில் இருந்து கொண்டே, சுமித்ஸோனியன் வானியல் பெளதிக ஆய்வுக் கூடத்தில் [Smithsonian Astrophysical Laboratory] ஆராய்ச்சிகளும் செய்தார். 1968 இல் கார்ல் சேகன் நியூ யார்க் சென்று இதாகாவில் கார்நெல் பல்கலைக் கழகத்தின் [Cornell University, Ithaca], விண்வெளிக் கோள ஆய்வுக் கூடத்தின் ஆணையாளராகப் [Director, Laboratory for Planetary Studies] பதவி ஏற்றார். 1970 இல் விண்வெளி விஞ்ஞானம், வானியல் துறைகளுக்குக் கார்நெல் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஆகிக் காலமாகும் வரை [1996] அப்பதவியில் அங்கே இருந்தார்.

கல்லூரியில் அவர் படித்த காலத்தில் கார்ல் சேகனைக் கவர்ந்த விஞ்ஞான மேதைகள், அணுவைப் பற்றி விளக்கிய கிரேக்க ஞானி டெமாகிரிடஸ் [Democritus (460-370 B.C)], சூரிய குடும்பக் கோளங்களின் நகர்ச்சி நியதிகளை ஆக்கிய ஜெர்மன் விஞ்ஞானி, ஜொஹானஸ் கெப்பளர் [Johannes Kepler (1571-1630)], அண்ட கோளங்களின் ஈர்ப்பியல்களைக் கண்டு பிடித்த ஆங்கில விஞ்ஞானி, ஐஸக் நியூட்டன் [Isaac Newton (1642-1727)], பூமியில் உயிரினங்களின் தோற்ற மூல வளர்ச்சியைத் தொகுத்த பிரிட்டிஷ் விஞ்ஞானி, சார்லஸ் டார்வின் [Charles Darwin (1809-1882)], ஒப்பியல் நியதியைப் படைத்த ஜெர்மன் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் [Albert Einstein (1879-1955)] ஆகியோர்.

அண்டங்களில் உயிரினங்கள் தோன்றலாம் என்பதற்கு ஆதரங்கள்

வானியல் [Astronomy] இதுவரைத் தூய விஞ்ஞானமாகப் பெளதிகம், ரசாயனம் என்னும் இரு பிரிவுகளாய் மட்டுமே வளர்ந்து வந்தது. இத் தூய விஞ்ஞானத்தில் வெறும் யூகிப்புக் கோட்பாடுகளை விளக்கும் மனிதவியல் துறையை [Anthropology] முதன் முதலில் இணைத்தவர், கார்ல் சேகன்! மனிதவியல் துறை பூமியின் மூலத்தோற்றம், உயிரினங்களின் எழுச்சி, அவற்றின் வளர்ச்சிக்காக அமைந்த சூழ்மண்டலம் ஆகியவற்றை ஆராய்கிறது! இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வானியல் [Astronomy], உயிரினங்களின் மூல வளர்ச்சியான பரிணாமம் [Evolution], உயிரியல் [Biology], சூழ்நிலை [Environment] ஆகிய முப்பெரும் துறைகளை ஒருங்கிணைத்து, அண்டவெளி ஆய்வுக் கப்பல்களின் பயணத்தில் பங்கேற்றுச் சோதனை செய்தவர் கார்ல் சேகன்!

அவர் கல்லூரியில் பயிலும் போது, அவரது உயிரியல் மூலச் சிந்தனைக் கிளரி விட்ட விஞ்ஞான மேதைகள், ஹெர்மன் முல்லர் [Hermann Muller], ஹெரால்டு யுரே [Herold Urey], ஜோஸுவா லெடெர்பர்க் [Joshua Lederberg] ஆகியோடுடன் ஆராய்ச்சி செய்து பயிற்சி பெற்றார். மூவரும் நோபெல் பரிசு பெற்றவர்கள்! மூவரும் விண்வெளி அண்டங்களில் உயிரின வாழ்வில் [Extra Terrestrial Life] நம்பிக்கை உள்ளவர்கள். கார்ல் சேகனின் குருவான ஹெர்மன் முல்லர் 1926 இல், ‘கதிர்வீச்சுகள் [Radiations] உயிரின மூலவிகளைத் துண்டித்து [Gene Mutation], உயிரினத் தோற்ற பரிணாமத்திற்கு [Evolution] அடிப்படைக் காரணமாகின்றன ‘ என்று முதலில் அறிவித்தார்! அடுத்து பிரிட்டிஷ் உயிர் மூலவி விஞ்ஞானி ஜான் ஹால்டேன் [Genetist, John Haldane], ரஷ்ய உயிரியல் ரசாயன விஞ்ஞானி அலெக்ஸாண்டர் ஓபரின் [Alexander Oparin] இருவரும், ‘புறவூதா ஒளி [Ultraviolet Light], மின்னல், பூமியின் ஏனைய சக்தி மூலங்கள் [Sources of Energy] எளிய ரசாயன மூலக்கூட்டுகளை [Simple Compounds] சிக்கலான ஆர்கானிக் மூலக்கூட்டுகளாக [Complex Organic Compounds] மாற்றுகின்றன ‘, என்று கண்டு பிடித்தார்கள்!

நாசா அண்டவெளிப் பயணங்களில் பங்கெடுத்த கார்ல் சேகன்.

1960 ஆம் ஆண்டில் டாக்டர் கார்ல் சேகன் சந்திரனில் இறங்கும் அபொல்லோ [Lunar Landing, Apollo] திட்டத்திற்கும், சுடர் ஒளி வீசும் சுக்கிர கோளை ஆய்வு செய்யும் மாரினர் [Venus Probe, Mariner] திட்டத்திற்கும் பணி செய்ய அழைக்கப் பட்டார். கார்ல் சேகன் கலிஃபோர்னியா பொறியியல் கூடத்தின் [California Institute of Technology] ஜெட் உந்தப்படும் ஆய்வுச்சாலைக்கு [Jet Propulsion Laboratory] அடிக்கடி விஜயம் செய்யும் விஞ்ஞானி. 1961 இல் கார்ல் சேகனும், வில்லியம் கெல்லாக் [William Kellogg] இருவரும் ‘செவ்வாய், வெள்ளி அண்டங்களின் சூழ்வெளி ‘ [The Atmosphere of Mars & Venus] என்னும் வெளியீட்டின் தொகுப்பாளர் ஆகப் பணி செய்கையில், அவர்கள் அந்நூலில் குறிப்பிட்டது: ‘இதுவரைக் கிடைத்த சான்றுகளைக் கொண்டு முழுமையாகப் பார்த்தால் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதாக யூகிக்கலாம்! அதற்கு முதற் தேவை ஈரம், நீர் ஆவி [Moisture, Water Vapour] போன்றவை. ஒரு காலத்தில் செவ்வாய்த் தளம்மீது நீர் இருந்திருக்கலாம். நமக்குத் தெரிந்த குன்றிய அளவு சான்றில் நாம் அறிவது, நுண்ணிய ஜந்துகள் [Micro-Organisms] அங்கே இருக்கலாம் என்பதே! பெரும் ஜந்துக்கள், மாபெரும் விலங்கினங்கள் அங்கே உள்ளன என்பதற்கு ஆதரமோ அன்றி எதிர்ப்போ எதுவும் இல்லை! செவ்வாய்க் கோளில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்ற பண்டை காலத்திய கேள்விக்குப் பதில் கிடைப்பது, அடுத்த பத்தாண்டுகளில்தான்! ‘

அமெரிக்கா மனிதரற்ற அண்டவெளிக் கப்பல்களை சூரிய மண்டலத்தின் உட்கோள்களான வெள்ளி, செவ்வாய், புதன் ஆகியவற்றை முதலில் ஆராய மாரினர் [Mariner], வைக்கிங் [Viking], பயனீயர் [Pioneer] போன்ற விண்வெளி ஆய்வுச் சிமிழ்களை 1970-1980 ஆண்டுகளில் தொடர்ந்து ஏவியது. கார்ல் சேகன் தனது Ph.D. கோட்பாடிலே, வெள்ளி அண்டமானது ஓர் கண்ணாடி இல்லம்போல் [Greenhouse Effect] பரிதியின் வெப்பத்தை உள்ளே சுற்றிச் சுற்றிக் கொப்பரைபோல் [Boiler] கொதிக்கும் நரக கோளமாக [Hellish Planet] மாறி, எந்த வித உயிரினமும் தோன்றாதவாறு ஆகிவிட்டது என்று 1960 ஆம் ஆண்டிலே முடிவு செய்தவர்! ஆனால் செவ்வாய்க் கோளம் கொதிகலமாக இல்லாது, குளிர்ந்து அதன் மத்திய ரேகைப் பகுதிகளில் பகலில் [20 C/70 F] வெப்பமும், இரவில் [-100 C/-150 F] குளிர்ச்சியும் உள்ளதால், உயிரினங்கள் தோன்ற வாய்ப்பு இருக்கிறது, என்று அவரது அந்தராத்மா பல்லாண்டுகள் சொல்லிக் கொண்டிருந்தது!

1960-1970 ஆண்டுகளின் இறுதிக் காலங்களில் கார்ல் சேகன், செவ்வாய்க் கோளின் பச்சைப் பழுப்புக் கால நிற மாறுதல்கள், உயிரினங்கள் உள்ளதையோ அல்லது தாவர வளர்ச்சி இருப்பதையோ காட்டவில்லை என்றார்! செவ்வாய்க் கோளில் தெரியும் பழுப்புக் கறுப்பு நிறங்கள் அதன் மலைப் பிரதேசங்களைக் காட்டுகின்றன. கடும் புயல் காற்றுகள் அடிப்பதால், செவ்வாய்த் தளத்தின் தூசிகள் இங்கும் அங்கும் பரவிப் பள்ளங்களை நிரப்பி, நிறம் மாறுவது போல் தெரிகிறது என்று விளக்கினார்! மாரினர்-9 செவ்வாய்க் கோளை 1971 இல் சுற்றிய போது, கார்ல் சேகனின் கூற்று மெய்யாக நிரூபிக்கப் பட்டது. 1965 இல் முதலில் சுற்றிய மாரினர்-4, பின்னால் சென்ற மாரினர்-6,7 ஆகியவைச் செவ்வாய்க் கோளின் தள விபரங்களை விளக்கமாகக் காண முடியவில்லை!

சந்திரனில் தோன்றுவது போல் மாபெரும் தடக் குழிகளைப் [Impact Craters] படம் எடுத்தனுப்பின! செவ்வாய் சூழ்மண்டலத்தில் வெறும் கரிவாயு [Carbon Dioxide] நலிந்த அளவில் நூறில் ஒரு பங்கு பூவாயு அழுத்தத்தில் இருப்பதைக் கண்டு பிடித்தன! 1971 இல் செவ்வாய்க் கோளை ஏறக்குறைய ஓராண்டு காலம் சுற்றிய மாரினர்-9 நிறைய விபரங்களை அனுப்பியது. 400 மைல் அகண்ட, 15 மைல் உயர்ந்த, சூரிய குடும்பத்திலே பெரிய ஓர் எரிமலையைக் கண்டது! அது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் எரிந்து, ஆறுகளாய் கக்கிய எரிமலைக் குழம்பு [Lava] நிரம்பிய 950 மைல் அகண்ட தடக் குழியைக் கண்டது! 2800 மைல் நீண்ட பள்ளத்தாக்கைக் [Valley] கண்டது!

முக்கியமான காட்சி, கண்டு பிடிப்பு இதுதான், செவ்வாயில் வற்றிக் காய்ந்து போன நதிகள் நெளிந்து நாட்டியம் ஆடிய பாதங்களின் தடங்கள்! செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் நீர் ஆறுகள் ஓடிக் காலநிலை வேறுபட்டால் காய்ந்து கருகிப் போனக் கதையைச் சொல்லும் காலச் சுவடுகள்! ஒரு காலத்தில் எரிமலைப் பொழிவுகளில் பலவித வாயுக்களும், நீராவியும் எழுந்து, செவ்வாய் மண்டலச் சூழ்நிலை அடர்த்தியாகி, தட்ப வெப்ப நிலைகள், காற்றழுத்தம் சீராக அமைந்து, அளவற்ற நீராறுகள் ஓடிக் கடலாகியதை, யூகித்துக் கொள்ள உதவியது அக் கண்டு பிடிப்பு! ஆனால் அக்கடல் நீரைச் செவ்வாய்ப் பாலை நிலம் உரிஞ்சிக் குடித்திருக்கலாம்! அல்லது செவ்வாயில் அடர்ந்த வாயுச் சூழகம் மெலிந்து, அதன் நலிந்த ஈர்ப்பியல் சக்தியால் கவர்ந்து வைத்துக் கொள்ள இயலாது, பரிதியின் வெப்பாத்தால் ஆவியான நீர், பறந்து அண்ட வெளியில் மறைந்து போயிருக்கலாம்! அதன் பின் கால ஓட்டத்தில், துருவங்களில் சிக்கிய நீரும், கரிவாயும் [CO2] குளிர்ந்து தணிக்கட்டியாக [Dry Ice] [பனிக்கட்டி], உறைந்து பாறையாகி இறுகி விட்டது! ஆனால் உயிரினங்கள் தோன்றியதற்குச் சான்று எதுவும் கிடைக்க வில்லை! நீர்த் திரவம் ஓடியதற்கு உள்ள சான்றுகளை வைத்து, உயிர் ஜந்துக்கள் செவ்வாயில் இருந்திருக்கலாம் என்று நம்பிக்கை கொண்டாலும், விந்தையான செவ்வாய் மனிதர்களோ, அல்லது செவ்வாய் விலங்குகளோ அங்கே காணப்பட வில்லை! அவற்றைக் கண்டு பிடிக்க செவ்வாய்த் தளத்தில் இறங்கி ஆய்வுகள் செய்ய வைக்கிங்-1, வைக்கிங்-2 இரண்டு ஆய்வுச் சிமிழ்கள் 1975 இல் பின்னால் அனுப்பப் பட்டன!

இரட்டை வைக்கிங் திட்டம் அரை டிரில்லியன் [Half Trillion] டாலர் செலவில் செவ்வாய்க் கோளில் போய் இறங்க உருவானது. நூற்றுக் கணக்கான விஞ்ஞானப், பொறியியல் துறைஞர்களில் கார்ல் சேகன் ஒருவர்! அவரது விஞ்ஞானக் குரு நோபெல் பரிசு பெற்ற ஹெரால்டு யுரே, ஜோஸுவா லெடெர்பெர்க் இருவரும் அதில் பணி செய்தனர். கார்ல் சேகன் வைக்கிங்-1, வைக்கிங்-2 விண்ணாய்வுச் சிமிழ்கள் [Viking-1, Viking-2 Space Probes], செவ்வாய்த் தளத்தில் போய் இறங்கும் இடங்கள் ஆறைத் தேர்ந்தெடுத்தார். அவை இரண்டும் செவ்வாயில் 1976 இல் இறங்கிக் கண்டவை என்ன ? செவ்வாய்க் கோள் பெரும் குழிகளும், ஆறிப் போன எரிமலைகளும் இடைப்பட்டு பாறைகள் நிறைந்த ஒரு பாலைப் புழுதி நிலம்! அவற்றின் மேல் பழுப்பு நிறத்தில் தூசிகள் மண்டிய வானம்! இரும்பு வாயுவில் உள்ள ஆக்ஸிஜனோடு கலந்து செந்நிற ஆக்ஸைடாகி, அங்கெங்கு எனாதபடி எங்கும் சிவப்பு நிறம்! வைக்கிங் கொண்டு சென்ற உயிரியல் ஆய்வுக்கூடம் [Biology Laboratory], செவ்வாய் மண்ணைத் தோண்டி, அதில் எந்த வித நுண்ணுயிர் ஜந்தும் [Micro organism] தோன்றுமா என்று மூன்று வித முறைகளில் ஆய்ந்தது! விளைவு தோல்வியே! அடுத்த சோதனை, செவ்வாயில் செத்துப் போன ஜந்துக்கள் அல்லது உயிரோடுள்ள ஜந்துக்கள் ஆகியவற்றின் ரசாயனச் சான்றாக, அவ்வுடம்புகளின் மூலக்கூறுகளை [Molecules of Organisms, Alive or Dead] மண்ணில் ஆய்வு செய்தது! அதன் விளைவும் எதிர்மறையே! அந்த ஆராய்ச்சிகளைத் திட்ட மிட்டவர் கார் சேகன்! அம்முயற்சிகளில் தோல்வி யுற்றாலும் முயற்சி செய்தோம் என்று மகிழ்ச்சி அடைந்தார், கார்ல் சேகன்!

செவ்வாய் மண்டலத்தில் வாயு மண்டல அழுத்தம் மிக மெலிந்தது! ஊடுறுவும் பரிதியின் கடும் புறவூதாக் கதிர்வீச்சு [Ultraviolet Radiation] மரணம் விளைவிக்கக் கூடிய அளவு வீரிய முள்ளது! பல விதத் தோற்றத்தில் சந்திரனை ஒத்த செவ்வாய்க் கோளில் கால்வைக்கும் எதிர்கால மனிதர், அடித்தளத்திற்குக் கீழேதான் வாழ வேண்டிய திருக்கும்! கதிர்வீச்சுத் தாக்குதல், விண்கற்களின் வீழ்ச்சி, 200 மைல் வேகத்தில் அடிக்கும் தூசிப் புயல் ஆகியவற்றலிருந்து மனிதன் தப்பிப் பிழைக்க வேண்டு மென்றால் அதைத் தவிர வேறு வழி யில்லை!

அணு ஆயுத வெடிப்புப் போர்களால் விளையும் புகைமூட்டக் குளிர்ச்சி!

கார்ல் சேகன் அணு ஆயுத ஆக்கத்தையும், அவற்றின் மேற்தள வெடிப்பையும் அறவே எதிர்ப்பவர்! 1980 ஆண்டுகளில் ‘அணுக்கருக் குளிர்காலம் ‘ [Nuclear Winter] என்னும் புதிய ‘அணு ஆயுதப் பொழிவு ‘ எச்சரிக்கையை முதன் முதலில் உலகெங்கும் பறைசாற்றியவர், கார்ல் சேகன்!

அதன் விளக்கம் என்ன வென்றால், அணு ஆயுத வெடிப்புகளில் கிளம்பும் புகையும், தூசியும், கரிவாயுக் கோளமும் பூமியின் சூழ்நிலையைப் பேரளவில் பாதித்துப் பரிதியின் தட்ப வெப்ப அளவுகளைக் கூட்டிக் குறைத்துக் கால நிலையைக் கரைப் படுத்திப் பூமியைப் பல நாட்களுக்கு ஒரு குளிர்க்கோளமாய் ஆக்கிவிடும் என்று ஆரவாரம் செய்தார்!

அணு ஆயுதக் குளிர்காலம் வேளாண்மைத் தானியங்களைச் சரிவர வளர விடாமல் பாதித்து மனிதர் மற்றும் விலங்கினங்கள் ஆகாரம் இல்லாமல் பஞ்சம், பட்டினியில் துன்பப்படும் என்று உலக வல்லரசுகளையும், அணு ஆயுதப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மெல்லரசுகளையும் கார்ல் சேகன் எச்சரிக்கை செய்தார்! ஹைடிரஜன் குண்டு ஆயுதப் பிதா, டாக்டர் எட்வெர்டு டெல்லர் போன்ற விஞ்ஞானிகள் கார்ல் சேகனின் அணு ஆயுதக் குளிர்கால கொள்கையை ஒப்புக் கொள்ளாது ஒதுக்கித் தள்ளினார்கள்!

விஞ்ஞான உலகில் கார்ல் சேகன் பெற்ற வெகுமதிகள்

கார்ல் சேகன் உயிரியல், மனிதவியல், பரிணாமம் ஆகிய விஞ்ஞானத் துறைகளில் முன்னோடி ஆராய்ச்சிகள் செய்தவர். விண்வெளி வரலாற்றை ஆழ்ந்து பயின்று, பூமியின் மூலத் தோற்றம், மனித இனத்தின் ஆரம்ப வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி 600 மேற்பட்ட விஞ்ஞான வெளியீடுகளை பிரசுரம் செய்துள்ளார். விஞ்ஞான நூல்கள் இருபதுக்கும் மேற்பட்டுத் தனியாகவோ, அல்லது கூட்டாளியாகவோ அவற்றை இயற்றி யுள்ளார்! அவர் அமெரிக்க வானியல் குழுவகத்தின் [American Astronomical Society] அதிபராகவும், அமெரிக்க பூபெளதிகக் கூட்டகத்தின் [American Geophysical Union] அண்டவெளித் துறைப் பகுதிக்குத் தலைவராகவும் பணியாற்றினார். அவர் உலகின் விண்வெளி வேட்கையாளர் 100,000 நபர்கள் உறுப்பினராய் இணைந்த, அண்டவெளிக் குழுவகத்தின் [The Planetary Society] அதிபராக இருந்தார்.

கார்ல் சேகன், நாசாவின் [NASA] அண்ட வெளிப் பயணப் பணிகளில் முதல்வராய் முன்னின்று புதன், வெள்ளி, செவ்வாய் ஆகிய அகக்கோள்களின் [Inner Planets] ஆராய்ச்சிக்கு, விண்வெளிக் கப்பல்கள் மாரினர் [Mariner], வைக்கிங் [Viking] திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றியவர். வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய புறக்கோள்கள் ஆராய்ச்சிக்கு, விண்வெளிக் கப்பல்கள் வாயேஜர் 1 &2 [Voyager-1 & 2] ஆகிய திட்டங்களின் மகத்தான வெற்றிக்குக் காரண கர்த்தா. அவரது ஒப்பற்ற அரிய விஞ்ஞானப் பணிகளுக்கு, மூன்று முறை நாசாவின் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அடுத்து அகில நாட்டு விண்வெளித் துறை, காலபெர்ட் பரிசு [International Astronautics Prize, Galabert], ஜான் எஃப் கென்னடியின் அண்டவெளிப் பணிப் பரிசு ஆகியவையும் அவருக்கு அளிக்கப்பட்டன.

பிரபஞ்சம் [Cosmos] பற்றி கார்ல் சேகன் எழுதிப் பேராதரவு பெற்ற நூலை தொலைக் காட்சித் திரைப் படமாக எடுத்து, 250 மில்லியனுக்கு மேற்பட்ட உலக மக்கள் கண்டு களித்தனர். அதற்கு எம்மியின் பரிசும் [Emmy Award] கிடைத்தது. சிறந்த அந்தப் புத்தகத்திற்காக அவர் புலிட்ஸர் பரிசும் [Pulitzer Prize] பெற்றார். அவரது நூலான ‘டிராகன்ஸ் ஆஃப் ஈடன் ‘ [Dragons of Eden] 200,000 பிரதிகள் விற்பனையாகி அவரது எழுத்துத் திறமை பாராட்டப் பட்டது! மேலும் அமெரிக்கப் பெளதிகக் குழுவகத்தின் [American Physical Society], அணுவியல் விஞ்ஞானி லியோ ஸிலார்டு நினைவுப் பரிசும் [Leo Szilard Award] கார்ல் சேகனுக்கு அளிக்கப் பட்டது. அவர் எழுதிய ‘தொடர்பு ‘ [Contact] என்னும் விஞ்ஞானப் புதினம் திரைப்படமாக 1997 இல் எடுக்கப் பட்டது! 1986 இல் கார்ல் சேகன், அவரது மனைவி ஆன் டுருயன் [Ann Druyan] இருவரும் இணைந்து எழுதிய நூல், ‘வால்மீன் ‘ [Comet], கார்ல் சேகன் தனியாக எழுதிய ‘பிரபஞ்சம் ‘ [Cosmos] இரண்டும் மிகச் சிறந்த விஞ்ஞானப் படைப்புக்கள்.

கடும் நோயில் விஞ்ஞான மேதை கார்ல் சேகன் மரணம்.

விண்வெளி மேதை கார்ல் சேகன் தனது 62 ஆவது வயதில், 1996 டிசம்பர் 20 ஆம் தேதி ஸியாட்டல், வாஷிங்டனில் [Seattle, Washington State] ஹட்சின்ஸன் புற்று நோய் ஆய்வு மருத்துவக் கூடத்தில்[Hutchinson Cancer Research Center] கடும் இரத்த நோயில் இரண்டு ஆண்டுகள் போராடிக் காப்பாற்ற முடியாமல் காலமானார். அங்கே அவருக்கு அவரது அருமைத் தங்கை கேரியின் [Cari Sagan Greene] போன் மாரோ 1995 இல் உடல் மாற்றம் [Bone Morrow Transplant] செய்யப் பட்டது! அவரைத் தாக்கிய நோய் பயங்கர மானது! [A form of Anemia, called Pre-leukemia or Myelodysplasia Syndrome, MDS]. அந் நோயை 1994 இல் கண்டு பிடித்தவுடன், கார்ல் சேகன் ஆறு மாதத்திற்குள் காலமாகி விடுவார் என்று டாக்டர்கள் யாவருக்கும் கவலையை உண்டாக்கினர்!

கார்ல் சேகன் நண்பர்களுக்கு உயிர் நண்பர். அவருடன் வைக்கிங் விண்வெளிப் பணியில் கூட்டுழைத்த பூவியல் நிபுணர் உல்ஃப் விஷ்னியாக் [Geologist, Wolf Vishniac] திட்டப் பணிக்காக தென் துருவ அண்டார்டிக்காவுக்குச் சென்று ஆராய்ச்சியின் போது 500 அடிப் பாதாளத்தில் விழுந்து உயிரிழந்தார்! துக்கம் தாங்காமல், அவரது நினைவாக வைக்கிங் திட்டத்தின் போது, ‘விஷ்னியாக் ‘ பெயரை செவ்வாய்த் தளத்தின் ஒரு பகுதிக்கு நிரந்தரமாக வைத்தார்!

கார்ல் சேகன் மரணத்தைப் பற்றி கார்நெல் பல்கலைக் கழக வானியல் துறையின் அதிபதி ஏர்வந்த் டெர்ஸியன் [Yervant Terzian] கூறியது:- ‘இருளில் ஏற்றி வைத்த ஓர் எரியும் மெழுகு வர்த்தி, கார்ல் சேகன்! பலரது மனதைத் தொட்டுத் ‘தான் பெற்ற பேறு பெறுக இவ் வையகம் ‘ என்று விஞ்ஞான உலகில் பலருக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்! பல்துறை வல்லுநரான கார்ல் சேகன், பாரில் பல இனத்தவரைக் கவர்ந்து பலருக்கு நண்பர் ஆனார்! நவீன விஞ்ஞானக் கண்டு பிடிப்பு, அதனைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வது, பலருக்குப் புகட்டி அவரது கண்களைத் திறப்பது இவைதான் கார்ல் சேகனின் சிறப்புக் குணப்பாடுகள்! அவரது அகால மரணம் கார்நெல் பல்கலைக் கழக நண்பர்களுக்கும், உலக நபர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஓர் பெரும் இழப்பாகும்! எல்லாவற்றுக்கும் மேலாக அவர் விட்டுச் சென்ற அவரது அன்பு மனைவி ஆன் டுருயன், அவரது அருமைத் தங்கை கேரி கிரீன், ஐந்து பிள்ளைகள், ஒரு பேரப் பிள்ளை ஆகியோரின் இழப்புக்கு இணையாகச் சொல்லத் தமிழில் எந்தச் சொற்களும் இல்லை! பூமியைச் சுற்றிவரும் பெரும் விண்கல் [Astroid] ஒன்றுக்குச் ‘சேகன் ‘ என்று பெயரிடப் பட்டுள்ளது!

ஆதாரங்கள்:-

1. Carl Sagan By: William Poundstone [1999]

2. Cosmos By: Carl Sagan [1980]

3. Comets By: Carl Sagan & Ann Druyan Sagan [1985]

4. Planet Guides ‘Mars ‘ By: Duncan Brewer [1993]

5. Frontiers of Science By: National Geographic Society [1982]

6. Book of the Universe By: Ian Ridpath [1991]

7. Carl Sagan Wikipedia (http://en.wikipedia.org/wiki/Carl_Sagan)  (January 8, 2010)

************

அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள் -5

ஜனவரி 8, 2010

(கட்டுரை: 5)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
இப்போது தோன்றின
புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !
கதிரியக்கம் பொழியும்
புழுதிக் குண்டுகள் !
அணு ஆயுத வெடிப்பில்
புகை மண்டலம்
சூழ்வெளியில் பரவிப்
பரிதி ஒளியை மறைத்து
குளிர் உலகம் உண்டாகும் !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
புது யுகச் சூட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?

உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

விஞ்ஞானிகள் உலகத் தேச நலனை முன்வைத்து அதிர்ச்சியான இந்தக் கோரப் பிரச்சனையில் (அணு ஆயுத வெடிப்பு) தெளிந்த சிந்தனையோடு நடந்து கொண்டனரா என்று ஒருவர் கேட்க வரலாம் !  உண்மையாக அப்படி ஒரு விருப்பத் தேர்வுக்கு (Choice) இடமில்லை !  அடிப்படை ஆய்வறிவு கிடைத்ததும் அது கனியாகப் பழுப்பதை நிறுத்த எந்த ஓர் எதிர்ப்புத் தடையும் வந்தால் பரிதியைச் சுற்றிவரும் பூமியை நிறுத்த முனைவது போல் முறிந்து போகும் !

சிகாகோவில் முதல் அணுப்பிளவு தொடரியக்கம் நிகழ்த்திய என்ரிக்கோ ஃபெர்மி,

விஞ்ஞானம் அணுசக்தி மூலம் பயனடைய நமக்குக் கல்வி புகட்டியுள்ளது.  மனிதத் தீங்குகளுக்குப் பதிலாக மானிட நலத்துக்கு அணுசக்தியைப் பயன்படுத்த முயல்வது மனிதக் கடமை நெறியில் பின்னியுள்ளது.  இப்போது நாம் எதிர்நோக்கும் பிரச்சனை பௌதிக விஞ்ஞானம் அல்ல;  மனித ஒழுக்க நெறி !

பெர்னார்டு மான்னஸ் பரூச் (Bernard Mannes Baruch)


“முஸ்லீம்களாகிய நாம் வல்லவராகவும், நம் நாடு மற்ற நாடுகளுக்கு இணையாகவும் இருக்க வேண்டும்.  அதனால்தான் சில நாடுகள் வல்லமையோடு இருக்க நான் உதவி செய்ய விரும்புகிறேன்,”

அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan, Maker of Pakistan Atomic Bomb)

“இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ இலைகளைத் தின்றோ பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்.”

ஸுல்ஃபிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர்.

“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”

டாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)


அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி நியதி !

ஜப்பான் ஹிரோஷிமா நாகசாக்கி நகரங்களில் போட்ட அணு ஆயுத வெடிப்புகள் போல மூன்றாம் உலகப் போர் நிகழ்ந்தாலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுப் போர் மூட்டிவரும் பாகிஸ்தானும் பாரதமும் தமது அணு ஆயுதங்களை ஏவி இரு நாடுகளும் மனித இனத்தை அழித்துக் கதிரியக்கப் பொழிவுகளைப் பரிமாறிக் கொண்டாலும் சரி, இறுதியில் கோடான கோடி டன் புகை மூட்டம் சூழ்வெளி மண்டலத்தில் சேர்ந்து இருள் மண்டிப் பரிதியின் ஒளி குன்றிப் பூமியில் பெருங்குளிர்ச்சி ஏற்பட்டு விடும் என்று ஒரு கோட்பாடு கூறப்பட்டு வருகிறது !  இந்த கோர விளைவைத்தான் 1983 இல் அணுவியல் /வானியல் பௌதிக விஞ்ஞானி கார்ல் சேகன் (1934 -1999) “அணு ஆயுத வெடிக் குளிர்ச்சி” (Nuclear Winter) என்று முதன்முதல் ஓர் எதிர்பார்ப்புக் கோட்பாடாக அறிவித்தார்.  போரில் பல்லாயிரம் கிலோ டன் டியென்டி ஆற்றல் கொண்ட பல்வேறு அணு ஆயுதக் குண்டுகள் வெடிப்பதால் ஏற்பாடும் பேரளவு புகை மண்டலம் பூமியின் மேல் நிலைச் சூழ்வெளி வாயு மண்டலத்தைச் (Earth’s Upper Atmosphere) சேர்ந்து சூரிய ஒளி விழுங்கப் பட்டுத் தட்ப வெப்ப நிலையைச் சீர்குலைக்கும் என்பதுதான் கார்ல் சேகன் கோட்பாடு !

அணு ஆயுத வெடிப்புத் தூசி மண்டலம் பரிதி வெளிச்சத்தை மறைத்துக் கொண்டு பூமியை ஓர் இருண்ட கண்டமாக்கி வரண்டு போகும் குளிர்க் கோளமாய் மாற்றிப் பல்லாண்டுகள் தங்கியிருக்கும் என்று சொல்லப் படுகிறது !  அதனால் பெருமளவு வேளாண்மைப் பயிர்கள் சேதம் அடைந்து பல நாடுகளில் பட்டினியும் பஞ்சமும் படிப்படியாகப் பரவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது !  அமெரிக்க ரஷ்ய நாடுகள் அல்லது பாகிஸ்தான் பாரத தேசத்துக்கு இடையே எதிர்காலத்தில் நேரக் கூடிய அணு ஆயுதப் போர்களால் “பூகோளக் குளிர்ச்சி” (Global Cooling) ஏற்படும் என்று சில விஞ்ஞானிகள் இப்போது கருதுகிறார்.  அந்த விஞ்ஞானிகளின் பௌதிகக் குரு காலஞ் சென்ற அணுவியல் / வானியல் நிபுணர் கார்ல் சேகன் (1934 -1999).  கார்ல் சேகனின் முக்கியச் சீடர்கள் இருவர் : அலன் ரோபோக் & ஓவன் பிரையன் டூன் (Alan Robock & Owen Brian Toon).

அலன் ரோபோக், ஓவன் பிரையன் டூன் இருவரது அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சிக் கோட்பாடு பூகோளக் குளிர்ச்சிக் காட்சிகளைக் (Global Cooling Scenerios) கணினி மாடல்கள் மூலமாகக் (Computer Models) கண்டு முடிவு செய்தவை.  கடந்த காலங்களில் பூமியில் நேர்ந்த எரிமலைப் புகை மூட்டங்கள், கானகத் தீயெரிப்புகள், மற்ற பூதள வெளியேற்றங்கள் ஆகியவை அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சிக்கு ஆதாரமாகச் சான்றுகள் கூறுகின்றன.  அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சிக் கோட்பாடு என்ன சொல்கிறது ?  அணு ஆயுதப் போரில் அணுக்குண்டுகள் வெடித்த பிறகு கதிரியக்கப் பொழிவுகள் பூமியில் படிகின்றன.  அதே சமயத்தில் எழும் புகை மண்டலம், கரித்தூள்கள், மற்ற பூமியின் சேதாரத் தூசிகள் யாவும் மேலேறிச் சூழ்வெளியில் கலக்கின்றன.  அவை பரிதியின் ஒளியை மங்க வைத்து வான் வெளியை இருளடையச் செய்கின்றன.  இறுதியாகச் சில மாதங்களில் பூமியின் உஷ்ணம் 1 முதல் 5 டிகிரி சென்டிகிரேட் வரைக் குறைந்து போகலாம்.  கணினி மாடல்கள் இந்த உளவு ஆராய்ச்சிகளில் கண்ட முடிவு என்ன வென்றால் ஒரு டிகிரி சென்டிகிரேட் உஷ்ண மிகையால் கூட “உயிரின ஏற்பு அமைப்பில் நிலைகேடு” (Ecosystem Unbalance) விளைந்து பூமியில் உயிரினப் பயிரினப் பாதிப்புகள் ஏற்படும் என்று அறியப்படுகிறது.

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அசுர அணுக்குண்டு பூமியில் விழுந்தது போல், மெக்ஸிகோ அருகில் விழுந்த ஒரு பெரும் முரண் கோளால் (Asteroid) நேர்ந்த அதிர்ச்சியும் தூசி மண்டல எழுச்சியும் பரிதி ஒளியை விழுங்கி உஷ்ணம் தணிந்து போனதால் அக்காலத்தில் வாழ்ந்த டைனோஸார்ஸ் அனைத்தும் மாண்டு போனது இதற்கோர் தகுந்த உதாரணம்.

அணு ஆயுத வெடிப்புப் போர்களால் விளையும் புகை மூட்டக் குளிர்ச்சி!

கார்ல் சேகன் அணு ஆயுத ஆக்கத்தையும், அவற்றின் மேற்தள வெடிப்பையும் அறவே எதிர்த்தவர் ! 1980 ஆண்டுகளில் ‘அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி’ [Nuclear Winter] என்னும் புதிய ‘அணு ஆயுதப் புகை மூட்ட’ எச்சரிக்கையை முதன் முதலில் உலகெங்கும் பறைசாற்றியவர், விஞ்ஞானி கார்ல் சேகன் (1934 -1999) ! அதன் விளக்கம் என்ன வென்றால், அணு ஆயுத வெடிப்புகளில் கிளம்பும் புகையும், தூசியும், கரிவாயுக் கோளமும் பூமியின் சூழ்வெளி மண்டலத்தைப் பேரளவில் பாதித்துப் பரிதியின் தட்ப வெப்ப அளவுகளைக் கூட்டிக் குறைத்துக் கால நிலையைக் கரைப்படுத்திப் பூமியைப் பல நாட்களுக்கு ஒரு குளிர்க்கோளமாய் ஆக்கிவிடும் என்று கூக்குரல் இட்டார் !

அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி வேளாண்மைத் தானியங்களைச் சரிவர வளர விடாமல் பாதித்து மனிதர் மற்றும் விலங்கினங்கள் ஆகாரம் இல்லாமல் பஞ்சம், பட்டினியில் துன்பப்படும் என்று உலக வல்லரசுகளையும், அணு ஆயுதப் போர்வைக்குள் ஒளிந்து பின்புறமாய் தயாரித்துக் கொண்டிருக்கும் மெல்லரசுகளையும் கார்ல் சேகன் எச்சரிக்கை செய்தார் ! ஹைடிரஜன் குண்டு ஆயுதப் பிதா, டாக்டர் எட்வெர்டு டெல்லர் போன்ற தீவிரவாத விஞ்ஞானிகள் கார்ல் சேகனின் அணு ஆயுதக் குளிர்ச்சிக் கோட்பாடை ஒப்புக் கொள்ளாது தப்பென ஒதுக்கித் தள்ளினார்கள்!

அணு ஆயுதப் போர் வெடிப்புக் குளிர்ச்சியால் நேரும் சீர்கேடுகள்

2000 இல் சோவியத் தலைவர் மிக்கேல் கார்பச்செவ் (Mikhail Gorbachev) ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானிகள் செய்த கணினி மாடல்கள் எதிர்காலத்தில் அணு ஆயுத யுத்தம் ஒன்று வருமானால் அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி (Nuclear Winter) உண்டாகும் என்றும் அதனால் பூமியில் அனைத்து உயிரினங்களுக்கும் அழிவு நேரும் என்றும் எச்சரிக்கை செய்தார்.  அந்த அறிவுரை புத்துணர்ச்சி ஊட்டும் போதனையாக நன்னெறியைப் பின்பற்றும் நபருக்கு விழிப்புணர்ச்சி தரும் என்றும் குறிப்பிட்டார்.  அதனால் அணு ஆயுத வெடிக் குளிர்ச்சிப் பயமானது உலக நாடுகளின் அணு ஆயுதப் பெருக்கப் பந்தயத்தை நிறுத்த அது ஒரு முக்கிய காரணமாக வலியுறுத்தப்பட வேண்டும்.

உலக வல்லரசுகளுக்கு இடையே ஊர்ந்து வந்த ஊமைப்போர் (Cold War) 1990 ஆண்டுகளில் முடிந்த பிறகும் நாம் ஏன் அணு ஆயுத அடுக்குகளுக்கு அஞ்ச வேண்டும் என்ற ஒரு கேள்வி எழலாம்.  காரணம் மெல்லரசுகள் பல இப்போது தம் கைவசம் அணு ஆயுதங்களை இரகசியமாய்த் தயாரித்து ஒளித்து வைத்திருப்பதுதான் !  உதாரணமாக இப்போது பாகிஸ்தான் மூர்க்கப் படைத் தாக்குதலை நிறுத்த, பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்து போரில் பல அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டு நூற்றுக் கணக்கான அணுக்குண்டுகள் இருபுறமும் வீசப்பட்டால் அதன் கோர முடிவு பூகோள வேளாண்மை விளைச்சலைப் பேரளவில் முடக்கி விடும்.  ஒரு பிராந்தியப் போரால் உலகளாவியச் சேதாரங்களும் உயிரின இழப்புகளும் நேரிடும் !  நீண்ட கால அணு ஆயுதப்போரில் உள்நாட்டு மக்கள் பேரளவில் மடிவதோடு உலக நாட்டு மாந்தரும் பாதிப்படைவார்.  நேரடித் தாக்குதலிலும், தீக்காயங்களிலும் பின்னர் கதிரியக்கத்திலும் பாதிக்கப் பட்டு உள்நாட்டு மக்கள் சுமார் 20 மில்லியன் பேர் மரிப்பார் !  இரு நாடுகளைக் கடந்து அப்பால் உலக நாடுகளிலும் சூழ்வெளி பாழ்பட்டு வேளாண்மை சீர்கேடாவதால் ஒரு பில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையிலும் பட்டினியாலும் சாகலாம்டென்று யூகிக்கப் படுகிறது !

உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய பாடம் !

அணு ஆயுத யுகம் ஒளிமறைவாக உதயமானது.  ஹிரோஷிமா, நாகசாக்கியில் ஈரணுக் குண்டுகளைப் போட்ட பிறகு இருபதாண்டுகளாக அணு ஆயுத ஏகாதிபதிகள் கதிரியக்கத்தால் நேரக்கூடிய மனித உடற் கேடுகளைக் கூறாமல் மறைத்து வைத்திருந்தனர்.  பிடிவாதத்துடன் மருத்துவ ஆராய்ச்சி செய்யும் டாக்டர் அலிஸ் ஸ்டீவர்ட் (Dr. (Mrs) Alice Stewart) என்னும் பெண்மணிதான் முதன்முதலில் தணிவு நிலைக் கதிர்வீச்சால் (Low Level Radiation) விளையும் உடற் பாதிப்புக்களைக் கூறி உலகுக்கு அணு ஆயுதங்களைப் பற்றி எச்சரிக்கைகள் செய்தார்.

இன்னும் இரண்டு பிறப்பாண்டுகளில் (Generations) மனித இனத்தின் எதிர்கால விதி தீர்மானிக்கப்படப் போகிறது !  அதற்கு இரு மிக முக்கியத் தேவைப்பாடுகள் என்ன ?  மனித இனவிருத்திக் கட்டுப்பாட்டுக்குள் நாம் ஒரு நிலையான சமூக வளர்ச்சிக்குக் குறிவைக்க வேண்டும்.  அடுத்து உலகிலுள்ள அணு ஆயுத அடுக்குகளை முடக்கி அனைத்தையும் முறிக்க வேண்டும்.  இல்லாவிட்டால் நாம் 2050 ஆண்டுக்கு மேல் எப்படி உயிர் பிழைத்து வாழ முடியும் என்பது எனக்குத் தெரியாது என்று ஜேக்ஸ் மோனாடு 1971 இல் கூறினார்.

(கட்டுரை தொடரும்)

*****************************

தகவல் :

Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210273&format=html  (Robert Oppenheimer)

3 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203245&format=html (First Atomic Bombs Dropped on Japan)

3. (a) http://jayabarathan.wordpress.com/2009/08/06/dr-raja-ramanna-2/ (ராஜா ராமண்ணா இந்திய அணு ஆயுதச் சோதனை)

4. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes

5. Oppenheimer, By: James Kunetka

6. Hand Book of World War II, Abbeydale Press

7. The Deadly Element, By: Lennard Bickel

8. Canadian Nuclear Society Bulletin, June 1997

9.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

10.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

11.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

12.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads, By : David Biello (November 2007)

13.  The Dirty Bombs (Radiological Dispersion Bombs) MSN Broadcasting -Dirty Bombs Biggest Hazard : Panic Experts Say Radiation Would Play on Public Fears (June 10, 2002)

14.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

15.  Neutron Bombs – Wikipedia Report (December 15, 2009)

16 Wikipedia Report on Dr. Abdus Salam – http://en.wikipedia.org/wiki/Abdus_Salam (Dec 18, 2009)

17. Wikipedia Report on Abdul Qadeer Khan – http://en.wikipedia.org/wiki/Abdul_Qadeer_Khan (December 26, 2009)

18. Wikipedia Report on http://www.armscontrol.org/documents/sort Strategic Offensive Reductions Treaty (SORT) (May 24, 2002)
19 http://jayabarathan.wordpress.com/2008/05/02/katturai27/  (பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது ?) (May 1, 2008)
20 What is NuclearWinter ? By : Charles Mallery Dept of Biology, University of Miami, Florida, USA (May 16, 2006)
21 Nuclear Winter By : Carl Sagan
22 Scientific American : Local Nuclear War, Global Suffering By: Alan Robak & Owen Brian Toon (January 2010)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) January 7, 2010

அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள் -4

December 31, 2009

(கட்டுரை: 4)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
இப்போது தோன்றின
புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !
கதிரியக்கம் பொழியும்
புழுதிக் குண்டுகள் !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
புது யுகச் சூட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?

உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)


“ஒருவருக்குப் பின்னால் ஒருவராக யாரெனக் காண முடியாத தோற்றத்தில் மக்கள் பலர் ஓடினர் !  அவரது தோலுரிந்து கைகளிலிருந்தும், கன்னங்களிலிருந்தும் தொங்கிக் கொண்டிருந்தன !  முகமெல்லாம் சிவந்து உப்பிப் போய் எங்கே கண்கள் உள்ளன, எங்கே வாய் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாதவாறு கடினமாக இருந்தது.”

ஹிரோஷிமா அணு ஆயுதப் பிழைப்பாளி

“நான் கதிர்வீச்சு நோய்களால் திரும்பத் திரும்ப பத்துத் தடவைகள் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டேன்.  மூன்று தடவைகள் (சாகக் கிடந்து) என் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு என் படுக்கை அருகிலே இருந்தனர்.  மரணத்தோடு போராடிப் போராடி நான் மெய்வருந்திக் களைத்துப் போய் விட்டேன்.”

ஹிரோஷிமா அணு ஆயுதப் பிழைப்பாளி ஸனாவோ சுபாய் (Sanao Tsuboi)

“முஸ்லீம்களாகிய நாம் வல்லவராகவும், நம் நாடு மற்ற நாடுகளுக்கு இணையாகவும் இருக்க வேண்டும்.  அதனால்தான் சில நாடுகள் வல்லமையோடு இருக்க நான் உதவி செய்ய விரும்புகிறேன்,”

அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan, Maker of Pakistan Atomic Bomb)

“இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ இலைகளைத் தின்றோ பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்.”

ஸுல்ஃபிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர்.

“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”

டாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)


உலக நாடுகளின் அணு ஆயுதக் கையிருப்பு ஆற்றல்கள்

இப்போது உலக அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகள் கைவசமுள்ள அணு ஆயுத வெடிக் குண்டுகளின் எண்ணிக்கையை அறிந்தோமானால் இன்னும் அத்தனை ஆயுதங்கள் உயிரனத்தை அழிக்க விழித்துள்ளன என்பதை நாம் கண்டு வியப்புறுவோம்.  அமெரிக்காவின் அணு ஆயுதக் குண்டுகளை ஏந்தியுள்ள கட்டளை ஏவுகணைகள் ரஷ்யாவையோ மற்ற பகை நாடுகளையோ குறிவைத்துப் பல திசைகளில் பல்வேறுச் சாதன முறைகள் மூலம் தாக்கப் பதுக்கி வைக்கப் பட்டுள்ளன.  1991 இல் சோவியத் யூனியன் கவிழ்ந்து வல்லரசுக்களுக்கு இடையே இருந்த ஊமைப் போர் மறைந்த பிறகும் உச்ச வல்லமை படைத்த அமெரிக்கா இன்னும் 10,000 (2007 ஆண்டு வரை) அணு ஆயுதப் பேரழிவுக் குண்டுகளை வைத்துக் கொண்டு கண்காணித்து வருகிறது !  ரஷ்யா தன் கைவசம் 15,000 (2007 ஆண்டு வரை) அணு ஆயுதக் குண்டுகளைப் பதுக்கி வைத்துள்ளது.  பிரான்ஸ் 350, பிரிட்டன் 200, சைனா 200, இஸ்ரேல் 80, பாகிஸ்தான் 60, இந்தியா 50, வட கொரியா பத்துக்குக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் (2007 மதிப்பீடுகள்) அணு ஆயுதக் குண்டுகள்.

தற்போதைய அச்சம் ஏற்கனவே நாமறிந்த அணு ஆயுதக் குண்டுகள் அல்ல. தொல்லை தரவல்ல மூர்க்க வர்க்கம் களவாடி அவரது கைவசம் அகப்படும் “புழுதிக் குண்டுகள்” எனப்படும் கதிர்வீச்சுக் குண்டுகளே (Radioactive Dirty Bombs) OR (Radiological Dispersion Bombs) !  இவ்வகை அணுவியல் குண்டுகள் சாதாரண ரசாயன வெடிகளைப் பயன்படுத்திக் கதிரியக்கப் பொழிவுகளைச் சிறிதளவு தரைமீது (200 சதுர மைல்) பரப்பச் செய்யும்.  புழுதிக் குண்டுகளில் பொதுவாக இருப்பவை : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137).  புழுதிக் குண்டுகள் வீரிய கதிரியக்கமுள்ள காமாக் கதிர்வீச்சைத் தளமெங்கும் பரப்பும்.  இந்தப் புழுதிக் குண்டுகளை எளிதாக யாரும் தயாரிக்க முடியும்.  தேவையானவை :  சாதாரண வெடி மருந்து அடுத்து கதிரியக்க உலோகம் ஏதாவது ஒன்று : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137).  இவற்றைக் காமாக் கதிர்ப் படங்கள் எடுக்கும் (Radio-graphy) தொழிற் கூடங்களில் அல்லது அணு உலைக் கூடங்களில் களவாட வேண்டும்.

இப்போது அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒருவருக் கொருவர் பணிந்து தணிந்து மாஸ்கோ அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தப்படி [Moscow Treaty - Strategic Offensive Reductions Treaty (SORT)] தமது அசுர வல்லமையுள்ள அணு ஆயுதச் சேமிப்புகளை முதன் முதலாகக் குறைத்துக் கொள்ள உடன்பட்டிருக்கின்றன.  அந்த அமெரிக்க-ரஷ்ய உடன்படிக்கைப்படி 2012 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்காவும், ரஷ்யாவும் தமது இயக்க அணுவெடி ஆயுதங்களை (1700 -2200) எண்ணிக்கைக்கு இடையில் குறைத்துக் கொள்ள வேண்டும்.  (Each Party shall reduce and limit strategic nuclear warheads, as stated by the President of the United States of America on November 13, 2001 and as stated by the President of the Russian Federation on November 13, 2001 and December 13, 2001 respectively, so that by December 31, 2012 the aggregate number of such warheads does not exceed 1700-2200 for each Party. Each Party shall determine for itself the composition and structure of its strategic offensive arms, based on the established aggregate limit for the number of such warheads.)  அமெரிக்காவின் அணு ஆயுதங்களில் சில மாடல்கள் (W-76 Model Warheads -100 kiloton TNT Capacity) தமது 30 ஆண்டு ஆயுட் காலத்தைக் கடந்து விட்டதால் அவற்றை ஏனோ புதுப்பிக்க அமெரிக்கா இப்போது ஈடுபட்டுள்ளது.

அணு ஆயுத வணிகம் செய்த அப்துல் காதீர் கான்

2008 மே மாதம் அளித்த நேர்முக உரையாடலில் டாக்டர் அப்துல் காதீர் கான் தனது முந்தைய குற்ற ஏற்பில் கூறியவற்றை மாற்றி ஈரான், வட கொரியா நாடுகளுக்கு அணு ஆயுத உற்பத்திக்கு உதவி புரிந்ததாக ஒப்புக் கொண்டார்.  மேலும் அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி பெர்வெஸ் முஷாரஃப் தேசீய நலனுக்காகத் தன்னை ஒருப் பலி ஆடாக இருக்கக் கட்டாயப் படுத்தியதாகவும் கூறினார் !  அத்துடன் உலக நாடுகள் சில அணு ஆயுதப் பெருக்கத்தில் ஈடுபடக் காரணமானவர் ஜனாதிபதி முஷாரஃப்தான் என்றும் குறிப்பிட்டார்.  அணு ஆயுத யுரேனிய எருவைச் சேமித்துத் திரட்டும் சுழல்வீச்சு வடிகட்டிச் சாதனங்கள் (Centrifuge Equipment to Prepare Weapon Grade Uranium -235) பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்பார்வையில் பாகிஸ்தானி லிருந்துதான் ஒரு விமானத்தின் மூலம் வட கொரியாவுக்கு அனுப்பப் பட்டன என்றும் வெளிப்படையாகக் கூறினார்.  மேலும் 1999 ஆம் ஆண்டில் தான் ஒரு பாகிஸ்தான் இராணுவ ஜெனரலோடு வட கொரியாவுக்குச் சென்று தோள் மீதிருந்து ஏவும் ஏவுகணைகளை (Shoulder-Launched Missiles) வாங்கச் சென்றதாகவும் ஒப்புக் கொண்டார்.  அவரது குற்ற ஏற்புகளால் வெகுண்ட அமெரிக்க அரசாங்கம் தூண்டி டாக்டர் கான் பாகிஸ்தான் அணுசக்தி ஆணையகத்திலிருந்து நீக்கப் பட்டு “இல்லச்சிறைக் கைதியாய்” அடைக்கப் பட்டார்.  பிப்ரவரி 6, 2009 இல் இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றம் ஆணையிட்டபடி டாக்டர் கானை இல்லச் சிறையிலிருந்து விடுதலை யானார்.

பாகிஸ்தானின் அணுக்குண்டு பிதா எனப்படும் அப்துல் காதீர் கான் ஏப்ரல் 27, 1936 தேதி (பிரிட்டிஷ் இந்தியாவில்) போபால் நகரில் பிறந்தார்.  1947  இல் பிரிவினைக்குப் பிறகு கான் குடும்பம் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்தது.  கராச்சி பல்கலைக் கழகத்தில் 1960 இல் B.Sc பட்டம் பெற்றார்.  1961 இல் உலோகவியல் படிக்க மேற்கு ஜெர்மனிக்குச் சென்று 1967 இல் பொறியியல் பட்டத்தைப் பெற்றார்.  அடுத்து நெதர்லாந்தில் உள்ள டெல்ஃப்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து உலோகவியல் பொறியியலில் Ph. D. (Metallugical Engineering) பட்டத்தையும் பெற்றார்.

1972 இல் டாக்டர் கான் நெதர்லாந்து பௌதிக ஆய்வுக் கூடத்தில் (Physical Dynamics Research Laboratory, Amsterdam, Netherlands) சேர்ந்து யுரேனியம் செழிப்பூட்டும் அணுவியல் கூடத்தில்  (Uraniuam Enrichment Facility at Almelo, Netherlands) பணி செய்தார்.  அணுமின் சக்தி நிலையங்களுக்கு செழிப்பு யுரேனியத்தைத் தயாரிக்க அந்த ஆய்வுக்கூடத்தை 1970 இல் கட்டி முடித்தவை மூன்று நாடுகள் : பிரிட்டன், மேற்கு ஜெர்மனி & நெதர்லாந்து. யுரேனியம் ஹெக்ஸா ஃபுளூரைடு வாயுவிலிருந்து (Uranium Hexafluoride Gas) அணு ஆயுதத் தரமான யுரேனியம் -235 எருவைத் தயாரிக்க 1500 சுழல்வீச்சு வடிகட்டிகள் (Centrifuges) தேவைப்படும்.  அவற்றில் யுரேனியம் -238 & யுரேனியம் -235 ஆகிய இரண்டு ஏகமூலங்களும் (Isotopes of Uranium) 100,000 rpm (Revolutions per minute) வேகத்தில் சுற்றப்பட்டு யுரேனியம் -235 படிப்படியாக சேமிப்பாகிப் பிரித்தெடுக்கப் படும்.  அணு ஆயுதத் தரமான யுரேனியம் -235 தயாரிப்பு முறைகள், மற்றும் யந்திர சாதனங்கள் யாவும் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் வைத்திருக்கப் படுபவை !

1974 மே மாதம் 18 ஆம் தேதியில் இந்தியா “புத்தர் புன்னகை புரிகிறார்” (Bhuddha Smiling) என்னும் இராணுவக் குறிச்சொல் கொண்ட தனது முதல் அணு ஆயுதச் சோதனையைச் செய்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது !  பாகிஸ்தானைப் பைத்திய நாடாக்கியது ! டாக்டர் கான் “புத்தர் புன்னகை புரிந்தது பாகிஸ்தானின் மரணத்தை எதிர்நோக்கித்தான்” என்று கொதித்தெழுந்தார் !  1975 டிசம்பரில் டாக்டர் கான் வாயுச் சுழல்வீச்சு வடிகட்டிப் படங்களையும் (Gas Centrifuge Blueprints) மற்றும் தயாரிப்பு முறைகளையும் களவாடிக் கொண்டு நெதர்லாந்தை விட்டுப் பாகிஸ்தானுக்கு பறந்து வந்தார் !  டச் அரசாங்க ஒற்றர் பின்னர் செய்த ஒற்றில் மிகவும் இரகசியாமான யுரேனியம் -235 சேமிப்புத் தகவல் பாகிஸ்தானி வலைக் குழு ஒற்றர் மூலமாகக் களவாடப் பட்டது என்று தெரிய வந்தது !

டாக்டர் கான் அப்போதைய முதன் மந்திரி ஸுல்ஃபிகார் அலி புட்டுவுடன் நட்புறவு கொண்டிருந்தார்.  1974 இல் இந்தியா தனது முதல் அணு ஆயுதத்தைச் சோதித்த பிறகு, டாக்டர் கான் பாகிஸ்தான் அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அதன் அணு ஆயுத முயற்சிக்குத் தான் உதவுதாக முன்வந்தார்.  1998 மே மாதம் 11 இல் இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுதச் சோதனைகள் பொரொன் பாலை நிலத்தில் நிகழ்ந்த பிறகு பாகிஸ்தானின் முதல் அணு ஆயுதச் சோனைகள் 1998 மே மாதம் 28 (யுரேனியம் -235 அணுக்குண்டு) & 30 (புளுடோனியக் குண்டு) தேதிகளில் இரண்டு முறைச் சோதனைகள் செய்து காட்டப் பட்டன.

பாகிஸ்தான் அணு ஆயுதங்களுக்கு அன்னிய நாடுகளின் ஒத்துழைப்பு

பாகிஸ்தான் அணுவியல் விஞ்ஞானிகள் திடீரெனச் செய்து காட்டிய செழிப்பு யுரேனிய அணுக்குண்டு, புளுடோனிய அணுக்குண்டு வெடிப்புகள் இரண்டும் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி ஐயமுறச் செய்தன.  அத்தகைய விரைவான அணு ஆயுதத் தயாரிப்புகள் சில அன்னிய நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பின்றி நிகழ முடியாதென்று சந்தேகங்கள் உண்டாயின !  1980 ஆண்டுகளில் சைனாவின் தொழில் நிபுணர்கள் பாகிஸ்தான் அணுவியல் ஆய்வுக் கூடங்களில் உலவியதாகத் தெரிகிறது !  1983 இல் டச் அரசாங்கம் யுரேனியச் செழிப்பு முறைப்பாடுச் சாதனங்களைக் களவாடி ஓடிப்போன டாக்டர் கான் மீது வழக்குத் தொடர்ந்து ஆம்ஸ்டர்டாம் சிறையில் நாலாண்டுகள் தள்ள ஆணை இட்டது !  ஆனால் அப்போது பாகிஸ்தானில் இருந்த குற்றவாளி கானை டச் அரசாங்கம் கைது செய்ய முடியாமல் போனது !

1987 இல் பிரிட்டீஷ் தின இதழ், ‘பாகிஸ்தான் அணு ஆயுதத் தயாரிப்பு நிபுணத்தை டாக்டர் கான் வெளியே இருந்து எடுத்து வந்ததாய்’, ஒப்புக் கொண்டதாக அறிவித்தது.  ஆனால் 1990 இல் டாக்டர் கான் பாகிஸ்தானி தகவல் அறிவிப்பாளருடன் உரையாடும் போது “நாங்கள் அன்னிய நாடுகளிலிருந்து எந்த மூலத் தகவலை அறியவில்லை” என்றும், “அணுவியல் நூல்கள், மாத இதழ்கள், ஆராய்ச்சி வெளியீடுகளைப் பயன்படுத்தினோம்,” என்றும் வெளிப்படையாகக் கூறினார் !  1991 இல் பாகிஸ்தான் தினச்செய்தி இதழ் ‘டான்’ (Dawn) டாக்டர் கான் தான்தான் அணு ஆயுதத் தயாரிப்புக்குக் காரண கர்த்தா வென்று பெருமைப் பட்டுக் கொண்டதாக அறிவித்தது.

அணு ஆயுதச் சாதனங்களைப் பாகிஸ்தான் தயாரிக்க பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்ய முன்வந்ததாக அறியப்படுகிறது.  நெதர்லாந்தில் டாக்டர் கான் 1970 ஆண்டுகளில் சுழல்வீச்சு வடிகட்டிகள் டிசைன், அமைப்பு முறைகளை முதலில் களவாடிப் பாகிஸ்தானுக்குக் கொண்டு வந்தார்.  அந்த நிபுணத்தை முதலில் பாகிஸ்தானுக்கும், பிறகு ஈரான், லிபியா, வட கொரியா நாடுகளுக்கும் அவர் பயன்படுத்தியாக அறிய வருகிறது.  நெதர்லாந்தில் செழிப்பு யுரேனிய ஆய்வுக்கூடம் கட்டிக் கொடுத்த பிரிட்டன் டாக்டர் கானுக்கு இருபதாண்டுகள் உபரிச் சாதனங்கள் (Centrifuge Parts & Spare Parts) அனுப்ப ஒப்பி வந்திருக்கிறது.

பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்க செழுப்பு யுரேனியம் சேமிக்கத் தேவையான நுணுக்க சூனியமாக்கும் பம்ப்புகளை (Vacuum Pumps) ஜெர்மன் வர்த்தகக் கம்பேனி ஒன்று செய்து அனுப்பி இருக்கிறது.  ஸ்பெய்னில் உள்ள ஒரு தொழிற்சாலை இடைத் தரகர் மூலமாக லேத் யந்திரங்களைப் (Lathe Machines for Enrichment Plant) பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது.  மொராக்கோவில்தான் டாக்டர் கான் வெளிநாட்டு நிபுணர்களைச் (ஈரான், லிபியா, வட கொரியா மற்றும் சாதனம் தயாரிப்பாளரை) சந்தித்து கூட்டுழைப்புப் பணிகளைச் செய்திருக்கிறார்.  மலேசியாவில் உள்ள ஸ்கோமி நுணுக்கத் தொழிற்சாலையில்தான் (Scomi Precision Engineering Company) எல்லா நாடுகளுக்கும் வேண்டிய 25,000 சுழல்வீச்சு வடிகட்டிகள் (Centrifuges) தயாரிக்கப் பட்டுள்ளன !  வட கொரியா நாட்டுக்கு மட்டும் டாக்டர் கான் குறைந்தது 12 தடவைகள் அணு ஆயுதத் தயாரிப்பு சம்பந்தமாக நேரிடைப் பிரயாணம் செய்திருப்பதாகத் தெரிகிறது !  அதன் பிரதிபலனாக வட கொரியா தனது கட்டளை ஏவுகணைகளைப் பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதாகவும் பின்னால் அறிய வருகிறது.

1980 -1990 ஆண்டுகளில் அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் கட்டளை ஏவுகணைத் தயாரிப்பு சம்பந்தமாக ‘பாகிஸ்தான் சைனா வட கொரியா’ நாடுகளுக்குள் கூட்டுழைப்பு நிகழ்ந்து வருவதாக மேற்திசை நாடுகளுக்குள் ஓர் உறுதியான எண்ணம் வலுத்தது !  அமெரிக்க நாளிதழ் ‘வாஷிங்டன் போஸ்ட்’ (Washington Post) 1980 ஆரம்ப ஆண்டுகளில் அமெரிக்க ஒற்றர் டாக்டர் கானின் விமானப் பயணப் பெட்டியை உளவிச் சோதித்து சைனா பேஜிங்கிலிருந்து ஹிரோஷிமா மாடல் அணு ஆயுதம் போன்ற சில வரைப்பட விபரங்கள் இருந்ததைக் கண்டுபிடித்து அணு ஆயுதத் தயாரிப்புக்குச் சைனாவின் கூட்டுழைப்பு உள்ளதை முதன்முறை உறுதியாக அறிந்ததாக வெளியிட்டது !

இத்தகைய பயங்கர அணு ஆயுதக் குண்டுகளைப் பலநாடுகள் தயாரிக்கக் காரணமாக இருந்த டாக்டர் கான் இப்போது பாகிஸ்தானில் ஒரு கோடிஸ்வரன் என்பதைச் சொல்லத் தேவையில்லை ! அவருக்கு உதவியாகப் பணி செய்த பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் பலரும் பணம் திரட்ட பயங்கர வேலைகள் செய்து வந்திருக்கிறார்.  இந்த இரகசிய வேலைகளில் முன்னாள் ஜனாதிபதி முஷாரஃப் அனுமதி இல்லாமல் பல்லாயிரம் டாலர் நிதித் திணிப்பின்றி ஈரான், வட கொரியா நாடுகளில் அணு ஆயுதப் பெருக்கம் பரவி இருக்குமா ?  ஆனால் பாகிஸ்தான் அணு ஆயுதத் தயாரிப்புக்கும், வட கொரியா கட்டளை ஏவுகணைகளைக் கொடுத்ததற்கும் தேவைப்படும் மில்லியன் கணக்கான டாலர்களை வருடா வருடம் யார் கொடுத்து வந்திருக்கிறார் என்று நினைக்கிறீர்கள் ?  அணு ஆயுதம் தயாரிக்கும் ஈரானையும், வட கொரியாவையும் தடுத்து வசைபாடிக் கொண்டு பாகிஸ்தானுடன் ஆழ்ந்த தோழமை பேணி வரும் உலக வல்லரசுகளில் உச்ச வல்லரசான அமெரிக்க நாடுதான் !

கதிர்வீச்சடி அளவுகளும் அதனால் விளையும் உயிரினப் பாதிப்புகளும்


Ionizing Radiation Dose Level Examples

Recognized effects of acute radiation exposure are described in the article on radiation poisoning. The exact units of measurement vary, but light radiation sickness begins at about 50–100 rad (0.5–1 gray (Gy), 0.5–1 Sv, 50–100 rem, 50,000–100,000 mrem).

Although the SI unit of radiation dose equivalent is the sievert, chronic radiation levels and standards are still often given in millirems, 1/1000th of a rem (1 mrem = 0.01 mSv)


Level (mSv ) Duration Description
0.001-0.01 Hourly Cosmic ray dose on high-altitude flight, depends on position and solar sunspot phase.
0.01 Annual USA dose from nuclear fuel and nuclear power plants
0.01 Daily Natural background radiation, including radon
0.1 Annual Average USA dose from consumer products
0.15 Annual USA EPA cleanup standard
0.25 Annual USA NRC cleanup standard for individual sites/sources
0.27 Annual
0.28 Annual USA dose from natural terrestrial sources
0.39 Annual Global level of human internal radiation due to radioactive potassium
0.46 Acute Estimated largest off-site dose possible from March 28, 1979 Three Mile Island accident
0.48 Day USA NRC public area exposure limit
0.66 Annual Average USA dose from human-made sources
1 Annual Limit of dose from all DOE facilities to a member of the public who is not a radiation worker
1.1 Annual 1980 average USA radiation worker occupational dose
2 Annual USA average medical and natural background [5] Human internal radiation due to radon, varies with radon levels
2.2 Acute Average dose from upper gastrointestinal diagnostic X-ray series
3 Annual USA average dose from all natural sources
3.66 Annual USA average from all sources, including medical diagnostic radiation doses
few Annual Estimate of cobalt-60 contamination within about 0.5 mile of dirty bomb
5 Annual USA NRC occupational limit for minors (10% of adult limit) USA NRC limit for visitors Orvieto town, Italy, natural [6]
5 Pregnancy USA NRC occupational limit for pregnant women
6.4 Annual High Background Radiation Area (HBRA) of Yangjiang, China
7.6 Annual Fountainhead Rock Place, Santa Fe, NM natural
10-50 Acute USA EPA nuclear accident emergency action level >
50 Annual USA NRC occupational limit (10 CFR 20)
100 Acute USA EPA acute dose level estimated to increase cancer risk 0.8%
120 30 years Exposure, long duration, Ural mountains , lower limit, lower cancer mortality rate[8]
150 Annual USA NRC occupational eye lens exposure limit
175 Annual Guarapari, Brazil natural radiation sources
250 Acute USA EPA voluntary maximum dose for emergency non-life-saving work
250 2 hours Whole body dose exclusion zone criteria for US nuclear reactor siting[12] (converted from 25 rem)
260 Annual Ramsar, Iran, natural background peak dose [9
500 Annual USA NRC occupational whole skin, limb skin, or single organ exposure limit
500 30 years Exposure, long duration, Ural mountains upper limit
750 Acute USA EPA voluntary maximum dose for emergency life-saving work [11
500-1000 Acute Low-level radiation sickness due to short-term exposure
500-1000 Detonation World War II nuclear bomb victims
3000 Acute Thyroid dose (due to iodine absorption) exclusion zone criteria for US nuclear reactor siting  (converted from 300 rem)
4500-5000 Acute LD50 in humans (from radiation poisoning with medical treatment.[13

உலக விஞ்ஞானிகளுக்கும், அரசுகளுக்கும் ஓர் வேண்டுகோள்!

1945 ஜூன் 11 ஆம் தேதி மன்ஹாட்டன் முதல் அணுகுண்டு திட்டத்தில் பணி செய்த நோபெல் பரிசு விஞ்ஞானி, ஜேம்ஸ் பிராங்க் (James Frank) தலைமையில் சிகாகோவின் பல விஞ்ஞானிகள் ஜப்பான் மீது போட விருக்கும் அணுகுண்டால் நேரப் போகும் கோர விளவுகளை முதலிலே தடுக்க முயற்சி செய்தனர்.  அணுகுண்டுக்குப் பதிலாக வேறு ஒரு குண்டைத் தயாரித்துப் போட, அந்த விஞ்ஞானிகள் அமெரிக்க யுத்தச் செயலாளருக்குக் (Secretary of War) கடிதம் எழுதினார்கள் !  இறுதியில் ஜப்பானில் அமெரிக்கா என்ன செய்தது என்று நாமெல்லாம் அறிவோம் !

1945 ஜூலை 17 ஆம் தேதி டாக்டர் லியோ ஸிலார்டு (Dr. Leo Szilard) தலைமையில் 63 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட ஓர் விண்ணப்பத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் (President Truman) அவர்களுக்கு அனுப்பினர்.  ஜப்பான் மீது அமெரிக்கப் போர்ப்படை போட விருக்கும் அணு ஆயுதங்களால் விளையப் போகும் கதிரியக்கப் பொழிவுகளின் கோர அழிவுகள் போர் ஒழுக்கத்திற்கு முற்றிலும் எதிரானவை என்று அழுத்தமாய் எழுதி யிருந்தார்கள் !  லியோ ஸிலார்டுதான் முதன் முதலில் அணுகுண்டு ஆக்க, அமெரிக்க ஜனாதிபதிக்குக் கடிதம் எழுத, ஐன்ஸ்டைனைத் தூண்டியவர் !

1955 ஆகஸ்டு 25 ஆம் தேதி பிரிட்டிஷ் விஞ்ஞானி, டாக்டர் ஜெ. பிரனோஸ்கி (Dr. J. Bronowski) அகில நாடுகளின் அமைதி நிலைநாட்டுப் பேரவையில் பேசும் போது, “எனது ஆணித்தரமான கொள்கை இது!  ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது தனித்துவ மனச்சாட்சியைப் பின்பற்ற வேண்டும். அது அவரது கடமை.  இதில் அரசாங்கத்தின் கடமை என்ன?  ஒரு விஞ்ஞானி தன் மனச்சாட்சிக்கு எதிராகப் பணி செய்ய மறுத்தால், அவரை அரசாங்கம் தண்டிக்கக் கூடாது!  விஞ்ஞானிகள் தமக்கு விருப்பம் இல்லா ஆராய்ச்சில் இறங்க மாட்டோம் என்று மறுத்தால் விட்டுவிடும் ஒரு சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் !” என்று பறை சாற்றினார்.

(கட்டுரை தொடரும்)

*****************************

தகவல் :

Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210273&format=html  (Robert Oppenheimer)

3 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203245&format=html (First Atomic Bombs Dropped on Japan)

3. (a) http://jayabarathan.wordpress.com/2009/08/06/dr-raja-ramanna-2/ (ராஜா ராமண்ணா இந்திய அணு ஆயுதச் சோதனை)

4. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes

5. Oppenheimer, By: James Kunetka

6. Hand Book of World War II, Abbeydale Press

7. The Deadly Element, By: Lennard Bickel

8. Canadian Nuclear Society Bulletin, June 1997

9.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

10.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

11.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

12.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads, By : David Biello (November 2007)

13.  The Dirty Bombs (Radiological Dispersion Bombs) MSN Broadcasting -Dirty Bombs Biggest Hazard : Panic Experts Say Radiation Would Play on Public Fears (June 10, 2002)

14.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

15.  Neutron Bombs – Wikipedia Report (December 15, 2009)

16 Wikipedia Report on Dr. Abdus Salam – http://en.wikipedia.org/wiki/Abdus_Salam (Dec 18, 2009)

17. Wikipedia Report on Abdul Qadeer Khan – http://en.wikipedia.org/wiki/Abdul_Qadeer_Khan (December 26, 2009)

18. Wikipedia Report on http://www.armscontrol.org/documents/sort Strategic Offensive Reductions Treaty (SORT) (May 24, 2002)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 31, 2009

அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள் -3

December 25, 2009

(கட்டுரை: 3)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
இப்போது தோன்றின
புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !
கதிரியக்கம் பொழியும்
புழுதிக் குண்டுகள் !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?

உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

“முஸ்லீம்களாகிய நாம் வல்லவராகவும், நம் நாடு மற்ற நாடுகளுக்கு இணையாகவும் இருக்க வேண்டும்.  அதனால்தான் சில நாடுகள் வல்லமையோடு இருக்க நான் உதவி செய்ய விரும்புகிறேன்,”

அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan, Maker of Pakistan Atomic Bomb)

“இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ, இலைகளைத் தின்றோ, பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்.”

ஸுல்ஃபிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) முன்னாள் பாகிஸ்தான் வெளிநாட்டு /பிரதம  அமைச்சர்.

“இப்போது நிகழ்ந்தது போல் (1945 இரண்டாம் உலகப் போர்) நீண்ட காலம் உலக நாடுகள் போரிடுமே யானால், ஒவ்வொரு தேசமும் தன்னைக் காத்துக் கொள்ளவே நவீன விஞ்ஞான ஆயுதங்களைப் படைக்கவோ அன்றிப் பயன்படுத்தவோ செய்யும் !  இந்தியா தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளை ஆரம்பித்து விருத்தி செய்ய முற்படும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை !  அணுசக்தியை இந்திய விஞ்ஞானிகள் ஆக்க வினைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.  ஆனால் இந்தியப் பாதுகாப்புக்குப் பங்கம் நேரும்படி, அது பயமுறுத்தப் பட்டால், தன்னிடம் இருக்கும் எல்லா விதமான ஆயுதங்களையும் இந்தியா தயங்காமல் பயன்படுத்தி எதிர்த்துப் போராடும் !”

பண்டிட் ஜவஹர்லால் நேரு (முதல் பிரதமர்) (1946 ஜூன் 26)

“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”

டாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)

பாகிஸ்தானின் முதல் அணு ஆயுதத் தயாரிப்புக்கு ஏற்பாடு

1948 இல் பண்டித நேரு அணுசக்தி ஆராய்ச்சிக்கு அடிகோலி, டாக்டர் ஹோமி பாபா அணுசக்திப் பேரவையின் தலைவராகி, மொம்பையில் அணு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவி 1954 ஆம் ஆண்டில் முதல் ஆராய்ச்சி அணு உலை சைரஸ் (CIRUS Research Reactor) கட்ட ஆரம்ப வேலைகள் நிகழ்ந்த போது, பாகிஸ்தான் தனது அணுசக்தி ஆணையகத்தை நிறுவியது.  அதன் தலைவர் நாஸீர் அஹமத் (Nazir Ahmad).  அவர் அதற்கு முன்பு நூலிழைத் தொழிற்குழு (Textile Committee) அதிபராகப் பணியாற்றியவர்.  1960 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணுவியல் ஆணையகத்தின் விஞ்ஞான ஆலோசகராக முக்கியப் பங்கேற்று டாக்டர் அப்துஸ் ஸலாம் (Dr. Abdus Salam) (1926 -1996) (Pakistani Theoretical Physicist, Astrophysicist and Nobel Laureate in Physics for his work in Electro-Weak Theory.) பணியாற்றினார்.  பின்னால் அவரது “வலுவிலா மின்னியல் நியதிக்கு” அவர் நோபெல் பரிசு (1979) அளிக்கப்பட்டார்.  டாக்டர் அப்துஸ் ஸலாமின் மாணவரான ரியாஸுத்தீன் (Riazuddin) என்பவரே 1977 ஆண்டில் முதல் அணு ஆயுதச் சாதனத்தின் அமைப்பு டிசைனைத் தயாரித்தவர்.  பாகிஸ்தானின் முதல் ஆராய்ச்சி அணு உலை 1965 ஆண்டில் இயங்க ஆரம்பித்தது.  பாகிஸ்தானின் முதல் அணுமின் சக்தி நிலையம் 1970 இல் பூரணம் அடைந்தது.

1965 பாகிஸ்தான் பாரதத்தோடு புரிந்த போரில் தோற்ற பிறகு பல பாகிஸ்தானி அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகளும் அரசாங்கம் அணு ஆயுதத் தயாரிப்பில் முழுமையாக இறங்க வேண்டும் என்று அழுத்தமாக வற்புறுத்தல் செய்தனர்.  அப்போது வெளிநாட்டு அமைச்சராக இருந்த ஸுல்ஃபிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) “இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ, இலைகளைத் தின்றோ, பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்.” என்று கூக்குரலிட்டார்.  1971 டிசம்பரில் இந்தியாவோடு நடந்த போரில் பெற்ற அடுத்த தோல்விக்குப் பிறகு புட்டு பாகிஸ்தான் பிரதம மந்திரியாக ஆக்கப் பட்டார்.  அந்த ஆதிக்க ஆணையில் ஜனவரி 1972 பிரதமர் புட்டு பாகிஸ்தான் விஞ்ஞானிகள் குழுவைக் கூட்டி அவருடன் உரையாடி அணு ஆயுதத் தயாரிப்புக்கு முதன்முதலாக விதையிட்டார்.

அணு ஆயுதத் தரமுள்ள அணுவியல் எருக்கள் தயாரிப்பு

முதல் பிரச்சனை. அணு ஆயுதத்துக்கு வேண்டிய மூல வெடி உலோகம் புளுடோனியம் -239 அல்லது அணு ஆயுதத் தரமுள்ள யுரேனியம்-235 (Weapon Grade Uranium -235) தயாரிப்பு.  புளுடோனியம் -239 என்பது யுரேனியம் -238 போல் இயற்கையாகக் கிடைக்கும் சாதாரண உலோகமில்லை.  இயல் யுரேனியத்தை (Natural Uranium) எரி உலோகமாய்ப் பயன்படுத்தும் அணு உலைகளைப் பல மாதங்கள் இயக்கிக் கிடைக்கும் கதிரியக்கக் கழிவு மிச்சத்தில் புளுடோனியம் -239 இரசாயன முறையில் பிரித்தெடுக்கப் பட வேண்டும்.  அது நீண்ட கால அணு உலை இயக்கம்.  முக்கியமாக புளுடோனியம் -239 எரி உலோகத்தை ஆக்க இயங்கும் அணு உலையும், கதிரியக்கக் கழிவுகளைக் கையாண்டு கடின முறையில் சிறிதளவு புளுடோனியத்தைப் பிரிக்கும் சிக்கலான ஓர் இரசாயனத் தொழிற்சாலையும் அமைக்க வேண்டும்.  நாளொன்றுக்கு ஒரு மெகா-வாட் சக்தியை ஓர் அணு உலை உற்பத்தி செய்தால் ஒரு கிராம் புளுடோனியம் -239 கிடைக்கும்.  அணு ஆயுதத் தரமுள்ள (> 93%) புளுடோனியம் -239 தயாரிக்கப் அணு உலையின் ஆற்றலைப் பொருத்துப் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம்.  இந்தியா ஆரம்பத்திலேயே கதிரியக்கக் கழிவுகளைச் சுத்தீகரித்துப் புளுடோனியத்தைப் பிரித்தெடுக்கும் அணுவியல் துறை நுணுக்கத்தில் பயிற்சிகள் செய்து பல்லாண்டு அனுபவம் பெற்றது.  ஆனால் பாகிஸ்தானில் அவ்விதம் புளுடோனியம் -239 எருவை அணுப்பிளவுக் கழிவுகளில் (Fission Product Wastes) சேகரித்துப் பயிற்சி பெறச் சில ஆண்டுகள் பிடித்தன.

அடுத்த கடினமான முறை அணு ஆயுதத் தரமுள்ள யுரேனியம் -235 உலோகத்தைச் சேகரிப்பது.  பூமியில் கிடைக்கும் இயல் யுரேனியத்தில் பெருமளவு யுரேனியம் -238 உலோகமும் மிகச் சிறிதளவு (0.714%) யுரேனியம் -235 உலோகமும் கலந்துள்ளன.  அணு ஆயுதத் தரமுள்ள எருவுக்கு (Weapon Grade Nuclear Fuel) சுத்தீகரித்துச் சேமிப்பான (> 90%) யுரேனியம் -235 தேவைப்படுகிறது !  அதாவது இயல் யுரேனியத்தைச் சுத்தீகரித்துப் பொடியாக்கிச் (Yellow Cake Powder UF6 ) சூடாக்கி வாயுவாக்க (UF6 Gas) வேண்டும்.  அந்த வாயு யுரேனியக் கலவைத் (Mixure of U-238 + U-235) திரும்பத் திரும்ப 1500 “சுழல்வீச்சு வடிகட்டி” யந்திரங்களில் (Separation By 1500 Centrifuge Machines) புகுத்தப்பட்டுப் படிப்படியாய் யுரேனியம் -235 திரட்டிச் சேமிக்கப் பட வேண்டும்.  முடிவில் யுரேனியம் ஆக்ஸைடாகி (UO2 Powder) அணு ஆயுதத் தரமுள்ள யுரேனியம் -235 உலோகமாகத் தயாரிக்கும் இந்த முறையும் அத்தனை எளிதில்லை.

பாகிஸ்தான் எப்படி அணு ஆயுதத் தரமுள்ள எருக்களைப் பெற்றது ?

பாகிஸ்தான் விஞ்ஞானிகள் முதலில் புளுடோனியம் -239 உலோகத்தைப் பிரான்ஸ் அடுத்து பெல்ஜியம் நாடுகளிடமிருந்து வாங்க முயற்சி செய்தார்கள்.  முதலில் விற்க ஒப்புக் கொண்ட பிரான்ஸ் அமெரிக்காவின் தூண்டுதலால் மனம் மாறிப் பின்வாங்கி விற்க மறுத்து விட்டது.  ஆனால் பெல்ஜியத்தில் மீள் சுத்தீகரிப்புத் தொழில் நுணுக்கப் (Fuel Reprocessing Technology) பயிற்சி பெறச் சில பாகிஸ்தான் பொறி நுணுக்க நிபுணர் சென்றனர். 1980 ஆண்டுகளில் அந்த அனுபவத்தை வைத்துப் பாகிஸ்தானில் புளுடோனியம் மீள் சுத்தீகரிப்பு முன்னோடித் தொழிற்கூடம் ஒன்றை நிறுவிட ஆரம்பித்தார்.  அந்தத் தொழிற்கூடம் 1998 இல் இயங்கத் தொடங்கி புளுடோனியம் பிரித்தெடுக்கப் பட்டு இரண்டு அல்லது நான்கு அணுக்குண்டுகள் தயாரிக்கும் ஆற்றல் பெற்றது.

நெதர்லாந்தில் அடுத்து ஒரு விஞ்ஞானக் குழு யுரேனியம் -235 செழிப்பாக்கும் தொழிற்துறை நுணுக்கத்தைப் (Uranium Enrichment Plant) பயில முயன்றது.  1975 இல் நெதர்லாந்து யுரேனியச் செழிப்புத் தொழிற்சாலையில் அப்போது வேலை பார்த்த வந்த பாகிஸ்தான் உலோகத் துறையியல் நிபுணர் (Metallurgist) அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan) பாகிஸ்தான் பயிற்சிக் குழுவோடு சேர்ந்தார்.  அவரே வெகு சாமர்த்தியமாக நெதர்லாந்தின் யுரேனியச் செழிப்பூட்டும் தொழிற்துறையகத்தின் இரகசிய டிசைன், கட்டமைப்பு விளக்கத் தகவல், யந்திர சாதனக் குறிப்புகள், வரை படங்கள், யந்திரங்கள் தயாரிக்கும் நாடுகளின் பெயர்கள் அனைத்தையும் களவாடி பாகிஸ்தானுக்குக் கொண்டு வந்து விட்டார்.  1979 ஆண்டு பாகிஸ்தானில் வெற்றிகரமாக நிறுவப் பட்டு இயங்கிய யுரேனியம் -235 செழிப்பூட்டும் தொழிற்கூடம் ஒன்று முதன்முதல் சிறிதளவு தயாரித்தது.  அந்த ஆண்டுமுதல் அத்தொழிற்சாலை 20 முதல் 40 அணுக்குண்டுகள் தயாரிக்கும் தகுதியைப் பெற்றது.

இந்திய அணு ஆயுதச் சோதனையில் புத்தர் புன்னகை செய்தாரா ?

“உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான்!” என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பார்த்திபனுக்கு ஓதிய ஒரு வேத மொழியை, நியூ மெக்ஸிகோ டிரினிடி (Trinity) பாலை வனத்தில் சரித்திரப் புகழ் பெற்ற முதல் சோதனை அணுகுண்டை 1945 ஜூலை 16 ஆம் தேதி வெடித்த போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer) உதாரணம் காட்டினார் !  அவர்தான் “ஓப்பி” (Oppie) என்று அழைக்கப்பட்டு அணுகுண்டு ஆக்கத் திட்டதுக்குத் தலைமை வகித்த ஒப்பற்ற விஞ்ஞான மேதை !  1964 அக்டோபர் 21 இல் சைனாவின் முதல் அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு, இந்திய அணுவியல்துறை அதிபர் டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார்!

1974 மே மாதம் 18 ஆம் தேதி இந்தியாவில் மாபெரும் ரயில்வே வேலை நிறுத்தம் உச்ச நிலையில் நாட்டை அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்த போது, விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா இந்தியப் பிரதம மந்திரி இந்திரா காந்திக்கு, “புத்தர் புன்னகை செய்கிறார்” (The Buddha is Smiling) என்னும் குறிமொழியில் (Code Language) ஓர் அவசரத் தந்தியை அனுப்பினார்!  அதன் உட்பொருள், பாரதம் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை ராஜஸ்தானின் பொக்ரான் பாலை வனத்தில் அடித்தள வெடிப்பாகச் செய்து வெற்றிகரமாக முடித்துள்ளது !  அந்த இனிய சொற்றொடர் அதன் பின் வந்த பல வெளியீடுகளின் தலைப்பாக எழுதப் பட்டு புகழ் பெற்றது !  இந்திய முதல் அணுகுண்டு சுமார் 8-12 கிலோ டன் டியென்டி (TNT) வெடிப்பு ஆற்றல் பெற்று, ஜப்பான் ஹிரோஷிமாவில் போட்ட முதல் அணு குண்டை விடச் சிறிதளவு ஆற்றல் குன்றியதாக இருந்தது !  அந்த அணு ஆயுதச் சோதனையை வெறும் “சாமாதான அணுகுண்டு வெடிப்பு” (Peaceful Nuclear Explosion) என்று இந்தியா பறை சாற்றினாலும், உலகில் எந்த நாடும் அதை ஏற்றுக் கொள்ள வில்லை ! அழிவு சக்தியின் தீவிரத்தைச் சோதிக்கப் பயன்படும் அணுகுண்டு எங்கே, எப்படி அமைதியைப் பரப்பிட முடியும் ?

இந்திய அணுகுண்டை ஆக்கிய அணுக்கரு ஆய்வுக் குழுவின் தலைமை விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா !  இரண்டாம் உலகப் போரின் சமயம் அணு ஆயுத மன்ஹாட்டன் திட்டத்தின் (Manhattan Project) விஞ்ஞான அதிபதியாய்ப் பணிசெய்து முதல் அணுகுண்டு படைத்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer), ரஷ்யாவின் முதல் அணு ஆயுதங்களைத் தோற்றுவித்த பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] ஆகியோர் வரிசையில், பாரதத்தின் அணுவியல் விஞ்ஞானி ராஜா ராமண்ணாவையும் அணு ஆயுதப் படைப்பு மேதையாய் நிற்க வைக்கலாம் !

இந்தியா அணு ஆயுத ஆக்கத்தில் இறங்கக் காரணங்கள் என்ன?

ஐந்து காரணங்களைக் கூறலாம்!  முதல் காரணம், 1962 இல் சைனா இந்தியாவுடன் போரிட்டு வடகிழக்குப் பகுதியில் சில பரப்பு மலைப் பிரதேசங்களைப் பிடுங்கிக் கொண்டு போனது!  இரண்டாவது, பிரதமர் நேரு 1964 மே 27 இல் காலமானது !  நேரு ஆக்க வினைகளுக்கு அணுசக்தி வளர வாய்ப்புக்களை ஏற்படுத்தினாலும், பாரதம் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதை அறவே எதிர்த்தார்.  மூன்றாவது காரணம், சைரஸ் அணு ஆராய்ச்சி உலை (CIRUS Research Reactor) 1960 முதல் இயங்க ஆரம்பித்து, அணு ஆயுத எரு புளுடோனியம் அணுப்பிளவுக் கழிவு விளைவுகளில் உண்டானது !  அடுத்து பிளவு விளைவுகளில் புளுடோனியத்தைப் (Plutonium in Fission Products) பிரித்தெடுக்கும் தொழிற்சாலை (Nuclear Spent Fuel Reprocessing Plant) ஓட ஆரம்பித்து, அணுகுண்டுக்கு வேண்டிய புளுடோனியம் திரளாகச் சேகரித்தது !  நான்காவது காரணம், சைனா 1964 அக்டோபர் 21 இல் தனது முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையைச் செய்து, அண்டை நாடான இந்தியாவின் நெஞ்சைத் துடிக்க வைத்தது !  ஐந்தாவது காரணம், அப்போது டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று (சைனா அணு ஆயுத வெடிப்பு) அணு ஆயுத சோதனை செய்ய முடியும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தது !

ஐந்து காரணங்களிலும் முக்கியமானது, ஐந்தாவது காரணம் !  டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால், இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று அணு ஆயுத சோதனைச் செய்ய முடியும்” என்று அரசாங்கத்தைத் தூண்டியது !  நேருவுக்குப் பின் வந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அணு ஆயுதத் தயாரிப்பை அவ்வளவாக வரவேற்க வில்லை.  1966 ஜனவரியில் அடுத்துப் பிரதமராய் வந்த இந்திரா காந்தி காலத்தில் ஹோமி பாபாவின் எண்ணம் தொடரப் பட்டிருக்கலாம்!  அதே சமயம் டாக்டர் ஹோமி பாபா அகால மரணம் அடைந்து, அடுத்து டாக்டர் விக்ரம் சாராபாய் அணுசக்தித் துறையின் அதிபர் ஆனார்.  சாராபாயும் அணு ஆயுத ஆக்கத்தை ஆதரிக்க வில்லை !  இறுதியில் அவரது மர்ம மரணத்திற்குப் (1971 டிசம்பர் 30) பின், ஹோமி சேத்னா அணுசக்தி ஆணையகத்துக்கு அதிபரானார்.  இந்திரா காந்தி, ஹோமி சேத்னா கண்காணிப்பின் கீழ், திறமை மிக்க அணுக்கரு பௌதிக (Nuclear Physicist) விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணாவின் நேரடிப் படைப்பில் இந்திய அணு ஆயுதங்கள் உருவாகின!

அணுக்குண்டு ஆக்குவதற்கு வேண்டிய புளுடோனியம், வேக நியூட்ரான் இயக்க (Fast Neutron Reactions) விளக்கங்களை அறிந்து கொள்வதற்குப் பூர்ணிமா-I (Purnima-I) ஆராய்ச்சி அணு உலை நிறுவப் பட்டு 1972 மே மாதம் 18 இல் இயங்க ஆரம்பித்தது !  இந்த அணு உலையின் எரு 43 பவுண்டு புளுடோனியம் -239 !  வெளிவரும் வெப்ப சக்தி 1 வாட் (watt).  ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலை [CIRUS] 40 மெகா வாட் & துருவா ஆய்வு அணு உலை [Duruva] 100 மெகா வாட் வெப்ப சக்தியும் உண்டாக்கி அணு ஆயுத எரு புளுடோனியத்தைத் தொடர்ந்து உற்பத்தி செய்கின்றன !  துருவா 1985 ஆகஸ்டு 8 இல் இயங்கத் துவங்கியது !  ஆய்வு அணு உலை நாளன்றுக்கு 1 மெகா வாட் (One Mega Watt for One Day) வெப்ப சக்தி ஈன்று இயங்கினால், பிளவு விளைவுகளில் (Fission Products) 1 கிராம் புளுடோனியம் -239 சேரும் !  100 மெகாவாட் ஆற்றல் உடைய துருவ அணு உலை ஒரு நாள் இயங்கினால் (100 mwd), 100 கிராம் புளுடோனியம் கிடைக்கும் !

அணு ஆயுதச் சோதனைகளைப் பற்றி ராமண்ணாவின் கருத்துக்கள்

“பொக்ரான் பாலை வனத்தில் 1998 மே மாதம் பாரதம் இரண்டாம் தடவை செய்த, ஐந்து அடித்தள அணு ஆயுதச் சோதனைகள் இந்திய துணைக் கண்டத்தின் பொருளாதாரம், சூழ்வெளி, பாதுகாப்பு, அரசியல், பொறியல் துறை போன்றவற்றை, ஏன் வாழ்க்கையைப் பற்றிய நமது எண்ணத்தைக் கூட மிகவும் பாதித்துள்ளது !  பல நாடுகள் இதற்கு முன் பல தடவைச் சோதனைகள் செய்து, உலகப் பெரு நகரங்கள் யாவற்றையும் அழிக்க வல்ல பேரளவில் அணு ஆயுதங்களைச் சேமித்து வைத்துள்ளன !

இந்த ஐந்து சோதனைகளால் உலக வல்லரசுகள் அதிர்ச்சி அடைந்து, அவை இந்தியாவுக்கு தீவிர எச்சரிக்கை விடுத்து, பயமுறுத்தியும் இருக்கின்றன !  இந்தியா நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்பு எழுந்து நிற்கும் தனிச் சுதந்திர நாடு.  இந்த நாள்வரை இந்தியா எந்த விதியையும் மீறியதும் இல்லை !  அகில நாட்டு உடன்படிக்கை எதையும் முறித்ததும் இல்லை !  உலக நாடுகள் தயாரித்த அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு உடன்படிக்கை (Non-Proliferation Treaty NPT), அணு ஆயுதத் தகர்ப்பு (Nuclear Disarmament) ஆகியவற்றில் இந்தியாவுக்கு நம்பிக்கை இருக்கிறது.

இந்த உடன்படிக்கையைத் தயாரித்த நாடுகள்தான் தமக்குச் சாதகமாகத், தமக்குப் பாதுகாப்பாக அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டும், அவற்றைச் சோதித்துக் கொண்டும் அதன் விதி முறைகளை முறித்துள்ளன!  இந்தியா ஒரு நாடு மட்டுந்தான் அம்மாதிரிச் செயல்களை எதிர்த்து நிமிர்ந்து நிற்கிறது !

பழைய வரலாற்றை நினைவில் வைத்திருப்பவர்கள், இப்போது ஐக்கிய நாடுகளின் பேரவை (United Nations Organization) ஒரு பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதை நன்கு அறிவர் !  அதை ஐம்பெரும் வல்லரசுகள் ஆட்டி படைத்து, ஆக்கிரமித்துக் கைப்பிடிக்குள் வைத்துள்ளன!  நல்வினைகள் புரிந்துள்ள அகில நாடுகளின் அணுசக்திப் பேரவையும் (International Atomic Energy Agency) இப்போது உலக நாடுகளின் அணுஉலை எருக்கள் உளவுகளைச் (Fissile Material Inspections) செய்வதிலும், அணுப்பிளவு எருக்கள் (Fissile Material Safeguards) பாதுகாப்பிலும் சிரமப் பட்டு வருகிறது !”

அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஏவுகணைத் திட்டம்

1983 இல் ஒருங்கிணைந்த கட்டளை ஏவுகணை வளர்ச்சித் திட்டம் (Integrated Guided Missile Development Program) உருவாகி, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் கட்டளை ஏவுகணைகள் விருத்தி செய்யப் பட்டன !  அத்திட்டப்படி, ஐந்து வித ஏவுகணைகள் இந்தியாவில் அமைக்கப் பட்டன!  சிறு தூர பிருதிவி (Short Range Prithvi), இடைத் தூர அக்னி (Intermediate Range Agni), தளத்திலிருந்து வானுக்குத் தாவும் ஆகாஷ் & திரிசூல் (Surface to Air Missiles, Akash & Trishul), கட்டளைப் பணியில் டாங்க்கைத் தாக்கும் நாகம் (The Guided Anti-Tank Nag).  முதல் ஏவுகணை பிருதிவி, அணு ஆயுத மாடல் குண்டைச் சுமந்து 1988 பிப்ரவரி 25 இல் ஏவப்பட்டு, சோதனை வெற்றி கரமாக முடிந்தது !

இந்திய ஏவுகணைத் திட்டத்தின் அமைப்பாளி (Architect of the Indian Missile Program) டாக்டர் அப்துல் கலாம் (2002 இல் இந்திய ஜனாதிபதி),  இந்தியப் பாதுகாப்பு, ஆய்வு வளர்ச்சி நிறுவகத்தின் (Indian Defence & Research Development Organization) தலைவர்.  அவர் கூறியது: “கட்டளை ஏவுகணை ஆயுத மயமாக்கல் (Weaponization) முழுமையாக முடிக்கப் பட்டது.  பிருதிவி, அக்னி ஆகிய ஏவுகணைகள் தூக்கிச் செல்ல இருக்கும் அணு ஆயுதப் போர்க் குண்டுகளின் (Nuclear Warheads) அளவு, எடை, தூண்டும் முறை, இயங்கும் ஒழுங்கு, அதிர்வுகள் (Performance, Vibrations) யாவும் சோதிக்கப் பட்டு விட்டன!”

1998 மே மாதம் பிரதமர் பாஜ்பாயி வெளிப்படையாகப் பறை சாற்றினார்: “இந்தியா இப்போது ஓர் அணு ஆயுத நாடு (Nuclear Weapon State) ! மனித இனத்தின் ஆறில் ஒரு பங்கான பாரத மக்களின் உரிமைக்குரிய ஆயுதங்கள்!  இவை யாவும் சுயப் பாதுகாப்புக்கு (Self Defence) மட்டுமே பயன்படும் ஆயுதங்களே தவிர முன்னடியாக யாரையும் தாக்குவதற்குப் பயன்படுத்தப் பட மாட்டா !”

இந்தியா பன்முகக் கலாச்சார நாடாக, பல்வேறு மதச் சார்பான தேசமாக, எண்ணற்ற இனங்களின் சங்கமமாக இருந்து, வகுப்புக் கலவரங்கள் அடிக்கடி எழும்போது கட்டுப்படுத்த இயலாத கூட்டரசினர் கைவசம் இருப்பதாலும், பாகிஸ்தான், சைனா போன்ற பகை நாடுகளுக்கு இடையே பாரதம் நெருக்கப் படுவதாலும் என்றாவது ஒருநாள், யாராவது ஒரு பிரதமர், எந்த நாட்டின் மீதாவது அணு ஆயுதத்தை வீசிக் கதிரியக்கப் பொழிவுகளை உலகில் பரப்பப் போகும் பயங்கரக் காலம் ஒருவேளை வரலாம் ! அந்த காட்டுப் பாதைக்குப் பாரதத்தில் சிவப்புக் கம்பளம் விரித்த விஞ்ஞானி, டாக்டர் ராஜா ராமண்ணா என்னும் ஓர் வன்மொழி வாசகம் கால வெள்ளம் அழிக்க முடியாதபடி, உலக வரலாற்றில் கல்வெட்டு போல் எழுதப்பட்டு விட்டது !

உலக விஞ்ஞானிகளுக்கும், அரசுகளுக்கும் ஓர் வேண்டுகோள்!

1955 ஆகஸ்டு 25 ஆம் தேதி பிரிட்டிஷ் விஞ்ஞானி, டாக்டர் ஜெ. பிரனோஸ்கி (Dr. J. Bronowski) அகில நாடுகளின் அமைதி நிலைநாட்டுப் பேரவையில் பேசும் போது, “எனது ஆணித்தரமான கொள்கை இது !  ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது தனித்துவ மனச்சாட்சியைப் பின்பற்ற வேண்டும். அது அவரது கடமை.  இதில் அரசாங்கத்தின் கடமை என்ன?  ஒரு விஞ்ஞானி தன் மனச்சாட்சிக்கு எதிராகப் பணி செய்ய மறுத்தால், அவரை அரசாங்கம் தண்டிக்கக் கூடாது!  விஞ்ஞானிகள் தமக்கு விருப்பம் இல்லா ஆராய்ச்சில் இறங்க மாட்டோம் என்று மறுத்தால் விட்டுவிடும் ஒரு சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் !” என்று பறை சாற்றினார்.

1957 மே மாதம் நோபெல் பரிசு விஞ்ஞானி லினஸ் பாலிங் (Linus Pauling) அமெரிக்க விஞ்ஞானிகளின் ஒரு கோரிக்கையில் உலக அரசுகளையும், நாட்டு மக்களையும் வலியுறுத்தி ஓர் உடன்படிக்கை மூலம், எல்லா அணு ஆயுதச் சோதனைகளையும் உடனே நிறுத்தும்படி விரைவு படுத்தினார். 1957 ஜூன் மாதத்திற்குள் 2000 அமெரிக்க விஞ்ஞானிகள் சேர்ந்து கையெழுத்திட்டு ஓர் விண்ணப்பத்தை ஜனாதிபதி ஐஸன்ஹோவருக்கு அனுப்பினார்கள்! “ஒவ்வோர் அணுகுண்டுச் சோதனையும் உலகின் எல்லா மூலை முடுக்கிலும் கதிரியக்கப் பொழிவுகளை அடுக்கிக் கொண்டே போகிறது!  அதிமாகும் ஒவ்வோர் அளவு கதிர்வீச்சும் மனித இனத்திற்கு ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்கிக் கொண்டே போகிறது!  முடிவில் அங்க ஈனமான குழந்தைகள் எதிர்காலத்தில் பிறந்து, அவர்களின் எண்ணிக்கை பெருகப் போகிறது!”

அத்தனைக் கூக்குரல் அறிவிப்புகள் உலக விஞ்ஞானிகளுக்கும், அரசாங்கத்திற்கும் முறையிடுவது என்ன ?  அழுத்தமான இந்த உபதேசம்தான் !  போதும் நிறுத்துவீர், அணு ஆயுதச் சோதனைகளை!  போதும் நிறுத்துவீர், அணு ஆயுத உற்பத்திகளை!  போதும் தகர்த்து ஒழிப்பீர், கைவசமுள்ள அணு ஆயுதக் குண்டுகளை !  உலக ஒலிம்பிக்கில் அணு ஆயுதப் பெருக்குப் பந்தயப் போட்டி இனிமேல் தொடரக் கூடாது.

(கட்டுரை தொடரும்)

*****************************

தகவல் :

Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210273&format=html  (Robert Oppenheimer)

3 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203245&format=html (First Atomic Bombs Dropped on Japan)

3. (a) http://jayabarathan.wordpress.com/2009/08/06/dr-raja-ramanna-2/ (ராஜா ராமண்ணா இந்திய அணு ஆயுதச் சோதனை)

4. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes

5. Oppenheimer, By: James Kunetka

6. Hand Book of World War II, Abbeydale Press

7. The Deadly Element, By: Lennard Bickel

8. Canadian Nuclear Society Bulletin, June 1997

9.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

10.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

11.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

12.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads (November 2007)

13.  The Dirty Bombs (Radiological Dispersion Bombs) MSN Broadcasting -Dirty Bombs Biggest Hazard : Panic Experts Say Radiation Would Play on Public Fears (June 10, 2002)

14.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

15.  Neutron Bombs – Wikipedia Report (December 15, 2009)

16 Wikipedia Report on Dr. Abdus Salam -http://en.wikipedia.org/wiki/Abdus_Salam (Dec 18, 2009)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 24, 2009

அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள் -2

December 17, 2009

(கட்டுரை: 2)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
இப்போது தோன்றின
புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !
கதிரியக்கம் பொழியும்
புழுதிக் குண்டுகள் !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?

உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

“ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் !”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

“எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது !  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் !  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

பெர்டிரண்டு ரஸ்ஸல் (ஏப்ரல் 16, 1955)


நியூட்ரான் கணைகள் தாக்கும் புதுயுக அணுக்குண்டுகள்

நியூட்ரான் குண்டு (Neutron Bomb) என்பது “மிகைப்பட்டக் கதிர்வீச்சுக் குண்டு” (Enhanced Radiation Weapon -ERW) என்று அழைக்கப்படுவது.  இந்த அணுவியல் குண்டு பெரும்பான்மையான எரிசக்தியை வெடிப்புச் சக்தியாக வெளிப்படுத்தாமல் சக்தி ஊட்டப் பட்ட நியூட்ரான் கணைகளாக ஏவுகிறது.  இம்முறையில் நியூட்ரான் குண்டு சாதாரண அணுக்குண்டு ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு வல்லமையே கொண்டுள்ளது.  வெடிப்பும், வெப்ப சக்தியும் முழுமையாகத் தவிர்க்கப் படாமல் மிகையான நியூட்ரான்களின் தீவிரம் உயிரினத் தாக்குதலாய் விளைந்து வீடுகள், மாட மாளிகைகள், பாலங்கங்கள், வாகனங்கள், கட்டடங்கள் எதுவும் தகர்க்கப்படா.  மேலும் நகரின் தொழில்வளத் துறைகள் (Infrastructure) எவையும் அழிக்கப்படா !

1958 இல் முதன்முதலாக அமெரிக்காதான் நியூட்ரான் குண்டுகளைத் தயாரித்தது !  நியூட்ரான் குண்டுகளின் பிதாவாகக் கருதப்படுபவர் :  லாரென்ஸ் லிவர்மோர் தேசீயச் சோதனைக் கூடத்தின் சாமுவேல் கோஹென் (Samuel Cohen – Lawrence Livermore National Laboratory) என்பவர்.  முதல் சோதனை நெவேடா பாலைவன அடித்தளத்தில் 1963 இல் நடத்தப்பட்டது.  1978 இல் ஜனாதிபதி ஜிம்மி கார்டருக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளால் மேற்கொண்டு நியூட்ரான் குண்டுகள் விருத்தியும் பெருக்கமும் நிறுத்தமாகி, பிறகு ஜனாதிபதி ரோனால்டு ரேகன் காலத்தில் மீண்டும் 1981 இல் தொடரப் பட்டன.

மூன்று விதமான ERW நியூட்ரான் குண்டுகளை அமெரிக்கா விருத்தி செய்தது.  அவை W66, W70 & W79 (Nuclear Warheads) என்னும் இராணுவக் குறி ஆயுதங்களாக அழைக்கப் பட்டன.  W66 ஆயுதங்கள் 1970 ஆண்டுகளின் மத்தியில் தயாரிக்கப்பட்டுப் பின்னர் ஓய்வாகி விட்டன.  W70 ஆயுதங்கள் சிறு தூரக் கட்டளை ஏவுகணைகளிலும் (Short-Range Missile System) W79 பீரங்கிக் குண்டுகளாகவும் (Artillary Shells) உபயோகமாயின.  அவை இரண்டும் ஜனாதிபதி மூத்த ஜார்ஜ் புஷ் காலத்தில் ரஷ்ய அமெரிக்க “ஊமைப் போர்” (Cold War) முடிவில் (1992) ஓய்வாகின.   இறுதி W70 ஆயுதம் 1996 ஆண்டிலும் & W79 ஆயுதம் 2003 ஆண்டிலும் முழுமையாக நீக்கம் அடைந்தன.

1980 இல் பிரான்ஸ் தனது முதல் நியூட்ரான் குண்டை பசிபிக் கடலில் உள்ள முரோரா அடோல் (Mururoa Atoll) தீவில் சோதித்தது !  1980 ஆண்டுகளில் பிரான்ஸ் மேலும் சில நியூட்ரான் குண்டுகளை ஆக்கியதாக அறியப் படுகிறது.  அதற்குப் பிறகு அவற்றை எல்லாம் பிரான்ஸ் முடக்கி முறித்ததாக கூறப்பட்டுள்ளது.  1999 இல் சைனா நியூட்ரான் குண்டுகள் ஆக்கும் திறனைப் பெற்றதாகத் தெரிகிறது.  1997 ஆம் ஆண்டில் நடந்த நேர்முக உரையாடலில் சாமுவேல் கோஹென் “ரஷ்யா, சைனா & இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஏராளமாக நியூட்ரான் குண்டுகள் அடுக்கை (Stockpile of Neutron Bombs) வைத்திருக்க வாய்ப்புள்ளன,” என்று கூறியிருக்கிறார்.

நியூட்ரான் குண்டு ஒருவித பிளவு-பிணைவுக் குண்டுதான் (Fission-Fusion Bomb).  அது ஒரு வெப்ப அணுக்கரு யுத்த ஆயுதமே (Thermonuclear Weapon) !  அதில் வெடித்து மிகையாகி மீறிப் பெருகும் நியூட்ரான்கள் வெளியேறித் தாக்கும்படி ஏவப்படுகின்றன.  நியூட்ரான் குண்டுக்கு ஏராளமான கொள்ளளவு (Volume) டிரிடியம் (ஹைடிரஜன் வாயுவின் ஏகமூலம்) (Tritium – An Isotope of Hydrogen Gas) தேவை.  டிரிடியத்தின் “அரை ஆயுள்” சுமார் 12 ஆண்டுகள் (Half-Life).  அதாவது டிரிடியத்தின் நிறை (Mass) 12 ஆண்டிகளில் பாதியாகத் தேயும்.  அதாவது அடிக்கடி நியூட்ரான் குண்டுகளில் மறையும் டிரிடியம் வாயு நிரப்பப் படவேண்டும்.

கதிரியக்கப் பொழிவுக் குண்டுகள் (புழுதிக் குண்டுகள்)

கதிரியக்கப் பொழிவுகளை வீசும் அணுவியல் குண்டுகள் புழுதிக் குண்டுகள் (Radioactive Dirty Bombs) OR (Radiological Dispersion Bombs) என்று பெயரிடப் பட்டுள்ளன.  இவ்வகை அணுவியல் குண்டுகள் சாதாரண ரசாயன வெடிகளைப் பயன்படுத்திக் கதிரியக்கப் பொழிவுகளைச் சிறிதளவு தரைமீது (200 சதுர மைல்) பரப்பச் செய்யும்.  புழுதிக் குண்டுகளில் பொதுவாக இருப்பவை : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137).  புழுதிக் குண்டுகள் வீரிய கதிரியக்கமுள்ள காமாக் கதிர்வீச்சைத் தளமெங்கும் பரப்பும்.  இந்தப் புழுதிக் குண்டுகளை எளிதாக யாரும் தயாரிக்க முடியும்.  தேவையானவை :  சாதாரண வெடி மருந்து அடுத்து கதிரியக்க உலோகம் ஏதாவது ஒன்று : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137).  இவற்றைக் காமாக் கதிர்ப் படங்கள் எடுக்கும் (Radio-graphy) தொழிற் கூடங்களில் அல்லது அணு உலைக் கூடங்களில் களவாட வேண்டும்.

2002 மே மாத அறிக்கை ஒன்றில் அகில நாட்டு அணுசக்தி ஆணையகம் (International Atomic Energy Agency -IAEA) வெளியிட்ட புகார்த் தகவல் இது :  ஆண்டுக்கு சராசரி 300 முறை கதிரியக்க உலோகங்கள் கணாமல் போன புகார்கள் ஆணையகத்துக்கு அனுப்பப் படுகின்றனவாம்.  மேலும் 1993 முதல் 2002 வரை IAEA பெற்ற புகார்கள் : 10 ஆண்டுகளில் காணாமல் போனக் கதிரியக்க உலோகங்கள் எண்ணிக்கை சுமார் 400 !  அமெரிக்காவில் மட்டும் 1986 முதல் 2002 வரை 15 ஆண்டுகளாக கதிரியக்க உலோகங்கள் காணாமல் போன 1700 நிகழ்ச்சிகள் நேர்ந்துள்ளன !  இவ்விதம் உலகில் பல நாடுகளில் கதிரியக்கக் களவுப் புகார்கள் குவிந்துள்ளன.

1.  1995 இல் ரஷ்யாவில் செச்சென் தீவிரவாதிகள் களவாடிய 30 பவுண்டு சீஸியம்-137 & டைனமைட் வெடி மருந்து.

2.  1987 இல் ஈராக் ஒரு டன் புழுதிக் குண்டை வெடித்துச் சோதனை செய்தது.

3.  1987 இல் பிரேஸில் 20 கிராம் சீஸியம்-137 யைக் களவாடி வெடிப்பு ஆற்றலைக் காட்டியது.  அந்த சோதனையில் நால்வர் மரித்தனர்.  249 நபர் கதிர்த்தீட்டை (Radioactive Contamination) அடைந்தனர்.

அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம் !

“உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான் !” என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer] கூறினார்.  அவர்தான் அணுகுண்டின் பிதா ! யுத்த சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ்  இணைத்து, ஆணையிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு ஆயுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி! ஒப்பற்ற விஞ்ஞான வல்லுநர், ஓப்பன்ஹைமர்! அணுகுண்டு புதுயுக மரண யந்திரம் ! வெடிக்  கோளம் ! விஷக் கோளம்! கதிர்க் கோளம் ! கனல் கோளம் ! ஒளிக் கோளம் ! அழிவுக் கோளம் ! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கி மடிவது பாமர மக்கள்! அணுகுண்டு வெடிப்பின் விளைவு, முடிவற்றுத் தொடரும் மரணக் கோலம் !’

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் 1945 ஆகஸ்டு 6, அடுத்து 9 ஆம் தேதிகளில் ஜப்பானில்  உள்ள ஹிரோஷிமா, நாகசாகியில் முதன் முதல் அமெரிக்கா தீவிரச் சக்தி பெற்ற அணு ஆயுதக் குண்டுகளைப் போட்டு, யுத்த அழிவுச் சரித்திரத்தில் ஒரு மாபெரும் புரட்சியை உண்டாக்கியது! ‘எநோலா  கே’ [Enola Gay] என்னும் B-29 வெடி விமானத்திலிருந்து, காலை 9:14 மணிக்கு ‘லிட்டில் பாய்’ [Little  Boy] என்னும் யுரேனியக் குண்டு [Uranium -235] ஹிரோஷிமாவை நோக்கி விழுந்தது. பத்தரை அடி  நீளமும், இரண்டரை அடி விட்டமுடன், 9700 பவுண்டு எடையுள்ள 15 கிலோ டன் TNT வெடிச்சக்தி கொண்ட அணுக்குண்டு 2000 அடி உயரத்தில் ஹிரோஷிமா நகரின் மையத்திலே வெடித்தது! சில  நிமிடங்கள் கழித்து, பரிதிபோல் ஒரு பேரொளிச் சிவப்புக் கோளம் பொங்கி எழுந்தது! அதைத் தொடர்ந்து  பயங்கர வெடிச் சத்தம் வானைப் பிளந்து, ஒரு பிரளயமே உண்டானது! பதினொன்று மைல் தூரத்தில்  திரும்பிச் சென்ற எநோலா கே வால் புறத்தை வெடி அதிர்ச்சி அலைகள் தாக்கி விமானத்தை  ஆட்டியதாம்! நூறு மைல் தூரம் சென்ற பின்னும், கோள முகில் விமானியின் கண்களுக்குத்  தெரிந்ததாம்! பிரம்மாண்டமான முகில் காளான் [Mushroom Cloud] தோற்றத்தில் பொங்கிக் குமுறி எழும்  புகை மண்டலம்! நடுவே சிவப்பு நிறக் கோளம்! கோளத்தின் உட்கருவில் பொருட்கள் எரியும் கோரமான  அனல் பிழம்பு! எங்கெங்கு பார்க்கினும், குவியல் குவியலாய்த் தீப்பற்றி அழிக்கும் கோரக் காட்சிகள்!

ஹிரோஷிமாவில் மட்டும் 160,000 பேர் உயிர் இழந்தனர்! அதில் 60,000 பேர் பயங்கரமாகத் தீப்பற்றி  எரிந்து கரிந்து போயினர். 130,000 பேர் காய முற்றனர். இதில் 43,500 பேர் படு காயப் பட்டனர். குண்டு  வெடிப்புக்குப் பிறகு ஐந்து வருட மரண எண்ணிக்கை மொத்தம் 200,000 ஆக ஏறியது. மரணக்  கணக்குப்படி, இரண்டு நகரிலும் 20%-30% அனல் வீச்சில் மாண்டனர். 50%-60% மற்ற அபாயத்தால்  செத்தனர். 15%-20% கதிரியக்க நோயால் காலமானார்கள். நான்கு சதுர மைல் பரப்பில் 68% நகரக்  கட்டிடங்கள் மற்றும் 24% பகுதிகள் சில நிமிடங்களில் தூள் தூளாகித் தரை மட்டமாயின!  எண்ணிக்கையில் 70,000 கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன! நகர மாளிகை, தீயணைப்பு நிலையம்,  போலீஸ் நிலையம், தபால் நிலையம், ரயில்வே நிலையம், பள்ளிக் கூடங்கள், மருத்துவக் கூடங்கள்,  தெரு மின்சார வண்டிகள், மின்சக்தி நிலையங்கள் முழுவதும் தரை மட்டமாயின! 13,000 அடித்  தொலைவில் இருந்த தொலை பேசிக் கம்பங்கள் கரிந்து போயின! நகரின் மருத்துவ டாக்டர்கள் 200  பேர் [90%] செத்து மாண்டனர்; அல்லது முடமாகிப் போயினர்! நகரில் இருந்த 1780 நர்ஸ்களில் 1654  பேர் கொல்லப் பட்டார்கள்: அல்லது காய மடைந்தார்கள். இருந்த 45 ஆஸ்பத்திரிகளில் 44  முழுமையாகவோ, அன்றிப் பகுதியாகவோ தகர்க்கப் பட்டன.

‘ஃபாட் மான்’ [Fat Man] என்னும் 22 கிலோ டன் TNT அழிவுச் சக்தி கொண்ட புளுட்டோனியக் குண்டு [Plutonium239] நாகசக்கியில் விழுந்து, 1945 ஆண்டு முடிவு எண்ணிக்கைப்படி 70,000 பேர் செத்து  மடிந்தார்கள்! 33% நகரப் பகுதி தரை மட்டமானது!  வெடி அதிர்விலும், வெடிப்பு அலையிலும், வெப்பக் கனலிலும் அழிந்தவர் போக, மற்றும் ஊடுருவிப் பாய்ந்த அணுக் கதிரியக்கம் தாக்கிப் பல்லாயிரம் பேர் பட்ட தொடர் வேதனைதான் எல்லாவற்றிலும்  மிக முக்கியமானது! மூர்க்கமானது! முடிவில்லாதது! ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில் வெடியும், வெப்பக் கனலும் தாக்காமல் கடவுள் புண்ணியத்தில் தப்பியவர்கள், கடைசியில் கதிரியக்கம்  தாக்கப்பட்டு, ‘கதிர் எமன்’ கையில் மெதுவாகச் செத்து மடிந்தார்கள்!

ஜப்பானுக்குச் சென்று ‘அமெரிக்க வெடிவீச்சுத் திட்டப் பதிவுக்குழு’ [The United States Strategic Bombing Survey Team] 1946 ஜூன் 30 இல் வெளியிட்ட, ‘ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணுகுண்டுகளின் விளைவுகள்’ [The Effects of Atomic Bombs on Hiroshima & Nagasaki] என்னும் தகவல் கூறுகிறது:  முக்கியமான விளைவு ஒரே சமயத்தில் நிகழும் மித மிஞ்சிய மரண எண்ணிக்கை! அடுத்து மூன்று வித உருவில் அணு ஆயுதம் பேரழிவுச் சக்தியாய் கோரக் கொலை புரிகிறது! முதலில் அளவற்ற வெப்பம்! இரண்டாவது பயங்கர வெடிப்பு அல்லது வாயு அழுத்தம்! மூன்றாவது தீவிரக் கதிரியக்கம்! பாதிக்கப் பட்டவர்களில் (20-30)% தீக்காய மரணங்கள்! அதிர்ச்சி, வெடிப்பு, வேறு விதங்களில் (50-60)% மரணங்கள்! மற்றும் (15-20)% கதிரியக்கக் காய்ச்சலில் பாதிப்பு [Radiation Sickness]! மூன்றிலும் மிக மிகக் கொடியது, கதிரியக்கத் தாக்குதல்! கதிரியக்கம் நொடிப் பொழுதில் சித்திரவதை செய்து மக்களைக் கொல்வதோடு, தொடர்ந்து உயிர் பிழைத்தோரையும், அவரது சந்ததிகளையும் வாழையடி வாழையாகப் பல்லாண்டுகள் [Acute (Lethal) & Long Term Effects] பாதித்துக் கொண்டே இருக்கும்! பிறக்கும் குழந்தைகள் கண்கள் குருடாகி, கால்கள் முடமாகி, கைகள் சிறிதாகி அங்க ஈனமாய் பிறக்கும்! மேலும் பலவிதப் புற்று நோய்கள் தாக்கி மக்கள் மரண எண்ணிக்கை அதிகமாகும்!

மாபெரும் நகரம், நிமிடத்தில் மானிட நரகம் ஆனது !

குண்டு வெடித்தபின் உஷ்ணம் 1 மில்லியன் ஏறும் என்றும், ஒளித் தீக்கோளம் 800 அடி விட்டம்  விரியும் என்றும், ‘முகில் காளான்’ [Mushroom Cloud] 9 மைல் மேலே உயரும் என்றும், பின்பு  உஷ்ணம் 15,000 F ஆகக் குறையும் என்றும், அணுகுண்டு விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.  வெடிமையத்தைச் [Hypocenter] சுற்றி 2 மைல் ஆரச் சுற்றளவில் உஷ்ணம் 5400 F ஆகித் தீயில்  எரிந்து கூடான மனிதரும், தீப்புண்களில் கரிந்து போனவர்களும் பலர்! வெடி அலைகள் வினாடிக்கு 2 மைல் வேகத்தில் அடித்து மனிதர்களைக் குப்புறத் தள்ளியது! மானிடரின் முகம் தீய்ந்து கருத்து, தலை மயிர் யாவும் எரிந்து பலர் புத்த பிச்சுக்கள் போல் காணப் பட்டனர்! அவர்கள் மேனியில் தோலுரிந்து,  கரும் பிசாசுகள் நகர்ந்து செல்வது போல் நடமாடி, பாதையில் செத்துக் கிடந்தார்கள்!

பாடிப் பறந்து கொண்டிருந்த பறவை இனங்கள் அந்தரத்திலே எரிந்து சாம்பலாயின! ஓடிய அணில்கள்,  வீட்டுப் பூனைகள், நாய்கள் மாயமாய் மறைந்து போயின! நகர் முழுவதும் ஒளி மயத்தில் பளிச் சென்று  ஒளிர்ந்து, தீக்கோளம் எழுப்பி அணு ஆயுத மரண யந்திரம் வினை விதைத்தது போல் தோன்றியது!  மரங்கள் யாவும் எரிந்து பாலை வனக் கரும் நிழற் படங்களாய் நின்றன! தொலைபேசி, மின்சாரக்  கம்பங்கள் யாவும் கரிந்து வளைந்து போயின! காணும் இடமெல்லாம் மயானக் காடுகள் போல் எரியும்,  மாண்டு மடிந்த மனிதச் சடலங்கள் கணக்கில் அடங்கா!

விமானத்தையும், ஒளிக் கோளத்தையும் உற்று நோக்கியோர் கண்கள் அவிந்து போய்க் குருடாயின!  ஒரு குமரிப் பெண் கூறினாள், ‘ஒரு பெரும் சுத்தியலால் அடிபட்டு, அதிர்ச்சி அடைந்து, கொதிக்கும்  எண்ணையில் தள்ளப் பட்டது போல் உணர்ந்தேன்! எங்கேயோ தூக்கி எறியப்பட்டு திசை யெல்லாம் மாறிப் போனதாய்த் திக்கு முக்காடினேன்!’ ஒரு இளம் பெண்ணின் அவலக் குரல் கேட்டது. அவள்  முதுகு பூராவும் எரிந்து, கூனிப் போய்க் கதறிக் கொண்டிருந்தாள். உதவி ஆட்கள் அவளுடைய தாயைத் தூக்கிக் கொண்டு வந்தனர். தாயின் முகமும், உதடுகளும் வீங்கிப் போய், கண்கள் மூடியபடி இருந்தன!  இரு கைகளிலும் தோல்கள் உரிந்து, ரப்பர் கையுறை போல் தொங்கின! அவள் இடுப்புக்கு மேல் உடம்பில் எல்லா இடங்களும் கோரமாய் எரிந்து போயிருந்தன!

மனிதர்களின் உடம்பு பூதம்போல் பயங்கரமாய் வீங்கிப் போயிருந்தது! ஒரு மனிதன் கண்ணில் ஈட்டி போல் ஏதோ குத்தி, உதிரம் கொட்டி அலறிய வண்ணம் குருடனாய் அங்கு மிங்கும் ஓடிக்  கொண்டிருந்தான்! எரியும் உடம்போடு ஓடி வந்து, ஒருவன் குளத்தில் குதித்தான்! குளத்தின் நீர் சூடாக  இருந்தது. ஏற்கனவே, அந்தக் குளத்தில் எரிந்து போன சடலங்கள் பல மிதந்து கொண்டிருந்தன!  அனலில் கரிந்த மாது ஒருத்தி,  எரிந்த கைப் பிள்ளையை இறுகக் கட்டிய வண்ணம் சாய்ந்து செத்துக் கிடந்தாள்!  ஒரு மின்சார வண்டி எரிந்து போய் வெறும் கூடாரம் போல் நின்று கொண்டிருந்தது! உள்ளிருந்த  மாந்தர் அத்தனை பேரும் உருவம் தெரியாமல் கரிக் கூடுகளாய் உயிரற்றுக் கிடந்தனர்! ஓரிடத்தில்,  கரிந்து போன தாய் முலைக் காம்பிலிருந்து, பால் பருகக் குழந்தை வாய் வைத்துக் கொண்டிருந்தது!  அணு ஆயுதம் ஹிரோஷிமாவில் நடத்திய அவல நாடகக் காட்சிகள் எல்லாவற்றையும் எழுத இங்கே  இடம் போதாது!

வெடி விளைவை நேரில் கண்ட இரு ஜப்பானியரின் நிஜக் கதை!

Dr. மிச்சிஹிகோ ஹசியா [Dr. Michihiko Hachiya]: ‘பொழுது புலர்ந்து எழிலுடன் இலைகள் சலசலக்க,  காலை இளம் பரிதி முகிலற்ற கீழ் வானில் மெதுவாய் எழுந்தது. மருத்துவக் கூடத்திற்குப் போக உடை அணிந்து கொண்டு புறப்படும் சமயம், யுத்த அபாயச் சங்கு ஊதியது! பறக்கும் விமானச் சத்தம்  கேட்டது. திடாரென மாபெரும் மின்னல் ஒளிமயம் வெட்டிக் கண்ணொளியைப் பறித்தது! அடுத்து ஓர்  பேரொளி! தோட்டத்தில் இருந்த லாந்தல் உலோக விளக்கு என்று மில்லாத பிரகாசத்தில் ஓளிர்ந்தது!  வெளிச்ச மயமாய் இருந்த வானத்தில் விரைவில் இருள் கவ்வியது. சட்டென அருகில் நின்ற தூண்  ஒன்று சாய்ந்து, வீட்டுக் கூரை சரிந்து அபாய நிலையில் தொய்ந்தது! வீட்டிலிருந்து தப்பி ஓட முயலும்  போது, மரக் கம்பங்களும், இடிந்த கட்டிடக் குப்பைகளும் வீதியில் நிறைந்து, பாதையில் தடையாயின!  எப்படியோ தாண்டிப் போய் தோட்டத்தினுள் நுழைந்தேன். ஏதோ தாங்க முடியாத ஓர் பெருங் களைப்பு  என்னை ஆட்கொண்டது! திடீரென நான் அமணமாய்ப் போனது எனக்குத் தெரிந்தது! என் கோட்டும்,  சூட்டும் என்ன வாயின ? என்ன நடந்து கொண்டிருக்கிறது ? என்னுடலின் வலது புறம் யாவும் வெட்டுப் பட்டு, உதிரம் பீரிட்டது! கூரிய ஒரு நீண்ட இரும்பு ஆணி என் தொடையைக் குத்தி வலியை உண்டாக்கியது! என் கன்னம் கிழிந்து வாயில் இரத்தக் குளமானது! கழுத்தில் குத்திய ஓர் உடைந்த  கண்ணாடி பீங்கானைக் கையால் எடுக்க, மேனி முழுதும் இரத்தக் குளிப்பில் நான் நடுங்கினேன்! முதல் அணு குண்டால் தாக்கப் பட்ட இந்த டாக்டர்தான், தன் காயத்துடன் காயம் பட்ட நூற்றுக் கணக்கான ஜப்பானியர்களுக்குச் சிகிட்சை செய்திருக்கிறார்!

சுடோமு யமகூச்சி [Tsutomu Yamaguchi]: திடாரென மெக்னீஷியம் தீப்பிழம்பு போல் ஓர் ஒளிமயமான மின்னல் வெட்டியது! தொடர்ந்தது ஒரு பேரிடிச் சத்தம்! பூமிக்கு மேல் 2 அடி தூக்கப் பட்டேன்! அடுத்து  பயங்கரக் காற்று என் மீது வீசிச் சென்றது. பேயடித்தது போல் வீதியில் எவ்வளவு நேரம் கிடந்தேன்  என்று எனக்கே தெரியாது! எழுந்த போது, இருள் சூழ்ந்து, கண்ணுக்கு எதுவும் தென் படவில்லை.  வெக்கை யுள்ள பட்டப் பகல் திடாரென நள்ளிராப் பொழுது போல் ஆனது. என் கண்கள் இருட்டுக்கு  இணங்கிப் போனபின், தூசிக் குப்பைகள் தொடர்ந்து வேகமாய் வீசின! தூசி குறைந்த பின், சூழ்வெளி  தெரிந்தது. எங்கெங்கு நோக்கினும், உடைந்த பொருட்களின் குவியல்! எரியும் தீமயம்! நகர்ப் புறம்  பார்த்தால், பிரம்மாண்டமான ஒரு ராட்சதக் காளான் [Mushroom] தோற்றத்தில் வானுயர்ந்த முகில் பூதம்! அந்த முகில் கோளம் பார்ப்பதற்கு பயமூட்டும் ஒரு பேயுருத் தூணாகத் தோன்றியது! அது சுற்றியுள்ள எல்லா பொருட்களின் நிறத்தையும் மாற்றிக் கொண்டே இருந்தது. மிக்க வலுவில்லாமல், முகத்திலும் கையிலும் பற்றிய நெருப்புடன், தீராத வேதனையோடு அருகே இருந்த உருளைக் கிழங்கு  வயலை நோக்கித் தடுமாறிக் கொண்டு சென்றேன். சில சமயம் என்னால் ஊர்ந்து செல்லத்தான்  முடிந்தது! பிறகு எனக்குப் பயங்கரத் தாகம் உண்டானது. எதிரே ஐந்து வாலிபப் பையன்கள்  அமணமாகக் கிழிந்த துணிகளுடன் இருந்தனர். அருகில் வந்ததும் அவர்கள் யாவரும் வெளுத்துப்  போய், நடுங்கிக் கொண்டிருந்தார்கள். நான் இத்தகையக் கோரக் காட்சியை இதுவரைக் கண்டதில்லை!  மேனி எங்கும் வெட்டுக் காயத்தால் உதிரம் ஆறாக ஓடிக் கொண்டி ருந்தது! கொதிக்கும் எண்ணெயில் வெந்தது போல் சிவந்து, தோலுரிந்து வேர்வை சொட்டச் சொட்ட வேதனையில் துடித்துக்  கொண்டிருந்தார்கள்! வெடி அதிர்வால் தீய்ந்த புண்களில் பச்சைப் புல் கொத்தாய் ஒட்டிக்  கொண்டிருந்தது. முதுகில் எல்லா இடங்களிலும் சாட்டையால் அடித்தபோல் காயங்கள்!

உயிர் பிழைத்தோர் பெற்ற கதிரியக்க நோய்கள்

உயிர் தப்பியவர்கள் பலர் புதுவிதக் கதிர் நோய்கள் [Radiation Sickness] தம்மைத் தாக்குவதை  உணர்ந்தார்கள். தலைச்சுற்று, மயக்கம், வயிற்று வலி, வாந்தி, பசியில்லாமை, வயிற்றாலை, மலத்தில்  இரத்தம், கடுஞ் சுரம், வலுவின்மை, தோலில் சிவப்புப் பொட்டுகள், மேனியில் வீக்கம், வாய் கழுத்து பல்லணை [Gum] இவற்றில் அல்ஸர், இரத்தக் கசிவு, மலத் துவாரம், சிறுநீர்த் துவரங்களில் இரத்தக் கசிவு, தலை மயிர் உதிர்ப்பு போன்ற உடற் பழுது அறிகுறிகள் தோன்றி, நோய் வருகையை முன்னறி  வித்தன! மிகையான கதிரடி [Radiation Dose] வாங்கியோர் உதிரத்தில், வெள்ளை செல் [White Blood  Cells] எண்ணிக்கை, மிகக் கீழாக குறைந்தது! அதிகமான ‘மரண அடிக்’ [Lethal Dose] கதிரியக்கம் தாக்கப் பட்டோர் சில மணி நேரத்தில், அல்லது சில நாட்களுக்குள் செத்து மடிந்தனர். மரண அடிக்கும் குறைந்த அளவு கதிரடி பட்டோர், சிறுகச் சிறுகச் சாவை அண்டி வந்தனர்.

வெடிப்பிளவின் நேரடிக் காமாக் கதிரடி [Direct Gamma Radiation] பட்டோர், பட்ட இடத்தில் தசைகள்  சமைக்கப்பட்டு ஆறாத கதிர்ப் புண்களாகி வேதனையில் துடித்தனர். இவ்விதத் தாக்குதலால், இறுதியில்  ஆழமான தசை அழிவு ஏற்பட்டு, மாபெரும் இரத்தக் கசிவு [Hemorrhage] தொடர்ந்து, அவர்கள் யாவரும் மரணத்தைப் போய்த் தழுவிக் கொண்டார்கள்!  போர் முடிந்த பின்பு, ஹிரோஷிமா, நாகசாகியில் தப்பினோர்களின் மார்பு எக்ஸ்ரேயைச் சோதித்த போது, ஆயிரக் கணக்கான பேர் புற்றுநோயிலும் [Cancer], லுக்கீமியாவிலும் [Leukemia], முலைப்  புற்றுநோயிலும் சாகப் போகி றார்கள் என்று அறியப் பட்டது. டாக்டர் நார்மன் கென்ட்நர் [Dr. Norman  Gentner, Senior Scientist, Health and Environmental Sciences, Atomic Energy of Canada Ltd] விஞ்ஞானி  வெளியிட்ட 1997 கணக்கிதழ் அறிக்கைப்படி, இரண்டு நகரிலும் மொத்தம் 15405 பேர் [1950-1990] புற்றுநோயில் செத்திருக்கிறார்கள். லுக்கீமியாவில் இறந்தவர் எண்ணிகை இதுவரை 249 பேர்.  புற்றுநோய் மரணங்கள் இன்னும் பல்லாண்டுகள் தொடரும்!

கதிரடிக் காயம் [Radiation Injury] பெறும் கர்ப்பிணிப் பெண்களின் கருவைக் காமாக் கதிர்கள் பாதித்துப்  பெருமளவில் முரண்பாடுகளை உண்டு பண்ணுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணு ஆயுதக் கதிரியக்கம் தாக்கிய கர்ப்பிணிப் பெண்கள் பெற்ற பிள்ளைகள், நரம்பு அமைப்பாட்டில் பழுதுகள் ஏற்பட்டு, சிறிய தலைவுடன் மூளை சிறுத்துப் போய், கண்கள் குறுகி வளர்ச்சி அடையாது, அங்க ஈனமுடன், மனக் கோளாறுகள் [Mental Retardation] நிரம்பிப் பிறந்ததாக அறியப்படுகிறது!



உலக அணு ஆயுத வல்லரசுகளுக்கு ஓர் வேண்டுகோள்!

அணுகுண்டு ஆயிரம், ஆயிரம் உயிர் இனங்களைத் தாக்கிச் சித்திரவதை செய்து அழிக்கும் ஓர் அபாய ஆயுதம்!  அதன் கோரக் கொடுமைகள் தப்பியோரையும், தப்பினோர் சந்ததிகளையும் விடாது பற்றிக் கொண்டு, பல்லாண்டு காலம் நிழல் போலத் தொடர்ந்து பாதிப்பவை! ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, 1955 ஏப்ரல் மாதம் பிரிட்டிஷ் மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல்  [Bertrand Russell] தயாரித்த ‘அணு ஆயுதப் போர்த் தடுப்பு’ விண்ணப்பத்தில் தானும் கையெழுத்திட்டு மற்ற உலக விஞ்ஞானிகளோடு சேர்ந்து கொண்டு ஒன்றாகக் குரல் எழுப்பினார்! ‘எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ  முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகிறது !  அதை அகில நாடுகள் உணர  வேண்டும் !  பிறகு அபாயங்களை அனைவரும் அறிய வெளிப்படுத்த வேண்டும்! அப்பணியை உடனே  செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை விரைவு படுத்துகிறோம். நாடுகளின் தீராச் சச்சரவுகள் உலகப்  போர்களால் ஒருபோதும் தீரப் போவதில்லை! தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள,  வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்’. அணு ஆயுத வல்லரசுகளே ! உங்கள் அறிவுக் கண்கள் திறக்கட்டும் ! ஜப்பானில் முதன் முதல் போட்ட  அணுகுண்டுகளே, உலகின் இறுதியான அணுகுண்டுகளாக இருக்கட்டும்!

(கட்டுரை தொடரும்)

*****************************

தகவல் :

Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210273&format=html  (Robert Oppenheimer)

3 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203245&format=html (First Atomic Bombs Dropped on Japan)

4. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes

5. Oppenheimer, By: James Kunetka

6. Hand Book of World War II, Abbeydale Press

7. The Deadly Element, By: Lennard Bickel

8. Canadian Nuclear Society Bulletin, June 1997

9.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

10.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

11.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

12.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads (November 2007)

13.  The Dirty Bombs (Radiological Dispersion Bombs) MSN Broadcasting -Dirty Bombs Biggest Hazard : Panic Experts Say Radiation Would Play on Public Fears (June 10, 2002)

14.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

15.  Neutron Bombs – Wikipedia Report (December 15, 2009)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 16, 2009

அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள் -1

December 10, 2009

(கட்டுரை: 1)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?

உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

“ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் !”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

“எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது !  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் !  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

பெர்டிரண்டு ரஸ்ஸல் (ஏப்ரல் 16, 1955)

அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த உலக விஞ்ஞானிகள் !

அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடையாகவோ அன்றி மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஐந்து விஞ்ஞான மேதைகள்! முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி! அடுத்து செயற்கைக் கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி! அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] புரிந்த என்ரிகோ ஃபெரிமி! இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும் முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்! முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப் பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் !

ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டுகள் விழுந்து கோர விளைவுகள் நிகழ்ந்த பின் உலகின் வல்லரசுகளும், மெல்லரசுகளும் உடனே அணு ஆயுதங்களை ரகசியமாய் உற்பத்தி செய்ய முற்பட்டன ! 1945 இல் அமெரிக்கா ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைச் சோதித்தது ! அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல் பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன !  இப்போது இஸ்ரேல், வட கொரியா ஈரான் ஆகிய நாடுகளும் அணு ஆயுத வல்லமை பெற்றுக் கொண்டு உலகைப் பயமுறுத்தி வருகின்றன ! உலக நாடுகளில் 115 தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty, NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன! ஆனால் அர்ஜென்டைனா, பிரேஸில், சைனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பல நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பில் கையெழுத்திட ஒருங்கே மறுத்து விட்டன !

அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஐன்ஸ்டைன்

இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்கும்படி 1939 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதி அனுப்பியவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்!  அதுமுதல் அணு ஆயுத அரக்கன் உலகில் தோன்றி அவன் வமிசாவளி பெருகிக் கொண்டே போகிறது!  அணுசக்தி யுகத்தைத் துவக்கி, உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன் அணுகுண்டுகளின் பெருக்கத்தையும், அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளின் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்.

ஐன்ஸ்டைன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 1955 ஏப்ரல் 16 இல் வேதாந்த மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் (Bertrand Russell) தயாரித்த “அணு ஆயுதப் போர்த் தடுப்பு” விண்ணப்பத்தில் ஒன்பது விஞ்ஞானிகளுடன் தானும் கையெழுத்திட்டு ஒன்றாகக் கூக்குரல் எழுப்பினார்!  “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது!  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும்!  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு விஞ்ஞானிகளில் அமைதி மயவாதிகள் ஒருபுறம் அணு ஆயுதங்களை நிறுத்தம் செய்ய முற்படுகையில், அழிவு மயவாதிகள் மறுபுறம் ரகசியமாய் அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு வந்தார்கள் !

ஆக்கப் போவது அணு குண்டா ? அல்லது ஹைடிரஜன் குண்டா ?

1942 ஆம் ஆண்டு அமெரிக்க மன்ஹாட்டன் திட்டத்தில் மறைமுகமாகப் பணிசெய்த விஞ்ஞானிகள் முதலில் அணுப்பிளவுக் குண்டை [Fission Bomb] ஆக்குவதற்கு முயன்ற சமயத்தில் அணுப்பிணைவுக் குண்டையும் [Fusion Bomb] உண்டாக்க ஒரு சிலருக்கு ஆர்வம் எழுந்தது! அந்தப் பயங்கரப் படைப்பை மிக்க வெறியோடு நிறைவேற்றப் பல்லாண்டுகள் காத்துக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை, எட்வர்டு டெல்லர் [Edward Teller]! தீவிர அந்த வேட்கையை எட்வெர்டு டெல்லருக்கு முதலில் தூண்டி விட்டவர், என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi]! சிகாகோப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆராய்ச்சி அணு உலையை அமைத்து அணுக்கருத் தொடரியக்கம் புரிய ஃபெர்மியின் கீழ் டெல்லர் பணி செய்யும் போது அவர்களுக்கு ஹைடிரஜன் குண்டைப் பற்றி ஓர் எண்ணம் உதயமானது! ஆனால் ஆரம்பத்திலேயிருந்து எட்வெர்டு டெல்லரை அதைரியப் படுத்தி, முதலில் ஆக்கப் போவது அணுப்பிளவுக் குண்டு, வெப்ப அணுக்கருக் குண்டு [Thermo Nuclear Bomb] அல்ல என்று அதிருப்தி உண்டாக்கியவர், மன்ஹாட்டன் திட்ட அதிபதி ராபர்ட் ஓப்பன்ஹைமர்!  ஹைடிரஜன் குண்டுக்கு மறு பெயர் வெப்ப அணுக்கருக் குண்டு! சூப்பர் பாம் [Super Bomb], ஹெச் பாம் [H Bomb] எல்லாம் ஒன்றுதான்! அடுத்து 1947-1952 ஆண்டுகளில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதியாக [Chairman, Atomic Energy Commission] இருந்த சமயத்திலும் டெல்லர் மறுமுறை உயிர்ப்பித்த ஹைடிரஜன் குண்டு திட்டத்தை அங்கீகரிக்காது ஒதுக்கித் தள்ளினார்!

இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே ஊமைப் போர் [Cold War] மூண்டு பெரும் அளவில் வலுத்தது ! 1949 செப்டம்பரில் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டைச் சோதனை செய்ததைக் கேட்டு, அதை எதிர்பாராத அமெரிக்கா அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தது! அமெரிக்காவின் மித மிஞ்சிய அணு ஆயுதப் பேராற்றல் சமமாகிப் போனதால், உடனே ஜனாதிபதி ட்ரூமன் மறைமுகமாய் வெப்ப அணுக்கரு ஆயுதம் உருவாக, எட்வெர்டு டெல்லருக்குப் பச்சைக் கொடி காட்டினார்! அதற்காகக் காத்துக் கொண்டிருந்த எட்வெர்டு டெல்லர், ரஷ்யாவுக்குப் பயம் உண்டாக்க ஓர் ராட்சத குண்டை உருவாக்கி, அமெரிக்காவை உலக நாடுகளில் உச்ச வலுத் தேசமாக ஆக்க உறுதி எடுத்துக் கொண்டார்! அந்த முயற்சியில் வெற்றி பெற்று 1952 நவம்பர் முதல் நாள் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் முதல் ஹைடிரஜன் குண்டு வெடித்துச் சோதிக்கப் பட்டது! ஏட்டிக்குப் போட்டியாக அடுத்து சோவித் ரஷ்யாவும் எட்டு மாதங்களுக்குள், 1953 ஆகஸ்டு 12 ஆம் தேதி ரஷ்ய விஞ்ஞானி பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] மூலம் உருவாக்கி, முதல் வெப்ப அணுக்கரு ஆயுத வெடிப்பச் சோதனையை வெற்றிகரமாகச் செய்து காட்டியது ! அந்த அணு ஆயுதப் பந்தயத்தைத் தொடர்ந்து 1957 இல் பிரிட்டன், 1967 இல் சைனா, 1968 இல் பிரான்ஸ் தமது முதல் ஹைடிரஜன் குண்டுகளைச் சோதனை செய்து, அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஐம்பெரும் வல்லரசுகள் என்று பெயர் பெற்றன !  இப்போது அமெரிக்கா, ரஷ்யா, (யுக்ரேய்ன்), பிரிட்டன், பிரான்ஸ், சைனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய ஏழு நாடுகளும் சோதனைகளை நடத்தி உலகத்துக்கு அணு ஆயுத நாடுகளாய்த் தம்மை உறுதிப்படுத்தி உள்ளன.


அணு ஆயுதப் போர் மூன்றாவது உலகப் போராய் நிகழுமா ?

1945 இல் அமெரிக்கா ஜப்பானில் முதன்முதலாகப் போட்ட இரண்டு அணுக்குண்டுகளை ஒருபோக்குத் தாக்குதலாகத்தான் கருத வேண்டும்.  பதிலுக்குத் தாக்க ஜப்பானிடம் அப்போது அணு ஆயுதங்கள் கிடையா.  இதுவரை உலகம் இருதரப்பு அணு ஆயுத யுத்தத்தைக் கண்டதில்லை ! ஆனால் இப்போது அணு ஆயுதமுள்ள ஏழு நாடுகள் இரண்டுக்குள் நட்புறவு குன்றி அப்படி ஓர் இருபுற யுத்தம் நிகழ்ந்து அணு ஆயுதங்கள் பயன்பட்டால் பயங்கரச் சிதைவுகள், அழிவுகள், கதிரியக்கப் பொழிவுகள் ஏற்படும்.  அவ்விரு நாடுகளுக்குச் சேதங்கள் நேருவதோடு அண்டை நாடுகளும் பாதிப்படையும்.  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டால் இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டா என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து.  காரணம் இரண்டு நாடுகள் வேறானாலும் எலும்பும் சதையும் போல் நிலத்தாலும், நீராலும், இனத்தாலும், மதத்தாலும் ஒன்றாகச் சேர்ந்துள்ளன.  போர் மூண்டாலும் இரண்டு நாடுகளும் அணுவியல் தொழிற்கூடங்களை ஒன்றை ஒன்று தாக்கக் கூடாதென்று வாக்கு மொழிகள் எழுத்து மூலம் கூறியுள்ளன !  ஆனால் பாகிஸ்தானில் தற்போதுள்ள கொந்தளிப்பு நிலையில் எந்த மூர்க்கர் குழு நாட்டைப் பிடித்து ஆட்டப் போகிறது என்பது பெரும் ஐயப்பாட்டில் இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிப்பது கடினம்.

எத்தனை விதமான அணு ஆயுதங்கள் உள்ளன ?

இரண்டு விதமான அணு ஆயுதங்கள் இதுவரைச் சோதனைக்குள்ளாகி ஆக்கப் பட்டுள்ளன.  நியூட்ரான் குண்டுகள் (Neutron Bombs) ஒருவித அணு ஆயுதமாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.  அணுப்பிளவு ஆயுதங்கள் (Fission Weapons), அணுப்பிணைவு ஆயுதங்கள் (Fusion Weapons) என்று இருபெரும் பிரிவில் பல்வேறு ஆற்றலைக் கொண்ட அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டு பதுக்கி வைக்கப் பட்டுள்ளன !  கடந்த அறுபது ஆண்டுகளாக உருவான அணு ஆயுதங்கள் யாவும் ஓய்வாகத் தூங்கிக் கொண்டிருப்பதால் துருப்பிடித்து இப்போது முடக்கத்தில் தளர்ந்து போய்க் கிடக்கின்றன !  அவை யாவும் தூசி துடைக்கப் பட்டுப் புதுப்பிக்கப் படவேண்டும் !  அல்லது தற்போதைய கணினி யுகத் தொழில்நுட்பம் புகுத்துப்பட்டு புது விதமாக மாற்றப் பட வேண்டும்.
பல பில்லியன் டாலர் மதிப்பில் படைப்பான பழைய அணு ஆயுதங்களை இப்போது ஏவினால் அவை பகைவரை நோக்கித் தாக்குமா அல்லது சண்டி மாடுபோல் படுத்துக் கொள்ளுமா என்று எழுப்பி விட்டால்தான் தெரியும் !

அணுப்பிளவு ஆயுதங்களில் (அணுக்குண்டு) எரிசக்தியாக யுரேனியம் -235, புளுடோனியம் -239 ஆகிய கன உலோகங்கள் பயன்படுகின்றன.  மாறாக அணுப்பிணைவு ஆயுதங்களில் (ஹைடிரஜன் குண்டு) எளிய வாயுக்களான டியூடிரியம், டிரிடியம் (ஹைடிரஜன் ஏகமூலங்கள் ) (Deuterium & Tritium -Hydrogen Isotopes) உபயோகம் ஆகின்றன.  டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து சக்தி உண்டாக்குவதற்குச் சூரியன் போல் பல மில்லியன் டிகிரி உஷ்ணம் தேவைப் படுகிறது.  அந்த உஷ்ணத்தை உண்டாக்க ஒரு சிறு அணுப்பிளவு இயக்கம் முதலில் ஹைடிரஜன் குண்டில் தூண்டப் படுகிறது.  அவ்விதம் முதல் உந்து யுரேனிய வெடிப்பில் உண்டாகும் பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து வெடிப்பு சக்தியை வெளியேற்றுகிறது.  பொதுவாக அணுப்பிணைவு ஆயுதம் அணு ஆயுதத்தை விட சுமார் ஆயிரம் மடங்கு அழிவு சக்தியை வெளியாக்கும் !  நியூட்ரான் குண்டு அணுக்குண்டு ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு பாதகம் விளைவிக்க வல்லது.

பல்வேறு டன் டியென்டி ஆற்றல் கொண்ட அணு ஆயுதங்கள்.

அமெரிக்கா ஹிரோஷிமாவில் போட்ட யுரேனியம் அணுக்குண்டு 15 கிலோ டன் டியென்டி ஆற்றலும், நாகசாக்கியில் போட்ட புளுடோனியம் அணுக்குண்டு 21 கிலோ டன் டியென்டி ஆற்றலும் கொண்டவை.  அணு ஆயுதங்களின் வெடிப்புப் பரிமாணம் டியென்டி அளவீட்டில் [(TNT) -Trinitrotoluene -CH3C6H2(NO2)3  (A Powerful High Explosive)] கிலோ டன் அல்லது மெகா டன் எண்ணிக்கையில் குறிப்பிடப் படுகிறது !  கிலோ டன், மெகா டன் டியென்டி என்று அளவீடு செய்யும் போது அணு ஆயுதங்களின் எடையைக் குறிப்பிடாது அவற்றின் வெடி ஆற்றலை ஒரு டியென்டி இராசயன வெடிக்கு ஒப்பிடப் படுகிறது.  ஒரு கிலோ டன் அணு ஆயுதம் 1000 டன் டியென்டி ஆற்றல் வெடிக்குச் சமம்.  ஒரு மெகா டன் அணு ஆயுதம் ஒரு மில்லியன் டன் டியென்டி ஆற்றல் வெடிக்கு இணையாகும்.  தற்போது வெப்ப அணுக்கரு ஆயுதம் (Thermonuclear Weapon OR Hydrogen Bomb) ஒன்று 25 மெகா டன் டியென்டி வெடி ஆற்றல் கொண்டதாக உள்ளது.  மேலும் இப்போது 50 மெகா டன் டியென்டி வெடியாற்றல் உள்ள அணு ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றன.  தற்போது பாதி உலகைக் கடந்து செல்லும் கட்டளை ஏவு கணைகளில் (Guided Missiles) அணுத்தாக்கு ஆயுதங்களை (Nuclear Strategic Weapons) ஏந்திக் கொண்டோ அல்லது ஆகாய விமானங்களிலிருந்து விடுவித்தோ நகரங்கள், தொழிற்துறை மையங்கள், இராணுவத் தளங்கள் ஆகியவை தகர்க்கப்படத் திட்டமிடப் படுகின்றன.

Target Hiroshima Nagasaki Tokyo Fire Raid Average of 93
Attacks on Cities
Dead/Missing 70,000-80,000 35,000-40,000 83,000 1,850
Wounded 70,000 40,000 102,000 1,830
Population Density 35,000 per sq mile 65,000 per sq mile 130,000 per sq mile ?
Total Casualties 140,000-150,000 75,000-80,000 185,000 3,680
Area Destroyed 4.7 sq mile 1.8 sq mile 15.8 sq mile 1.8 sq mile
Attacking Platform 1 B-29 1 B-29 334 B-29s B-29s
Weapon(s) ‘Little Boy’ 15 kT

(15,000 tons of TNT)

‘Fat Man’ 21 kT

(21,000 tons of TNT)

1,667 tons 1,129 tons

அணு ஆயுத வெடிப்புகளில் நேரும் அகோர விளைவுகள்

1945 இல் அமெரிக்க போட்ட “லிட்டில் பாய்” அணுக்குண்டு ஹிரோஷிமா நகரை முற்றிலும் தகர்த்தது.  அடுத்துப் போட்ட “·பாட் மான்” அணுக்குண்டில் நாகசாக்கி நகரம் தரைமட்டம் ஆனது.  இவ்விரு நகரங்களில் ஏற்பட்ட விளைவுகளும், கதிர்வீச்சுக் காயங்கள், மரணங்கள், கதிரியக்க பொழிவுகளின் தீவிரம், நீண்ட கால விளைவுகள் அனைத்தும் மாதிரிப் பாடங்களாய் உலக நாடுகளுக்கு அறிவைப் புகட்டுகின்றன.  ஆயுதங்களின் கிலோ டன் டியென்டி, மெகா டன் டியென்டி வெடிப்பு ஆற்றலுக்கு ஏற்ப விளைவுகளின் தீவிரம் குறையவோ கூடவோ செய்கிறது.

1.  அணுக்குண்டு வெடிப்பு அலைகள் (Bomb Blast):

அணு ஆயுத வெடிப்பின் போது வெளியேறும் ஏராளமான வெப்ப அலைச்சக்தி சூழ்வெளிக் காற்றை அதிவிரைவில் சூடாக்குகிறது.  வெப்ப வாயு விரைவாக விரிவாகிப் பாய்ந்து பரவும் அதிர்ச்சி அலையாகத் தாக்குகிறது.  இவ்விதம் வெளியாவது பாதி அளவு வெடிப்புச் சக்தி.  அந்த விளைவில் குண்டு வீழ்ந்த இடத்துக்கு நெருங்கிய கட்டடங்கள் தரை மட்டமாக்கப் பட்டுப் பல மைல் தூரம் வீடுகள் தகர்ந்து பொடியாகும் !  அத்துடன் போட்ட இடத்தில் பெருங்குழி ஒன்று தோண்டப்படும்.

2.  வெப்ப சக்தி வெளியேற்றம் (Heat Wave Spread):

அணு ஆயுத வெடிப்பால் ஒரு மில்லியன் டிகிரி உஷ்ணமுடைய ஒரு பெரும் தீக்கோளம் உண்டாகும்.  அந்தத் தீப்பிழம்பில் தகர்க்கப் படாத வீடுகள், கட்டங்கள் பற்றிக் கொண்டெரியும்.  வெப்ப வெளியேற்றம் முழு ஆற்றலில் மூன்றில் ஒரு பங்காக கணிக்கப் படுகிறது.  இந்த பயங்கரத் தீப்பிழம்பே ஒரு பெரு குடைக் காளான் முகில்போல் (Huge Mushroom Cloud) உயரே விரிந்து செல்கிறது.

3.  கதிர்வீச்சு & கதிரடிப்பு (Direct Radiation Dose):

வெப்ப வெடிப்போடு அதிதீவிரக் கதிர்வீச்சு எல்லாத் திசைகளிலும் பாய்ந்து உயிரனங்களைத் தாக்குகிறது.  அதில் முதலாக மோதும் நியூட்ரான்கள், காமாக் கதிர்களைத் “துரிதக் கதிர்வீச்சு”  (Prompt Radiation – Mostly Neutrons & Gamma Rays) என்று குறிப்பிடப் படுகிறது.  அதிதீவிரக் கதிரடிகள் (High Amount of Radiation Dose)  மனிதரையும், விலங்குகளையும் உடனே அல்லது சில தினங்களில் கொன்றுவிடும் !  குறைந்த அளவு கதிரடிப்புகள் கதிர் நோய்களை உண்டாக்கி மெதுவாகக் கொல்லும்.  பேரளவு கதிர்வீச்சுக் கதிரடி புற்றுநோய்களை (Cancer) உண்டாக்கும்.

4.  தாமதக் கதிரெழுச்சி விளைவுகள் (Delayed Radiation Effects) :

அணுப்பிளவு விளைவுகளால் பின்னெழும் கதிரியக்கப் பாதிப்புகள் மாந்தருக்கு நீண்ட காலம் கேடு தருபவை.  அக்கொடிய பாதிப்புகள் அணுப்பிளவு மூலகங்களின் “அரை ஆயுளைப்” (Half Life) பொருத்தவை.  அரை ஆயுள் என்பது கதிரியக்கத் தேய்வு முறையில் நிலையற்ற மூலகம் (Unstable Elements due to Radioactive Decay) படிப்படியாகத் தேய்ந்து நிறை பாதியாகும் காலத்தைக் குறிப்பது.  சீக்கிரமாகத் தேயும் நிலையற்ற மூலகம் சிறிது காலம் உயிரினத்தைப் பாதிக்கும்.  மெதுவாகத் தேயும் நிலையற்ற மூலகந்தான் நீண்ட காலம் உயிரினத்துக்குத் தொல்லை கொடுப்பது.  இந்த கதிர்வீச்சு வாயு மூலகங்கள் சூழ்வெளிக் காற்றில் பல நாடுகளுக்கு பயணம் செய்து மக்களைப் பாதிக்கின்றன.

5.  கதிரியக்கப் பொழிவுகள் (Radioactive Fallouts):

இறுதியாக நூற்றுக் கணக்கான மைல் காற்றில் கொண்டு செல்லப்பட்டு இந்த கதிரியக்கத் துணுக்குகள்தான் பொழிவுகளாகப் பூமியில் நிரந்தரமாகப் படிந்து விடுகின்றன.  நீண்ட அரை ஆயுள் உடைய மூலகத் துணுக்குகள் பூமியில் தங்கி நெடுங்காலம் மனித இனத்துக்குத் தொல்லைகள் அளிக்கின்றன.  அவையே நிலவளம், நீர்வளம், சூழ்வெளியைத் தீண்டி பல ஆண்டுகளுக்கு நாசம் புரிகின்றன.

6.  விண்வெளிப் பாதிப்புகள் (Effects in Space):

அணு ஆயுதச் சூழ்வெளிப் பாதிப்புகள் குண்டு போடும் போது எந்த உயரத்தில் வெடிக்கிறது என்னும் மேல்மட்டத்தைப் பொருத்தது.  அதிர்ச்சி அலைகளைப் பரப்பப் போதிய வாயு இல்லாமல் வெறும் கதிர்வீச்சுத் தாக்குதலே பெரும்பான்மையாக விளைந்திடும்.  வெப்ப சக்தி பரவிச் சென்று தீ மூட்டும் நிகழ்ச்சிகள் குன்றும்.  பொதுவாக நியூட்ரான், காமாக் கதிர்களின் தீங்கு மிகைப்படும்.

7.  மின்காந்த அதிர்வு விளைவுகள் (Electromagnetic Pulse Burst):

அணு ஆயுத வெடிப்பிலே மிகவும் விந்தையான விளைவு :  ஒரு பெரும் மின்காந்தத் துடிப்பு (Production of an Electromagnetic Pulse – A Powerful Burst of Electric Current) உண்டாவது !  கதிர்வீச்சில் பாய்ந்து செல்லும் காமாக் கதிர்கள் சூழ்வெளி வாயுவோடுச் சேரும் போது அவ்வித மின்காந்தத் துடிப்பு ஏற்படுகிறது !  அந்த மின்னோட்டம் மின்சார, மின்னியல் சாதனங்களை – கணினிகள், மின்சக்தி நிலையங்கள், தொலைக் கட்சி நிலையங்கள், ரேடியோ தொடர்புகள் போன்றவற்றைப் பெரும் அளவில் பாதிக்கும்.

(கட்டுரை தொடரும்)

*****************************

தகவல் :

Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

2.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

3.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

4.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

5.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads (November 2007)

6.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

7.  Neutron Bombs – Wikipedia Report (December 9, 2009)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 10, 2009